

உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மலையேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு எவரெஸ்ட் உச்சிக்கு செல்ல வேண்டும் என்பது பெருங்கனவு.
சென்னையைச் சேர்ந்த 16 வயதே ஆன மலையேற்ற வீராங்கனை நிஷா சசிகுமார் அந்தக் கனவுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். நேபாளத்தின் தெற்கு கோல் வழித்தடம் மூலம் எவரெஸ்ட்டைத் தொட்டு வெற்றிகரமாகத் திரும்பியுள்ளார்.
பெரிய இலக்கு
‘எலைட் எக்ஸ்பெட்’ நிறுவனம் ஏற்பாடு செய்த மலையேற்றப் பயணத்தின் ஒருபகுதியாகப் பயணம் செய்த நிஷா, கடந்த மே 25 அன்று 8,848.86 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்குச் சென்றார். அப்போது அவருக்கு 16 வயது கடந்து 80 நாள்கள் ஆகியிருந்தன.
வழக்கமான எல்லைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்கிற எண்ணமும் அரிய இடங்களுக்குப் பயணப்பட வேண்டும் என்கிற ஆர்வமுமே தன்னை இந்த முயற்சிக்கு ஊக்கப்படுத்தியதாகச் சொல்கிறார் நிஷா.
“ஒவ்வொரு மலையேற்றப் பயணமும் மன உறுதி, திட்டமிட்டு செயல்படுதல், தன்னம்பிக்கையை எனக்குக் கற்றுக்கொடுத்தது. சவாலான நேரத்தில் நிதானமாக சுவாசிப்பதில் கவனம் செலுத்துவேன். இதுவரை இந்தப் பயணத்துக்காக நான் மேற்கொண்ட பயிற்சியை உறுதியாக நம்பினேன்.