Last Updated : 28 Sep, 2016 11:39 AM

 

Published : 28 Sep 2016 11:39 AM
Last Updated : 28 Sep 2016 11:39 AM

தினுசு தினுசா விளையாட்டு: கிச்சு கிச்சு தாம்பூலம்!

குழந்தைகளே! “விளையாடலாம் வாங்க” என்று சொன்னவுடனே உற்சாகமாகியிருப்பீர்கள் இல்லையா? உங்க வீட்டில் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பாவிடம், அவர்கள் சின்ன வயதில் விளையாடிய விளையாட்டுகளைப் பத்தி கேட்டீர்களா? நிச்சயம் கேட்டிருப்பீர்கள். சரி, இந்த வாரம் நாம் விளையாடப் போகும் விளையாட்டின் பெயர் ‘கிச்சு கிச்சு தாம்பூலம்’.

எப்படி விளையாடுவது?

இந்த விளையாட்டை விளையாட இரண்டு பேர் போதும். விளையாடப் போற இரண்டு பேரும் எதிரெதிரே உட்கார வேண்டும். அவர்களின் முன்பக்கத்தில் ஒரு அடி அல்லது ஒண்ணே கால் அடி நீளத்துக்கு மணலை நீளவாக்கில் குவித்து வைக்க வேண்டும். இருவரில் யாராவது ஒருவர், கையிலே இரண்டு இஞ்ச் நீளமுள்ள சிறிய குச்சி ஒன்றௌ எடுத்துக்கொள்ள வேண்டும்.

‘கிச்சு கிச்சு தாம்பூலம்…

கிய்ய கிய்ய தாம்பூலம்..

கிச்சு கிச்சு தாம்பூலம்…

கிய்ய கிய்ய தாம்பூலம்..!’

அப்படின்னு திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே, வலது கையின் கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரலின் நுனியில் பிடித்திருக்கும் குச்சியை, இடது கையாலே மறைந்துக்கொண்டு, எதிரே குவித்திருக்கும் மணலுக்குள்ளே மறைத்து வைக்க வேண்டும்.

அதுவும் எப்படித் தெரியுமா? டக்கென ஓர் இடத்தில மறைத்து வைக்கக் கூடாது. குச்சியை அப்படியே மண்ணுக்குள் முன்னும் பின்னும் கொண்டுசெல்வது போல பாவனை காட்டிக்கொண்டே, ஏதாவது ஓர் இடத்தில் வெளியே தெரியாதபடி மறைத்து வைக்க வேண்டும்.

இப்போது, எதிரில் உட்கார்ந்திருக்கும் இன்னொருவர், அந்தக் குச்சி எங்கே ஒளிந்திருக்கிறது என ஊகம் செய்ய வேண்டும். வலது கை, இடது கை விரல்களை பின்னியபடி, சரியா அந்தக் குச்சி இருக்கும் மணல் குவியல் மேல கையை வைத்து மூடிக்கொள்ள வேண்டும்.

கையை வைத்து மூடிய இடத்தில் அந்தக் குச்சி இல்லை என்றால், மீண்டும் அந்தக் குச்சியை வைத்தவரே திரும்ப எடுத்து, மறுபடியும் விளையாட வேண்டும். கைகளை வைத்த இடத்தில் குச்சி இருந்தால், விளையாடியவர் ‘அவுட்’. அதாவது மாட்டிக்கொண்டார் என்று அர்த்தம்.

அடுத்து என்ன செய்ய வேண்டும்? ம்…, கொஞ்சம் பொறுங்களேன் சொல்கிறேன்.

யார் குச்சியை மறைத்து வைத்து ‘அவுட்’ஆக்கினாரோ, அவர்களின் இரண்டு கையையும் சேர்த்து முன்னாடி நீட்டச் சொல்லி, அந்தக் கைகளில் மண்ணைக் குவிக்க வேண்டும். அதன் நடுவில் அந்தக் குச்சியைச் செருக வேண்டும்.

அப்புறம், அவர்களின் கண்ணைப் பொத்திக் கூட்டிக்கொண்டு போய், எங்கேயாவது ஒரு மூலையிலே, ரகசியமான இடத்தில் மண்ணோடு குச்சியையும் சேர்த்து அப்படியே குமித்து வைக்க வேண்டும். கண்களைத் திறக்காமல் மீண்டும் பழைய இடத்துக்கே அவர்களை கூட்டி வந்துவிட வேண்டும். பிறகு, கண்களைத் திறந்துவிட்டு, “இப்ப அந்தக் குச்சி எங்கேயிருக்கு? கண்டுபிடி பார்ப்போம்?” என்று சொல்ல வேண்டும்.

குச்சியை வைத்த இடத்தைச் சரியாக அவர் கண்டுபிடித்தால், இன்னொருவர் மணலில் குச்சியை மறைத்து வைத்து மீண்டும் இந்த விளையாட்டைத் தொடரலாம்.

‘கிச்சு கிச்சு தாம்பூலம்..!’

அட! இப்பவே எல்லாரும் விளையாட தயாராகிவிட்டீர்களா?

(இன்னும் விளையாடலாம்)

வாசகர்களே, அந்தக் காலச் சிறுவர், சிறுமிகள் விளையாட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேறு ஏதாவது பெயரில், இன்னும் சில மாறுதல்களுடன் சேர்ந்து விளையாடப்பட்டிருக்கலாம். அதிலுள்ள சிறப்பான அம்சங்களை எங்களுக்குக் கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள். நீங்கள் எழுதும் அம்சங்கள் ‘மாயா பஜாரி’ல் இடம்பெறும். பள்ளி ஆசிரியர்களும்கூட எழுதி அனுப்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x