Published : 04 Jun 2025 06:56 AM
Last Updated : 04 Jun 2025 06:56 AM

பச்சோந்தி கடித்தால் விஷமா? - டிங்குவிடம் கேளுங்கள்

– சு.ரா. கவின்கிருஷ்ணா, 3-ம் வகுப்பு, கோவில்பட்டி.

பொதுவாகப் பச்சோந்தி மிகவும் சாதுவான உயிரினம். மனிதர்களைக் கண்டால், கடந்து செல்லவே விரும்பும். தனக்கு ஏதாவது ஆபத்து என்று நினைக்கும்போதுதான், தன்னைக் காத்துக்கொள்வதற்காகப் பச்சோந்தி கடிக்கிறது. அதுவும் மனிதரின் கையா, தன்னுடைய எதிரியா என்று அறியாமல் கடிக்கிறது. பச்சோந்தியின் கடி விஷமில்லை. ஆனால், சில நேரம் பச்சோந்தி கடித்து ஆழமான காயம் ஏற்படலாம். ரத்தம் வரலாம். முதலில் பச்சோந்தி வாயிலிருந்து கையை எடுக்க வேண்டும். நீராலும் சோப்பாலும் கடித்த பகுதியைச் சுத்தம் செய்ய வேண்டும். காயம் அதிகமாக இருந்தால் மருத்துவரின் உதவியை நாட வேண்டும், கவின்கிருஷ்ணா.

ரவை, மைதா, ஜவ்வரிசி போன்றவை எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, டிங்கு? – எஸ். அபர்ணா, 7-ம் வகுப்பு, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.

ரவையும் மைதாவும் கோதுமையிலிருந்து தயாரிக்கப் படுகின்றன. சில வகை கோதுமைகளில் இருந்து ரவை தயாரிக்கப்படுகிறது. சில வகை கோதுமைகளை நன்றாக அரைத்து, சுத்திகரித்தால் மைதாவாகக் கிடைக்கிறது. ஜவ்வரிசி இந்தியாவில் மரவள்ளிக்கிழங்கில் தயாரிக்கப்படுகிறது, அபர்ணா.

எண்ணெயில் கடுகைப் போட்டால் வெடிக்கிறது. மற்ற பொருள்களைப் போட்டால் வெடிப்பதில்லையே ஏன், டிங்கு? – ரா. உமா மகேஸ்வரி, 8-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி.பள்ளி, தங்களாச்சேரி, திருமங்கலம்.

காய்ந்த கடுகாகத் தெரிந்தாலும் கடுகுக்குள் நீர்ச்சத்து இருக்கிறது. அதனால் சூடான எண்ணெயில் கடுகைப் போட்டவுடன், கடுக்குக்குள் இருக்கும் நீர்ச்சத்து வெப்பத்தின் காரணமாக நீராவியாக மாறி, கடுகை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறது. அதனால் கடுகு வெடிக்கிறது. மற்ற பொருள்களில் நீர்ச்சத்து இல்லாததால் அவை வெடிப்பதில்லை, உமா மகேஸ்வரி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x