Last Updated : 10 Jan, 2018 11:34 AM

 

Published : 10 Jan 2018 11:34 AM
Last Updated : 10 Jan 2018 11:34 AM

படிப்போம் பகிர்வோம்: 2017 சிறார் நூல்கள்

2017-ம் ஆண்டில் வெளியான குறிப்பிடத்தக்க சிறார் நூல்களின் தொகுப்பு:

பேசும் தாடி

பேரன், பேத்தியைப் பார்க்க வரும் தாத்தாவின் தாடிக்குள் மாயாஜாலம் ஒளிந்துகொண்டிருந்தால் என்ன நடக்கும்? ரொம்ப சுவாரசியமா இருக்கும் இல்லையா. அந்தத் தாத்தாவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு சொலவடை சொல்லும் பாட்டியும் வர்றாங்க. இவங்க ரெண்டு பேரும் பேரன், பேத்திகளுடன் இருக்கும் சுவாரசியமான நாட்களின் கதையை சிறார் எழுத்தாளர் உதயசங்கர் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

வானம் வெளியீடு, தொடர்புக்கு: 91765 49991

சஞ்சீவி மாமா

நாகரிக-அறிவியல் வளர்ச்சியில் உச்சம் தொட்டுவிட்டதாகச் சொல்லப்படும் இந்த நூற்றாண்டிலும் கழிப்பறைகளையும் சாக்கடைகளையும் மனிதர்கள் சுத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக ஆறாம் வகுப்பு மாணவன் பேச்சிராசுவுக்கு எழும் பல்வேறு கேள்விகள் கதையாக மாறியிருக்கின்றன. கொ.மா.கோ. இளங்கோ எழுதியுள்ள இந்த நூல் பதின்வயதினர், குழந்தைகளுக்கானது.

புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு, தொடர்புக்கு: 044-24332924

சிறுவர் கதைக் களஞ்சியம்

பாரதியார், பாரதிதாசன் என தமிழின் மிகப் பெரிய படைப்பாளிகள் தொடங்கி பலரும் குழந்தைகளுக்குக் கதை எழுதியிருக்கிறார்கள். பெ. தூரன், அழ. வள்ளியப்பா, பூவண்ணன், வாண்டு மாமா, ரேவதி உள்ளிட்ட புகழ்பெற்ற சிறார் எழுத்தாளர்கள் எழுதிய கதைகளின் தொகுப்பு இது. இரா. காமராசு, கிருங்கை சேதுபதி தொகுத்துள்ள இந்த நூலை முழுமையான தொகுப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், சிறார் எழுத்தாளர்கள் சார்ந்த அறிமுகத்தை இந்நூல் தருகிறது.
10CHVAN03_Kalanjiyam.jpg 

சாகித்ய அகாடமி வெளியீடு, தொடர்புக்கு: 044-24311741

கடைசி இலை / ஆறடி நிலம்

எளிமையான மொழியில் சொல்லப்பட்டால் உலகப் புகழ்பெற்ற கதாசிரியர்களின் படைப்புகளையும் தமிழின் முக்கிய கதைகளையும் குழந்தைகளால் வாசிக்க முடியும் என்பதற்கு இந்த இரண்டு தொகுப்புகளும் எடுத்துக்காட்டு. ஓ. ஹென்றி, ஆண்டன் செகாவ் தொடங்கி, தமிழின் முக்கிய சிறுகதை ஆசிரியர்களின் கதைகள், நாட்டுப்புறக் கதைகள் அடங்கிய குறிப்பிடத்தக்க தொகுப்பு. தொகுத்தவர் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்.

புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு,

தொடர்புக்கு: 044- 2433 2924

சுண்டைக்காய் இளவசரன்

ஒரு தப்பு செய்ததால் ஓர் இளவரசன் சுண்டைக்காயாக மாறிவிடுகிறான். கசப்பாக இருக்கும் என்பதால், சூர்யாவின் தங்கைக்கு சுண்டைக்காய் பிடிப்பதில்லை. இந்தக் கதையில் ஒரு திருப்பமாக சுண்டைக்காயாக மாறிய இளவரசன், சூர்யா கைகளில் கிடைக்கிறான். சூர்யாவுக்கு நண்பனாகிவிடும் அந்த சுண்டைக்காய் பேசுகிறது, மாயாஜாலக் கதைகள் சொல்கிறது. யெஸ். பாலபாரதி எழுதியுள்ள சுவாரசியமான கதை.

