Published : 09 May 2025 12:09 PM
Last Updated : 09 May 2025 12:09 PM
ஆடுகள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், தங்கள் தேவைகளைத் தெரிவிக்கவும் பல விதமான தொடர்பு மொழிகளை உபயோகிக்கின்றன. சுமார் முந்நூறு வகை ஆடுகள் இருக்கின்றன. ஆனால் எல்லாம் 'மே' என்று கத்தினாலும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வோர் ஆடு இனமும் தனித்துவமான கத்துதல் பாணியைக் கொண்டுள்ளது.
நாம் கேட்கும் ’மே…மே…’ என்கிற சத்தத்தைக் கடந்து அவை பல வகைகளில் பேசுகின்றன. கூர்ந்து கவனித்தால் அதன் கண் முதல், உடல் அசைவுகள் வரை அனைத்தும் ஏதோ ஒன்றைச் சொல்லிக் கொண்டு இருப்பதை அறியலாம். ஆடுகள் பல்வேறு வகையான ஒலிகளை எழுப்புகின்றன. ஆராய்ச்சியின்படி, சுமார் முப்பது வித்தியாசமான ஒலிகளை அவை உருவாக்குகின்றன. இந்த ஒலிகள் அவற்றின் உணர்வுகளை மட்டுமல்லாமல், ஆபத்து குறித்த எச்சரிக்கை, கூட்டத்தோடு இணைவதற்கான அழைப்பு போன்ற பல தகவல்களைத் தெரிவிக்கின்றன.
ஆடுகளின் முக்கிய ஒலியாக ’கத்துதல்’ அறியப்படுகிறது. இந்த ஒலி பசி, மன அழுத்தம், கவனம் வேண்டும் என்பதை உணர்த்துகிறது. மென்மையான ’மே’ என்கிற சத்தம், ஆடு சந்தோஷமாகத் திருப்தியாக இருக்கிறது என்பதைக் குறிக்கும்.
அதுவே பசி எடுத்துவிட்டால், அதன் சத்தம் தொடர்ச்சியாக ஒலிக்கும். அதுபோல, கூட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டால், ஆடுகள் தங்கள் கூட்டத்துடன் தொடர்புகொள்ள உரத்த குரலில் கத்துகின்றன. அவை அச்சப்படும்போது அல்லது தொந்தரவு ஏற்படும்போது மனிதர்களைப் போலக் கத்தும்.
பெண் ஆடுகள் இனப்பெருக்க நேரத்தில் ஆண் ஆடுகளின் கவனத்தை ஈர்க்க உரக்கக் கத்துகின்றன. அதேபோல் ஆண் ஆடுகளும் இனப்பெருக்க நிலையில் உள்ள பெண் ஆடுகளைக் கண்டால் உச்சஸ்தாயில் ’மே’ என்று கத்துகின்றன. அம்மா ஆடும் குட்டி ஆடும் பேசிக்கொள்ளும் போதும் சத்தத்தின் அதிர்வெண் கூடும்.
ஆடுகளின் குழுக்களில் தனித்துவமான ‘உச்சரிப்பு பாணி’ இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஒவ்வொரு குழுவும் தனக்கென்று ஒரு தனித்துவமான குரல் முத்திரையைக் கொண்டுள்ளது. ஆடுகள் ஒன்றை மற்றொன்று அடையாளம் காண இந்தக் குரல் வேறுபாடுகள் உதவுகின்றன.
மே… என்கிற சத்தத்தை மட்டும் வைத்து நாம் அதன் மொழித் திறனை அறிய முடியாது. வாலை ஆட்டிக் கொண்டிருக்கும் ஆட்டைப் பார்த்தால் அது மகிழ்ச்சியுடனும் அல்லது உற்சாகத்துடனும் இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். அதே வால் சுருங்கியிருந்தால் பயம் அல்லது அசௌகரியத்தில் அது இருக்கிறது என்று அர்த்தம்.
