Last Updated : 11 Jan, 2017 11:04 AM

 

Published : 11 Jan 2017 11:04 AM
Last Updated : 11 Jan 2017 11:04 AM

தினுசு தினுசா விளையாட்டு: மேலே பந்து கீழே பந்து

“விளையாட்டு வினையாகிப் போச்சு” என்றொரு சொல் வழக்கு நம்மிடையே உண்டு. விளையாடப் போகும் பிள்ளைகளை, சிலர் இதைச் சொல்லித்தான் எச்சரிப்பார்கள். இது விளையாட்டுக்கு மட்டுமே சொல்லப்பட்டது என்று நாம் நினைக்கிறோம். அது தவறு.

நாம் செய்ய நினைக்கும் எந்த ஒரு செயலையும் அக்கறையும் ஈடுபாடு இல்லாமல் செய்யக் கூடாது. ‘சும்மா, விளையாட்டுக்குத்தானே’ என்று நினைத்து ஏனோதானோவென்று செய்யாமல், தெளிவும் புரிதலும் ஈடுபாடும் இருப்பது ரொம்ப முக்கியம்.

விளையாட்டாகவே இருந்தாலும், அதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக ஓடுவது, குதிப்பது, தாண்டுவது போன்ற விளையாட்டுகளை ரொம்ப கவனமாக விளையாட வேண்டும். கவனமில்லாமல் விளையாடி, எதுவும் நமக்கு ‘வினை’யாகி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காகச் சொல்லப்பட்டதுதான் இந்தச் சொல் வழக்கு.

சரி…சரி…, இந்த வாரம் என்ன விளையாட்டு, அதைச் சொல்லுங்கள் என்கிறீர்களா? இந்த வார விளையாட்டின் பெயர், ‘மேலே பந்து, கீழே பந்து’.

இந்த விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். ஆனால், ஒவ்வொரு குழுவிலும் சம எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 10 பேர் வரை இருக்கலாம்.

30 பேர்கள் இருக்கிறார்கள் என்றால், மூன்று குழுக்களாகப் பிரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் 10 பேர். அவர்களை ‘சாட் பூ திரி..!’, ‘உத்திப் பிரித்தல்’ அல்லது ‘பூவா… தலையா…!’ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் மூலமாகப் பிரித்துக் கொள்ளலாம்.

அனைவரும் குழுக்களாகப் பிரிந்துவிட்டீர்களா? இப்போது மூன்று குழுவினரும் ஒரே நேர்க்கோட்டில் மூன்று வரிசையாக நில்லுங்கள். ஒருவர் பின் ஒருவராக, சம அளவில் இடைவெளிவிட்டு (ஒவ்வொருக்குமிடையே நான்கைந்து அடி இடைவெளி இருக்கும்படி) நில்லுங்கள்.

மூன்று குழுவிலும் முதலில் நிற்பவர் கையில் சற்றே பெரிய பந்து ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள்.

எல்லோரும் தயாராகி விட்டார்கள். இனி, விளையாட்டைத் தொடங்கலாமா?

முதலில் நிற்பவர் தனது கையிலுள்ள பந்தை, திரும்பிப் பார்க்காமல், அப்படியே தலைக்கு மேலாகப் பின்னால் இருப்பவருக்கு வீசுங்கள்.

அந்தப் பந்தைத் தவறவிடாமல் பிடிக்கும் இரண்டாவது நபர், தனக்குப் பின்னால் இருப்பவருக்கு, அந்தப் பந்தைக் குனிந்தபடி, இரண்டு கால்களுக்குமிடையே வீசுங்கள்.

அந்தப் பந்தைப் பிடிக்கும் மூன்றாவது நபர், தலைக்கு மேலும், அடுத்தவர் கால்களுக்கு இடையேயும் என அப்படியே மாற்றிமாற்றிப் பந்தை வீசுங்கள். இப்படியாகப் பந்து கடைசியாக இருப்பவர் கையில் கிடைக்கும். பின்னர் அவர் வேகமாக முன்னே ஓடி வந்து, முதலாவதாக நிற்க வேண்டும். அந்த வரிசையில் உள்ளவர்கள் அப்படியே பின்னோக்கி நகருங்கள்.

இப்போது முதலாவதாக வந்தவர் தலைக்கு மேல், அடுத்தவர் கால்களுக்கிடையே மீண்டும் பந்தை வீசுங்கள். இப்போது கடைசியாகப் பந்தைப் பெற்றவர், மீண்டும் முதலாவதாக வர என ஆட்டம் தொடரும்.

இதில், பத்து சுற்றுகள். எல்லாச் சுற்றுகளும் முடிந்தும், ஆட்டத்தின் தொடக்கத்தில் யார் முதலாவதாக நின்றார்களோ, அந்த நபரே மீண்டும் முதல் நபராக வந்து எந்தக் குழுவில் நிற்கிறார்களோ, அந்தக் குழுவே வெற்றி பெற்ற குழு. முதல் குழுவின் வெற்றிக்குப் பிறகு, அடுத்துள்ள இரு குழுக்களுக்கிடையே இந்த விளையாட்டைத் தொடரும். இதில் இரண்டாவது வெற்றிக் குழுவையும் தேர்வு செய்யலாம்.

இந்த விளையாட்டு ஜாலியாக இருந்தாலும், கவனத்துடன் விளையாடினால்தான் வெற்றி கிடைக்கும்.

(இன்னும் விளையாடலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x