Published : 10 Apr 2019 12:27 PM
Last Updated : 10 Apr 2019 12:27 PM

டிங்குவிடம் கேளுங்கள்: ஏன் வாக்களிக்க வேண்டும்?

ஒவ்வொருவரும் ஏன் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், டிங்கு?

வாக்கு என்பது குடிமக்களின் அடிப்படை உரிமை. மக்கள் ஆட்சியில் மக்கள்தான் தங்களை ஆள்பவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். 18 வயதான ஒவ்வொருவரும் தங்களுக்கு அளிக்கப் பட்டுள்ள வாக்குரிமையை அவசியம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அத்தனை பேரும் முழுமையாகப் பயன்படுத்தினால்தான் சிறந்த முடிவைத் தேர்ந்தெடுக்க முடியும்.

வாக்குரிமை எளிதாக எல்லோருக்கும் கிடைத்து விடவில்லை. ஆரம்பக் காலத்தில் செல்வந்தர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை இருந்தது. பிறகு படித்தவர்களுக்கு அந்த உரிமை கிடைத்தது.

அதற்குப் பிறகு ஆண்களுக்கு மட்டும் உரிமை வழங்கப்பட்டது. பல ஆண்டுகாலம் பெண்கள் போராட்டம் நடத்தி, தங்களின் இன்னுயிரைத் தந்து, தங்களுக்கான வாக்குரிமையைப் பெற்றிருக்கிறார்கள். இந்தியாவில் 1951-52-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 21 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1989, மார்ச் 28 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்களிக்கலாம் என்ற சட்டம் வந்தது. இவ்வளவு போராடிப் பெற்ற வாக்குரிமையை, நாம் மதிக்க வேண்டும். அதைப் பயன்படுத்தி, நியாயமானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும், சிநேகபிரியா.

- ரா. சிநேகபிரியா, 9-ம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர், ஓசூர்.

 

நீ மெரினாவுக்குச் சென்றிருக்கிறாயா? நான் அம்மாவுடன் சென்றபோது, கடல் நீரைச் சுவைத்துப் பார்த்தேன். உப்பாக இருந்தது ஏன், டிங்கு?

காற்றில் உள்ள கரியமில வாயுவும் தண்ணீரோடு சேர்ந்துவிடுவதால், தண்ணீர் சற்று அமிலத் தன்மை உடையதாக மாறிவிடுகிறது. இந்த நீர் ஆறுகளாகி, வழியில் உள்ள மணல், பாறைகளைக் கரைத்துக்கொண்டு, கடலில் சென்று கலந்துவிடுகிறது. இதனால் தண்ணீரில் உப்பு இன்னும் அதிகமாகிவிடுகிறது.

 கடலுக்குள் இருக்கும் எரிமலைகளில் இருந்து வெளியேறும் உப்புக் கனிமங்கள் தண்ணீரை இன்னும் உப்பாக மாற்றிவிடுகின்றன. கடல் நீரில் சோடியமும் குளோரைடும் அதிக அளவில் இருப்பதால், கடல் நீர் கரிப்பாக இருக்கிறது.

-லோ.வசந்தகுமார், 7-ம் வகுப்பு

குப்புசாமி சாத்ராலயா இலவச மானவர் விடுதி, போளூர்,

திருவண்ணாமலை.

 

கழிவுநீர்த் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி அடிக்கடி இறந்து போகிறார்களே அது ஏன்? இதைத் தடுக்க இயலாதா, டிங்கு?

கழிவுநீர்த் தொட்டியில் ஹைட்ரஜன் சல்ஃபைடு, மீத்தேன், கார்பன் மோனாக்ஸைடு போன்ற வாயுக்கள் வெளியேறும். ஹைட்ரஜன் சல்ஃபைடு வாயு மட்டும் இருந்தால் அழுகிய முட்டை போன்று நாற்றமடிக்கும். கண்களில் எரிச்சல் உண்டாகும். மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். பதற்றம், தலைவலி போன்றவையும் உண்டாகும். இந்த ஹைட்ரஜன் சல்ஃபைடுடன் கார்பன் மோனாக்ஸைடும் மீத்தேனும் சேரும்போது மனிதர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்திவிடுகின்றன. 

ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் கழிவுநீர்த் தொட்டிகளில் மனிதர்களை இறக்குவதால், கிடைப்பதற்கு அரிய மனித உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றன. சட்டம் இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் கூடுதல் அக்கறை இல்லாததே இந்தத் துயங்களுக்குக் காரணம். அரசாங்கம் முயற்சி செய்தால் மனிதர்கள் பலியாவதைத் தடுக்க முடியும், அபிகா.

-எம் அம்பிகா, 8-ம் வகுப்பு,

அரசு உயர்நிலைப் பள்ளி வெளியகரம்,

திருவள்ளூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x