Last Updated : 12 Jun, 2019 10:57 AM

 

Published : 12 Jun 2019 10:57 AM
Last Updated : 12 Jun 2019 10:57 AM

கதை: இந்த வீடு வேண்டாம்

இரண்டு முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவருவதைப் பார்த்து, தாய்க் குருவியும் தந்தைக் குருவியும் மகிழ்ச்சியடைந்தன. பெரிய குருவிகள் வெளியே சென்று சிறு பூச்சிகள், தானியங்களைக் கொத்தி வந்து, குஞ்சுகளுக்கு உணவூட்டின.

குருவிக்குஞ்சுகளுக்குச் சில வாரங்களில் சிறகு முளைக்கத் தொடங்கியது. பெரிய குருவிகள் குருவிக்குஞ்சுகளுக்கு பறக்கக் கற்றுக் கொடுத்தன.

அம்மா குருவி குஞ்சுகளிடம், “குழந்தைகளே, உங்களால் இப்போது பறக்க முடியும் என்றாலும் இன்னும் கொஞ்ச காலம் சென்ற பிறகு, நீங்கள் தனியே பறந்து போகலாம். இரை தேடிக் கொள்ளலாம். அதுவரை பத்திரமாக இருங்கள்” என்று சொல்லிவிட்டு, ஆண் குருவியுடன் இரை தேட பறந்து சென்றது.

கூட்டுக்குள் இருந்த பெரிய குருவிக்குஞ்சு, “எத்தனை நாட்கள்தான் நாம் இந்தக் கூட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது? நமக்குத்தான் பறக்க முடியுமே! சற்று வெளியே போய்ப் பார்த்துவிட்டு வரலாம். அம்மா சொன்னதுபோல வெகுதூரம் போக வேண்டாம்” என்று சொன்னது.

அதைக் கேட்டதும் சின்னக் குருவிக்குஞ்சுக்கும் ஆசை வந்தது. அவை இரண்டும் கூட்டை விட்டு வெளியே வந்தன. அங்கே அழகான தோட்டம் இருந்தது. செடிகளும் மரங்களும் நிறைந்திருந்தன. வண்ண வண்ணப் பூக்கள் பூத்திருந்தன.

“இந்த இடம் எவ்வளவு அழகாக இருக்கிறது? இந்த அழகான தோட்டத்திலுள்ள மரத்தில் வீடு கட்டாமல் அம்மாவும் அப்பாவும் ஏன் அந்த முட்புதருக்குள் கூடு கட்டி வைத்திருக்கிறார்கள்? எனக்கு முட்புதருக்குள் இருக்கும் நம் வீடு பிடிக்கவே இல்லை” என்றது பெரிய குருவிக்குஞ்சு.

“ஆமாம், இந்தத் தோட்டம் எவ்வளவு அழகாக இருக்கிறது! நாம் இங்கேயே தங்கிவிடலாமா?”

“இப்போது வேண்டாம்.. நாம் கூடுகட்ட கற்றுக்கொண்ட பிறகு, இங்கே நம் கூட்டைக் கட்டிக்கொள்ளலாம்” என்றது பெரிய குருவிக்குஞ்சு.

குருவிக்குஞ்சுகள் இரண்டும் சற்று நேரம் அங்கே விளையாடிவிட்டு, மீண்டும் தங்கள் கூட்டுக்குத் திரும்பி வந்தன.

ஆண் குருவியும் பெண் குருவியும் மாலையில் உணவோடு வந்துசேர்ந்தன. ”அம்மா, நாங்கள் இன்று வெளியே சென்றோம். அழகான தோட்டத்தைக் கண்டோம். அங்கே கூடு கட்டாமல், ஏன் இந்த முட்புதருக்குள் கூட்டைக் கட்டியிருக்கிறீர்கள்? எங்களுக்கு இந்தக் கூடு பிடிக்கவே இல்லை” என்றது பெரிய குருவிக்குஞ்சு.

“வெளியே செல்லக் கூடாது என்று சொல்லிவிட்டுத்தானே சென்றேன். இன்னும் சிறிது காலத்துக்கு எங்களது பேச்சைக் கேட்டு நடந்துகொள்ளுங்கள். நாங்கள் ஏன் புதருக்குள் கூடு கட்டியிருக்கிறோம் என்பதை நீங்களாகவே புரிந்துகொள்வீர்கள். இறைச்சியையும் தானியங்களையும் சாப்பிட்டுத் தூங்குங்கள்” என்றது தாய்க்குருவி.

மறுநாள் காலையில் பெரிய குருவிகள் இரை தேடச் சென்றன. இன்றும் குருவிக்குஞ்சுகள் மெதுவாக வெளியே பறந்து சென்றன. தோட்டத்திலிருந்த பூக்களின் மேல பறந்தன. மரக்கிளைகளின் மீது பறந்து விளையாடின. அப்போது விநோதமான குரல் ஒன்று கேட்டது. குருவிக்குஞ்சுகள் இரண்டும் திரும்பிப் பார்த்தன. மரக்கிளையில் பழுப்பு நிறத்தில் பெரிய பறவை ஒன்று அமர்ந்து தங்களைப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

சிவப்பு நிறக் கண்களை உருட்டியபடி பார்த்த அந்தப் பெரிய பறவை, சட்டென்று எழும்பி, குருவிக்குஞ்சுகளை நோக்கிப் பறந்து வந்தது. குருவிக்குஞ்சுகள் திடுக்கிட்டன. இரண்டும் அந்தப் பெரிய பறவையிடமிருந்து தப்பிக்க நினைத்துப் பறந்தன. பெரிய பறவை குஞ்சுகளைத் துரத்திக்கொண்டே வந்தது. குருவிக்குஞ்சுகள் இரண்டும் முட்புதரின் சிறிய இடைவெளிக்குள் நுழைந்து, கூட்டுக்குள் ஒளிந்து கொண்டன.

முட்புதர்வரை துரத்தி வந்த அந்தப் பெரிய பறவையால், முட்புதரின் சிறிய இடைவெளிக்குள் நுழைய முடியவில்லை. அது திரும்பிப் பேரய்விட்டது.

‘அப்பாடா! தப்பித்தோம்!’ என்று குருவிக்குஞ்சுகள் நிம்மதியடைந்தன.

சற்று நேரத்தில் பெரிய குருவிகள் வந்தன. குருவிக் குஞ்சுகள் நடந்த அனைத்தையும் பெற்றோரிடம் கூறின.

குஞ்சுகள் செரன்னதைக் கேட்டு அம்மா குருவியும் அப்பா குருவியும் திடுக்கிட்டாலும், பிள்ளைகளுக்கு எந்த ஆபத்தும் நிகழவில்லை என்று அறிந்து நிம்மதி அடைந்தன.

“பிள்ளைகளே, இன்று உங்களைக் கொல்ல வந்தது பருந்து. நமக்கு ஆபத்தை விளைவிக்கும் பருந்து போன்ற பெரிய பறவைகளால் இந்த முட்புதரின் சிறு இடைவெளிக்குள் நுழைய முடியாது. அழகான பூக்கள் பூக்கும் மரத்தை விட்டுவிட்டு முட்புதரில் ஏன் கூடு கட்டினேன் என்று கேட்டீர்களே? அழகைவிடப் பாதுகாப்பு முக்கியம் என்பதால்தான் நாங்கள் இந்த இடத்தில் கூட்டைக் கட்டினோம். இப்போது புரிந்ததா? இனியாவது பெரியவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்” என்றது அப்பா குருவி.

“நன்றாகப் புரிந்துவிட்டது. இனி நாங்கள் கூடு கட்டினாலும் முட்புதருக்குள் பாதுகாப்பாகத்தான் கட்டுவோம்” என்றன குருவிக்குஞ்சுகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x