இரண்டு ஆடுகள் தலையால் முட்டிக்கொள்ளும் காட்சியைப் பல இடங்களில் பார்த்திருப்போம். பார்ப்பதற்கு இது ஆக்ரோஷமாகத் தோன்றினாலும், அவற்றுக்கு இது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. சில நேரம் கூட்டத்தில் தலைமை நிலையை நிலைநாட்டும் செயலாகவும் முட்டுதல் இருக்கிறது.
வாலுக்கு இருக்கும் அதே முக்கியத்துவம் காதுகளுக்கும் உண்டு. முன்னோக்கி நீட்டப்பட்ட காதுகள் ஆர்வத்தையும் சுறுசுறுப்பையும் குறிக்கின்றன. அதே பின்னோக்கிச் சாய்ந்த காதுகள் எரிச்சல் அல்லது பயத்தைக் குறிக்கின்றன. ஆடுகள் அச்சமடையும்போது, அவற்றின் காதுகள் வேகமாக முன்னும் பின்னும் அசையும்.
ஆடுகள் அதிர்ச்சியடையும் போதோ அல்லது எரிச்சலடையும் போதோ, நாய்கள், பூனைகளைப் போலவே அவற்றின் முதுகெலும்பின் மீது இருக்கும் முடி சிலிர்த்து நிற்கும். பொதுவாக எரிச்சலூட்டும் ஏதாவதொன்றை நோக்கி ஆடு பாய்வதற்கு முன்னதாகவும் இது நடக்கலாம்.
பொதுவாகத் தலையால் முட்டுதல், மற்ற ஆடுகளின் மீது தாவுதல் போன்ற நடத்தைகள் மூலம் குழுவில் ஆதிக்கத்தை நிலைநாட்டுகின்றன. அப்படி, ஆதிக்கம் செலுத்தும் ஆடுகள் மந்தையில் இருக்கும் மற்ற ஆடுகளைக் கட்டுப்படுத்தும்.
ஆடுகளின் தலை, கால்கள், வால் பகுதியில் வாசனை சுரப்பிகள் உள்ளன. ஓர் ஆண் ஆடு அருகில் இருக்கும் மரத்தொட்டியில் உடலைத் தேய்க்கும்போது, பிற ஆடுகளுக்கு ’இது என் இடம்’ என்று சத்தமில்லாமல் அறிவிக்கிறது.
ஒரு பெண் ஆடு சிறுநீர் கழிக்கும்போது, அது மற்ற ஆடுகளுக்கு அதன் இனப்பெருக்க நிலையைப் பற்றிய குறிப்புகளை விடுகிறது.
இந்த வாசனைக் குறியீடுகள் ஆடுகள் ஒன்றை மற்றொன்று அங்கீகரிக்கவும், சமூகத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும், குழு ஒற்றுமையைப் பராமரிக்கவும் உதவுகிறது. இது ஆடுகளின் தொடர்பில் ஒரு முக்கிய அம்சம்.
அண்மையில் நடந்த ஆராய்ச்சியில் ஆடுகள் மனிதக் குரல்களில் உணர்வுகளை அடையாளம் காணும் திறன் கொண்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவை வளர்ப்பவர்களின் மகிழ்ச்சியான குரலுக்கும் கோபமான இரைச்சலுக்கும் வெவ்வேறு தொனிகளில் வித்தியாசமாகப் பதிலளிக்கின்றன எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, ஆடுகள் மனிதர்களின் முக பாவனைகளைக் கொண்டும் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் புத்திசாலிகள்.
ஆடுகள் மற்ற ஆடுகளுடன் நட்பு உறவை உருவாக்குவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நட்புடன் இருக்கும் ஆடுகள் நெருக்கடியான இடங்களிலும் தீவன இடத்திலும் குறைவான போட்டியைக் காட்டுகின்றன.
சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள், ஆடுகளின் தொடர்புத் திறன்கள் முன்பு நாம் நினைத்ததைப் போல் அத்தனை எளிதானவை அல்ல என்பதை வெளிப்படுத்துகின்றன.
- கட்டுரையாளர், எழுத்தாளர். | தொடர்புக்கு : writernaseema@gmail.com
முந்தைய பகுதி > ஆந்தையின் அலறல் என்ன சொல்கிறது? | உயிரினங்களின் மொழி - 17
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT