

அன்புள்ள நேரு மாமா,
பல தலைவர்கள் பிடிக்கும் என்றாலும் நீங்கள் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். மிகச் சிறிய வயதிலேயே என் அண்ணன், அப்பா, அம்மா, பாட்டி, ஆசிரியர் எனப் பலரிடமும் கேட்டு உங்களைப் பற்றி அறிந்துகொண்டேன். ஒருகட்டத்தில் அந்தத் தகவல் போதாது என்று தோன்றியபோது நானே புத்தகங்களைத் தேடி வாசிக்கத் தொடங்கினேன்.
சிறையில் இருந்துகொண்டு உங்கள் மகள் இந்திராவுக்கு நீங்கள் எழுதிய கடிதங்களை வாசித்தபோது அவை எனக்கு எழுதப்பட்டதாகவே நினைத்து மகிழ்ச்சியடைந்தேன். இப்படிப் படிக்கப் படிக்க புத்தகங்கள் மீது ஆர்வம் அதிகமானது. இன்னொரு பக்கம் என் மொழி அறிவும் வளர்ந்தது.
நீங்கள் எழுதிய உலக வரலாறு புத்தகத்தின் மூலம் ஆங்கிலத்தையே கற்றுக்கொள்ளலாம் என்று அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டதை நினைத்துப் பெருமிதமாக இருந்தது. ஆங்கிலேயர் அல்லாத ஒருவரிடமிருந்து ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளலாம் என அமெரிக்கப் பத்திரிகை சொன்னதே உங்கள் மொழித்திறனுக்குச் சான்று.
உங்களைப் போன்று இன்னொரு தலைவரும் இல்லை, உங்களைப் போன்று இன்னோர் எழுத்தாளரும் இல்லை. என்றும் என்னை வழிநடத்திக்கொண்டிருக்கும் உங்களுக்கு, இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் யாராவது இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதிக்கொண்டுதான் இருப்பார்கள்.
அன்புடன்
எம். ஜெயசுதா, 11ஆம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, ஈரோடு.