Last Updated : 12 Mar, 2014 12:00 AM

 

Published : 12 Mar 2014 12:00 AM
Last Updated : 12 Mar 2014 12:00 AM

ரெயின் கோட் ரகசியம்

பள்ளிக்குக் கிளம்பியவுடன் மழை வந்தால் அம்மா என்ன செய்வார்? குடையைக் கொடுத்து அனுப்புவார். இல்லாவிட்டால் ரெயின் கோட் மாட்டிவிட்டு அனுப்பி வைப்பார். மழைத் துளிகளில் இருந்து நம் உடலைக் காக்கும் இந்த ரெயின் கோட் எப்படி வந்தது?

ரெயின் கோட் கண்டுபிடிப்புக்கு முன்னோடியாக இருந்தவர் ஃபிரான்சுவா ஃப்ரெஷ்நியூ என்ற பிரெஞ்சு இன்ஜினியர் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், நீர் புகாத துணியைக் கண்டுபிடித்து, பெரிய அளவில் ரெயின் கோட் உற்பத்தியைத் தொடங்கியவர் சார்லஸ் மேக்கின்டாஷ் என்ற ஆங்கிலேயர். இவர் ரெயின் கோட்டை எப்படித் தயாரித்தார்?

ரொம்ப சிம்பிள். இரண்டு காட்டன் துணிகளுக்கு நடுவே ஒரு மெல்லிய ரப்பர் வைத்துத் தைத்தார். அந்த ரப்பரை மென்மையாக்கக் கொஞ்சம் டர்பன்டைனையும் கலந்தார். பின்னர் ரெயின் கோட்டாகத் தைக்க டெய்லரிடம் கொடுத்தார்.

அவ்வளவுதான். சட்டை போல டெய்லர் தைத்துக் கொடுத்த வுடன் தயாராகிவிட்டது ரெயின்கோட். இதுவே மேக்ஸ் என்றழைக்கப்படும் மேக்கின்டாஷ் ரெயின் கோட் வரலாறு.

மேக்கின்டாஷ் உடைகள், மழையில் இருந்து உடலைக் காத்தன. ஆனால், மழை நின்று வெயில் அடித்தால் அவ்வளவுதான். உள்ளே வியர்த்துக் கொட்டும். ரப்பர் இளகி உடலோடு ஒட்டும். ரப்பரின் வாசனை வேறு அருகில் இருக்கிறவர்களைப் பாடாய்ப்படுத்தும்.

இந்தப் பிரச்சினைகளை ரப்பரைக் கண்டுபிடித்த சார்லஸ் குட்இயர்தான் பின்னர் தீர்த்து வைத்தார். இன்று தயாரிக்கப்படும் பெரும்பாலான மழை உடைகள் வேதிப் பொருட்கள் கலந்தவையே. இந்தக் காலத்தில் கோட் தயாரிக்க செயற்கை ரப்பரும் பயன்படுகிறது.

ரெயின் கோட் இருந்தாலும், மழையில் நனைவது உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்தானே?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x