Published : 26 Mar 2019 05:41 PM
Last Updated : 26 Mar 2019 05:41 PM

டிங்குவிடம் கேளுங்கள்: எறும்புகள் பேசுமா?

இரண்டு எறும்புகள் சந்திக்கும்போது சில நொடிகள் நிற்கின்றன. அப்போது ஏதாவது பேசிக்கொள்கின்றனவா, டிங்கு?

– எஸ். சக்தி, 6-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, வெளியகரம், திருவள்ளூர்.

ஆமாம். நம்மைப்போல் வார்த்தைகளால் பேசிக்கொள்வதில்லை. சமிக்ஞைகளால் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன. எதிர் எதிரே இரண்டு எறும்புகள் சந்திக்கும்போது, உடலில் சுரக்கும் ரசாயனத்தை முகர்ந்து பார்க்கின்றன. தலையில் இருக்கும் உணர்கொம்புகளால் இது நம் காலனி எறும்புதானா என்பதைக் கண்டுகொள்கின்றன. ஒரே காலனி எறும்பு என்றால், உணவு எங்கே இருக்கிறது என்ற தகவலைப் பரிமாறிக்கொள்கின்றன. ஒருவேளை வேறு காலனி எறும்பு என்றால், வேகமாக விலகிச் சென்றுவிடுகின்றன. இதற்காகத்தான் சில நொடிகள் நிற்கின்றன, சக்தி.

செவ்வாய்க் கோளில் புவியீர்ப்பு விசை இருக்கிறதா, டிங்கு?

– பா. சுபஸ்ரீ, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக். பள்ளி, சமயபுரம், திருச்சி.

பூமிக்குதான் புவியீர்ப்பு விசை. செவ்வாய்க்கு செவ்வாய் ஈர்ப்பு விசை உண்டு, சுபஸ்ரீ. ஒவ்வொரு கோளுக்கும் துணைக் கோளுக்கும் ஈர்ப்பு விசை இருக்கிறது. பூமியில் இருக்கும் ஈர்ப்பு விசையை வைத்து ஒப்பிட்டால், செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு விசை குறைவானது. அதாவது புவியீர்ப்பு விசையில் 38% தான் செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு விசை.

நீங்கள் பூமியில் 100 கிலோவாக இருந்தால், செவ்வாய்க் கோளில் 38 கிலோதான் இருப்பீர்கள். நிலவின் ஈர்ப்பு விசை இன்னும் குறைவாக இருக்கும். பூமியில் 200 கிலோ எடை கொண்டவராக இருந்தால், நிலவில் 34 கிலோவாகத்தான் இருப்பார்கள்.

தூரப் பார்வை நன்றாகத் தெரிவதற்கு இயற்கை மருத்துவ வழிமுறையைச் சொல்ல முடியுமா, டிங்கு?

– ம. ஜோனா, 8-ம் வகுப்பு, அமலா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கன்னியாகுமரி.

பொதுவாகப் பார்வை சக்தியை அதிகப்படுத்த கேரட், கீரைகள், பழங்கள், பருப்புகளைச் சாப்பிடலாம் என்றுதான் சொல்ல முடியும், ஜோனா. தூரப் பார்வை எந்த அளவில் இருக்கிறது என்பதை எல்லாம் வைத்து, ஒரு மருத்துவரால்தான் சிகிச்சை அளிக்க முடியும். அதனால் உடல் நலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நீங்கள் மருத்துவரைத்தான் நாட வேண்டும்.

14 நாட்களை ஆங்கிலத்தில் Fortnight என்கிறார்கள். இது எப்படி வந்தது, டிங்கு?

– எஸ். ஹரிஹரசுதன், 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.

ஃபோர்ட்நைட் என்பது இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் ஆங்கில மொழி பேச ஆரம்பித்தபோது தோன்றிய வார்த்தை. இதற்கு 14 இரவுகள் என்று அர்த்தம். அதைப் பின்னர் 2 வாரங்கள் அல்லது 14 நாட்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்திக்கொண்டனர். வட அமெரிக்காவில் ஃபோர்ட்நைட்டுக்குப் பதில் Biweekly என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள், ஹரிஹரசுதன்.

தேன், பேனா மை, குங்குமம் போன்றவற்றைத் தலை முடியில் தேய்த்தால் நரைத்து விடுமா, டிங்கு?

– ஜெ.ஆ. மலர்விழி, 9-ம் வகுப்பு, ஆக்ஸிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்.

தேன், மை, குங்குமம் போன்றவற்றை ஏன் தலையில் தேய்க்க வேண்டும், மலர்விழி? அழுக்குத் தலையில் தேன் தடவினால் இன்னும் முடி சிக்கலாகவும் பிசுபிசுப்பாகவும் ஆகிவிடாதா? தற்செயலாகத் தேன், மை, குங்குமம் முடியில் பட்டால் நரைத்துவிடாது. ஆனால், மையும் குங்குமமும் தரமானதாக இல்லை என்றால், ஏதாவது ரசாயனம் கலக்கப்பட்டிருந்தால் காலப்போக்கில் நரைக்கும் வாய்ப்பிருக்கிறது. நீங்கள் தினமும் இவற்றை முடியில் தடவப் போவதில்லை என்பதால், நரைக்கும் என்ற கவலையை விட்டுவிடுங்கள்.

காற்று இல்லாமல் மீன் எப்படி உயிர் வாழ்கிறது, டிங்கு?       

– எம். லித்தீஷ், 6-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, வெளியகரம், திருவள்ளூர்.

காற்று இல்லாமல் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது, லித்தீஷ். தண்ணீரிலும் காற்று இருக்கிறது. மீன்கள் தண்ணீரை வாய்க்குள் கொண்டுவந்து, செவுள்களின் மூலம் வெளியேற்றுகின்றன. இவ்வாறு தண்ணீர் செவுள்கள் வழியே வரும்போது, மென்மையான தோல் தண்ணீரில் உள்ள ஆக்சிஜனை இழுத்து, செல்களுக்கு அனுப்பி வைக்கிறது. சில மீன்கள் நுரையீரல் போன்ற உறுப்பைப் பெற்றிருக்கின்றன. அதனால் காற்றை நேரடியாக சுவாசிக்கின்றன. தண்ணீரை விட்டு வெளியே வந்து, சில நாட்கள்வரை கூட இவற்றால் உயிருடன் இருக்க முடியும்.

நிலா பூமிக்கு அருகில் வந்தாலோ, தூரமாகத் தள்ளிப் போனாலோ என்ன ஆகும், டிங்கு?

– இ. தரணி, மதுரை.

பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது நிலா. அதனால் ஓராண்டில் பல முறை பூமிக்கு வெகு அருகில் நிலா வந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படி அருகில் வரும்போது நிலா பெரிதாகவும் கூடுதல் வெளிச்சத்துடனும் காணப்படுகிறது. இந்த நிகழ்வைத்தான் சூப்பர் மூன் என்று அழைக்கிறார்கள்.

பூமிக்கு ஈர்ப்பு விசை இருப்பதுபோலவே நிலவுக்கும் ஈர்ப்பு விசை இருக்கிறது. பூமி தன் ஈர்ப்பு விசையால் நிலவை ஈர்க்கும். அதேபோல் நிலவும் தன் ஈர்ப்பு விசையால் பூமியை ஈர்க்கும். அதனால் இன்னும் பூமியை நிலா நெருங்கி வரவோ, அல்லது தூரமாக விலகிச் செல்லவோ முடியாது, தரணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x