வானம் வெளியீடு, தொடர்புக்கு: 91765 49991

இருட்டு எனக்குப் பிடிக்கும்

ஆறு குழந்தைகள் ஒரு மலைக்கு சுற்றுலா செல்கிறார்கள். வழியில் ஏற்படுகிற விபத்தில் ஜோவும் அவன் தங்கை ஷீலுவும் கூட்டத்திலிருந்து தவறிப் போய்விடுகின்றனர். இவர்கள் இருவரும் ஒருபக்கம், மறுபக்கம் ஓட்டுநருடன் இவர்களைத் தேடி மற்ற குழந்தைகள் மேற்கொள்ளும் தேடலே கதை. குழந்தைகள் விரும்பும் சாகச பாணிக் கதையை எழுதியிருப்பவர் ரமேஷ் வைத்யா.

நீலவால் குருவி வெளியீடு, தொடர்புக்கு: 94428 90626

செவ்விந்தியக் கழுகு

சூரியனின் வாரிசுகள் என்று தங்களை அழைத்துக்கொண்ட செவ்விந்தியர்களே அமெரிக்காவின் பூர்வகுடிகள். சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஆங்கிலேயர்கள் அந்த மண்ணில் கால் பதித்தார்கள். செவ்விந்தியப் பழங்குடிகளின் வரலாற்றுப் பின்னணியில் அமைந்த முக்கிய நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பு இது. மேபல் பவர்ஸ் எழுதியதை மொழிபெயர்த்தவர் சரவணன் பார்த்தசாரதி

புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு,

தொடர்புக்கு: 044- 2433 2924

எலியின் பாஸ்வேர்டு

பாம்புகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள எலிகள் ஒன்றுகூடுகின்றன. நவீன டிஜிட்டல் கதவு ஒன்றைக்கொண்டு தங்கள் வளையை மூடிவிட எலிகள் திட்டமிடுகின்றன. இப்படிப் பூட்டிக்கொள்வதால் எலிகளுக்கும் பாம்புக்கும் இடையிலான பகை என்னவாயிற்று, இரண்டும் பிறகு மோதிக் கொள்கின்றனவா என்பதைப் பற்றி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய கதை.

தேசாந்திரி வெளியீடு, தொடர்புக்கு: 96000 34651

எறும்பும் புறாவும்

லியோ டால்ஸ்டாய் எழுதிய குழந்தைக் கதைகள் புகழ்பெற்றவை. முன்பு சோவியத் வெளியீடாகப் புகழ்பெற்றிருந்த இந்தத் தொகுப்பு, பழைய நூலில் இடம்பெற்றிருந்த ரமாதினின் அழகான வண்ண ஓவியங்களுடன் மீண்டும் வெளியாகியுள்ளது. பியாரி செரிபு மொழிபெயர்த்த இந்த நூலின் பதிப்பாசிரியர் யூமா. வாசுகி.

புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு,

தொடர்புக்கு: 044- 2433 2924

 

தி இந்து வெளியீடு

மாய விரோதி

ஒரு பிரச்சினையில் மனிதத் தலையுடைய வெட்டுக்கிளியாக மாறிவிடுகிறான் ஒரு சிறுவன். அந்தச் சிறுவன் தன் சுய உருவத்தைப் பெற ஜிம்பா என்ற விசித்திரமான கதாபாத்திரம் உதவுகிறது. அந்தச் சிறுவனுடன் ‘மாய விரோதி’யைத் தேடி ஜிம்பா செல்லும்போது ஏற்படும் திருப்பங்களும் மாயாஜாலங்களும் விறுவிறுப்பானவை. ஓவியர் முத்து எழுதி, வரைந்து தமிழில் நேரடியாக வெளியான சித்திரக்கதை இது.

தி இந்து, தொடர்புக்கு: 99401 72377 / 99414 38219

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x