Published : 25 Dec 2013 12:00 AM
Last Updated : 25 Dec 2013 12:00 AM

ஜிங்கிள் பெல்ஸ்...ஜிங்கிள் பெல்ஸ்!

பஞ்சு போன்ற தலைமுடி. தாடியும், மீசையும்கூட அதேபோல வெண்மையாக இருக்கும். வெள்ளை நிற காலர் வைத்த சிகப்பு கவுன், சிகப்பு பேண்ட், இடுப்பில் கறுப்பு நிற பெல்ட். எல்லாவற்றுக்கும் மேலாக பரிசுகள் நிறைந்த தோள்பை. யாரென்று தெரிகிறதா? கிறிஸ்துமஸ் தாத்தா என்று குட்டிக் குழந்தையும் சொல்லிவிடும்.

குழந்தைகளுக்குப் பரிசுகளும், சாக்லெட்டுகளும் அள்ளி வழங்கும் இந்த கிறிஸ்துமஸ் தாத்தா யார்? இதற்குப் பல கதைகள் உண்டு. கி.பி. நான்காம் நூற்றாண்டில் அன்றைய கிரேக்க நாட்டில் செயிண்ட் நிக்கோலஸ் என்னும் பாதிரியார் இருந்தாராம். ஏழைகளுக்கு உதவுவது என்றால் அவருக்கு ரொம்பப் பிடிக்குமாம். எப்போதும் யாருக்காவது பரிசுகள் கொடுத்தபடி இருப்பாராம். நரைத்த தாடி, மீசையுடன் இருக்கும் இவர்தான் ஆரம்ப நாட்களில் முழுக்க முழுக்க இறைப் பணியில் ஈடுபட்ட பாதிரியார் என்று சொல்கிறார்கள்.

ஜெர்மனியில் இதேபோல ஆனால் இன்னொரு கதை உண்டு. அவர்கள் பனிக்காலத்தில் ‘யூல்’ என்கிற விழாவைக் கொண்டாடுவார்கள். அந்தக் கொண்டாட்டத்தின்போது எட்டுச் சக்கரங்கள் கொண்ட வண்டியில் அவர்களுடைய கடவுளான ஓடின் வானத்தில் பறந்துவந்து பரிசுகள் தருவார் என்று நம்பினார்கள். ஓடினும் கிட்டத்தட்ட செயிண்ட் நிக்கோலஸ் போலத்தான் தாடி, மீசையுடன் இருப்பார்.

இந்தக் கதைகளையும் உருவங்களையும் வைத்து, 1863ஆம் ஆண்டு தாமஸ் நாஸ்ட் என்கிற அமெரிக்க கார்டூனிஸ்ட், செயிண்ட் நிக்கோலஸ், ஓடின் இவர்களுடைய உருவங்களை இணைத்து அமெரிக்காவில் வெளியாகும் ‘ஹார்பர்ஸ் வீக்லி’ என்ற புத்தகத்தில் ஒரு கார்ட்டூன் வரைந்தார். அந்தப் படம்தான் தற்போது இருக்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவின் முன்னோடி.

1930ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் சிவப்பு நிறத்தில் உடையணிந்த கிறிஸ்துமஸ் தாத்தா பிரபலமானார். அவர், இந்த உலகத்தில் இருக்கும் அனைத்துக் குழந்தைகளையும் சுட்டிக் குழந்தைகள், சமத்துக் குழந்தைகள் என்று இரண்டு வகையாகப் பிரித்து, அவர்களுக்குப் பரிசுகள் வழங்குவாராம். பெரும்பாலும் பொம்மைகளும், சாக்லெட்டுகளும்தான் அவருடைய பரிசுப் பொருட்களாக இருக்கும். சேட்டை செய்யும் குழந்தைகளுக்கு அவர் சாக்லெட்டுக்குப் பதிலாக கரித்துண்டைக் கொடுத்து விளையாடுவார் என்றும் சொல்வார்கள்.

கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுகளோடு மட்டுமல்ல, பாடல்களோடும்தான் வருவார். மணிச்சத்தத்தை வைத்தே அவர் வந்துவிட்டதைக் குழந்தைகள் கண்டுபிடித்துவிடுவார்கள். ‘ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ்’ என்று அவர் ஆடிக்கொண்டே பாடுவதைக் குழந்தைகள் மிகவும் விரும்பி ரசிப்பார்கள். எப்போதும் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் இருப்பார் கிறிஸ்துமஸ் தாத்தா. அவருக்குக் கோபமே வராது. அவருக்குக் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கும் மேலாக, கொஞ்சமும் சோர்வடையாமல் அப்படியேதான் இருக்கிறார் கிறிஸ்துமஸ் தாத்தா. சில நாடுகளில் கையில் கைத்தடியுடனும், மூக்குக் கண்ணாடியுடனும் காட்சி தருவார்.

தாத்தாவின் பரிசு

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு முதல் நாள் இரவு, அதாவது டிசம்பர் 24ஆம் தேதி இரவுதான் இவருடைய பரிசு வழங்கும் வேலை தொடங்கும். அந்த ஒரு இரவுக்குள் அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசுகள் கொடுத்துவிடுவார். குழந்தைகளுக்கான பரிசுப் பொருட்களை அவருடைய தூதர்கள் வருடம் முழுக்க செய்துகொண்டே இருப்பார்களாம். அதை வண்டியில் போட்டு வானத்தில் இருந்து எடுத்துவருவதற்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் ஆட்கள் இருக்கிறார்கள். குழந்தைகளிடம் பரிசுகளைக் கொடுத்துவிட்டு, அவர்கள் தருகிற அன்பைப் பெற்றுச் செல்கிறார் கிறிஸ்துமஸ் தாத்தா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x