Last Updated : 08 Feb, 2017 11:30 AM

 

Published : 08 Feb 2017 11:30 AM
Last Updated : 08 Feb 2017 11:30 AM

தினுசு தினுசா விளையாட்டு: வெயிலா, நிழலா?

குழந்தைகள் விளையாட ஏற்ற நேரம் எது? பெரும்பாலும் சாயங்கால நேரம்தான். அதனால்தான் மகாகவி பாரதியும், “மாலை முழுதும் விளையாட்டு” என்று பாடியிருக்கிறார் போலும். பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்ததும், குழந்தைகள் சற்று நேரம் ஓய்வாக இருப்பார்கள். அப்போது அம்மாக்கள் தரும் தின்பண்டங்களைச் சாப்பிட்டுவிட்டு, விளையாடத் தெருவுக்கு வந்து விடுவார்கள்.

இப்படியான சாயங்கால நேர விளையாடுவதற்கென்றே சில விளையாட்டுகள் இருக்கின்றன. அதில் ஒன்றைத்தான் இந்த வாரம் நாம் விளையாடப் போகிறோம். அந்த விளையாட்டின் பெயர் ‘வெயிலா நிழலா?’

இது 20 முதல் 30 குழந்தைகள் வரை சேர்ந்து விளையாடக்கூடிய விளையாட்டு. இந்த விளையாட்டை விளையாடும் இடத்தில் வெளிச்சமும் இருக்க வேண்டும்; இருட்டும் இருக்க வேண்டும். இதில் ‘வெயில்’என்று சொல்வது வெளிச்சத்தையும், ‘நிழல்’ என்று சொல்வது இருட்டையும் குறிக்கும்.

இந்த விளையாட்டை விளையாட முதல் போட்டியாளராக ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும். விளையாடப் போகும் குழந்தைகள் அனைவரையும் வட்டமாக நிற்க வைத்து, ‘சாட், பூட், திரி’போட வேண்டும். அதன் மூலமாக முதல் போட்டியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

முதல் போட்டியாளரைத் தேர்ந்தெடுத்தாகிவிட்டதா? அப்புறமென்ன, விளையாட்டைத் தொடங்குவோமா?

முதலில் விளையாடும் குழந்தைகள் அனைவரும் விளையாடும் திடலில் மொத்தமாக நில்லுங்கள்.

தனியே நிற்கும் முதல் போட்டியாளரைப் பார்த்து, அனைவரும் ஒரே குரலில் மொத்தமாக இப்படிக் கேளுங்கள்:

“ஊருக்குப் போயி வந்த மச்சானே சொல்லு… வெயிலா..? நிழலா..?”

உடனே, முதல் போட்டியாளர் ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக, ‘நிழல்’என்று சொன்னால், அதற்கு ‘இருட்டு’என்று அர்த்தம் அல்லவா? உடனே விளையாடும் குழந்தைகள் அதற்கு நேர்மாறாக வெளிச்சமான பகுதியில் ஓடிப்போய்க் கும்பலாக நின்றுகொள்ளுங்கள்.

ஒருவேளை, முதல் போட்டியாளர் ‘வெயில்’ என்று சொன்னால், உடனே அனைவரும் ‘இருட்டான’பகுதிக்குச் சென்று நின்றுகொள்ளுங்கள்.

இப்படி நீங்கள் ஓடும்போது முதல் போட்டியாளர் வேகமாய் ஓடிச்சென்று, யாரையாவது தொட முயற்சிப்பார்.

இருட்டான பகுதியில் நிற்பதற்குப் பதிலாக, வெளிச்சமான பகுதியில் மாறி நின்றாலோ அல்லது இருட்டான பகுதியில் நிற்க ஓடும்போது, முதல் போட்டியாளர் தொட்டுவிட்டாலோ அவர் ‘அவுட்’.

இப்போது ‘அவுட்’ஆனவர் போட்டியாளராக மாறி, மீண்டும் விளையாட்டைத் தொடர வேண்டியதுதான்.

வெளிச்சமும் இருட்டும் மாறிமாறி வருவதைப்போல, குழந்தைகளிடமிருந்தும் உற்சாகமான குரலொலிகள் இந்த விளையாட்டில் விட்டுவிட்டுக் கேட்கும். உங்களுக்கும் அது கேட்கிறதா?!

(இன்னும் விளையாடலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x