டிங்குவிடம் கேளுங்கள்? - பாம்பு சட்டை உரிப்பது ஏன்?

டிங்குவிடம் கேளுங்கள்? - பாம்பு சட்டை உரிப்பது ஏன்?
Updated on
1 min read

பாம்பு தோலை (சட்டையை உரிப்பது) உரிப்பது ஏன், டிங்கு?

- சாதனா, 1-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.

பாம்புகளின் உடல் வளரும்போது பழைய சட்டையைக் கழற்றிவிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சட்டை குறிப்பிட்ட காலத்துக்குள் தடிமனாகிவிடும். அப்போது கண்களால் சரியாகப் பார்க்க இயலாது. இரை தேடுவது கடினமாகிவிடும். எனவே பாதுகாப்பான இடத்துக்குச் சென்று, கரடுமுரடான பாறையிலோ மரத்திலோ உடலைத் தேய்த்து, சட்டையை உரிக்க ஆரம்பிக்கும். தலை முதல் வால் வரை உள்ள சட்டையை உரித்து வெளியே வரவேண்டும்.

சட்டை உரிப்பது பாம்புக்கு எளிதாக இருக்காது. முழுதாக உரித்து முடிக்கச் சில நாள்கள் தேவைப்படும். சரியாகச் சட்டை உரிக்க முடியவில்லை என்றால், அது பாம்புக்குத் தீங்காக மாறிவிடலாம். அதனால் பாம்பு சட்டையை உரிக்கும்போது கவனமாகவும் இடையூறு ஏற்படாமல் இருக்கும்படியும் பார்த்துக்கொள்கிறது. ஆண்டுக்கு 4 முதல் 12 முறை வரை பாம்புகள் சட்டையை உரிக்கின்றன, சாதனா.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in