ஏஐ சாட்பாட்கள் ஏன் உளறுகின்றன? | ஏஐயின் இன்னொரு முகம்

ஏஐ சாட்பாட்கள் ஏன் உளறுகின்றன? | ஏஐயின் இன்னொரு முகம்
Updated on
2 min read

சிந்தனை சங்கிலி அல்லது சங்கிலித் தொடர் சிந்தனை எனும் உத்தி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான பிராம்ட் பொறியியலில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

இப்போது நாம் பார்க்க இருக்கும் ஏஐ சேவைகளின் முக்கியப் பிரச்சினைக்கும் இதற்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. ‘ஹலுசினேஷன்’ எனச் சொல்லப்படும் ஏஐ உளறல்தான் அந்தப் பிரச்சினை. ஏஐ எப்படி உளறும் என்று கேட்பது தவறு. ஏஐ சேவைகள் ஏன் உளறுகின்றன என்றுதான் நாம் கேட்டாக வேண்டும்.

ஏஐ சாட்பாட்கள் என்ன கேள்வி கேட்டாலும் பதில் அளிக்கும் திறனைக் கொண்டிருப்பது பற்றிதான் பரவலாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஏஐ சாட்பாட்கள் தவறான பதில்களை அளிக்கும் தன்மை கொண்டிருப்பதையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

இதைத்தான் ‘ஏஐ ஹலுசினேஷன்’ என்கின்றனர். இல்லாத தகவல்களை இருப்பதுபோல சாட்பாட்கள் அளிக்கும் தன்மையே இப்படிக் குறிப்பிடப்படுகிறது. இதைப் பிதற்றல் அல்லது உளறல் என்று புரிந்துகொள்ளலாம். ஏஐ மயக்கம் என்றும் சொல்லலாம்.

பிழை பதில்கள்

நம்பக்கூடியது போலத் தோன்றும். ஆனால், தவறான அல்லது இல்லாத தகவல்களை சாட்பாட்கள் அளிப்பது என இதற்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. பயிற்சித் தரவுகளில் இல்லாத தகவல்களைக் கொண்டு அளிக்கப்படும் பதிலாகவும் இது அமையலாம். இந்தப் பதில்கள் அபத்தமாகவும் முழுவதும் தவறாகவும் இருக்கலாம் என்பதுதான் பிரச்சினை.

கேட்கப்படும் கேள்விகளுக்குப் பொருந்தாத, உண்மைக்கு மாறான பதில்களை சாட்பாட்கள் வழங்குவது தொடர்பாக எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் பதிவாகி இருக்கின்றன.

ஏர்கனடா நிறுவன சாட்பாட், டிக்கெட் பணத்தைத் திருப்பித்தருவது தொடர்பாகத் தவறாக அளித்த பதில், கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த சாட்பாட் எனத் தொடங்கி முதல் புறக்கோள் படம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்டதுவரை பிரபலமான எடுத்துக்காட்டுகள் பல இருக்கின்றன.

இவ்வளவு ஏன்? ஏஐ சாட்பாட்டை நம்பித் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மனுவில் இல்லாத வழக்குகள் மேற்கோள் காட்டப்பட்டதாகத் தெரியவந்த நிகழ்வுகளும் உள்ளன. அரசுத் தரப்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளிலேயே, இப்படி இல்லாத தகவல்கள் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி, இதன் பின்னே இருப்பது ஏஐ சாட்பாட்கள்தான் என்பது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறி உள்ளன.

நீங்களேகூடப் பல நேரம் இத்தகைய பிழை பதில்களை எதிர்கொண்டிருக்கலாம். ஏஐ சாட்பாட்கள் பல நேரம் தவறான பதில்களை அளிக்கலாம் என்பது மட்டுமல்ல, அந்தப் பிழை பதில்களை, அவை மிகுந்த நம்பிக்கையோடு முன்வைப்பதுதான் உண்மையான பிரச்சினை.

சொல்வது பொய்யா?

எல்லாம் சரி, ஏஐ சாட்பாட்கள் இப்படித் தவறான பதில்களை அளிக்கக் காரணம் என்ன? சாட்பாட்கள் திறனுக்குக் காரணமாக அமையும் ‘பெரும் மொழி மாதிரிகளே’ (LLMs) இதற்கும் பொறுப்பு. பயிற்சி அளிக்கப்பட்ட பெரும் தரவுத் தொகுப்புகளிலிருந்து, பொருத்தமான பதிலை அடுத்து தோன்றக்கூடிய வார்த்தைகளைக் கணிப்பதன் மூலம் செயல்படுவதுதான் மொழி மாதிரிகளின் அடிப்படை.

‘அடுத்து வரக்கூடிய சொற்களைக் கணிப்பதற்கான நிகழ்தகவு மாதிரிகளே தவிர, அடிப்படையான தகவல்களைக் கொண்ட உண்மைகளைத் தரவுத் தொகுப்பிலிருந்து அணுகுவதற்கு உருவாக்கப்பட்டவை அல்ல என்பதால், மொழி மாதிரிகள் உளறும் நிலை ஏற்படுகிறது.’- மொழி மாதிரிகள் ஏன் உளறுகின்றன எனும் கேள்விக்கு கூகுள் ஏஐ தேடல் மாதிரி அளித்த பதிலே இது என்பதை கவனிக்க வேண்டும்.

ஏஐ பதில் என்றாலும், ஏஐ தொடர்பான உண்மையை உணர்த்தும் பதில் எனக் கொள்ளலாம். ஆனால், ஏஐ சாட்பாட்கள் பொய் சொல்வதாகவும் கருத முடியாது. ஏனெனில் சாட்பாட்களுக்குப் பொய், மெய் என்பதெல்லாம் புரியாது. அவற்றுக்குத் தெரிந்ததெல்லாம், உள்ளீட்டுக்கு ஏற்ற வகையிலான பதிலை முன்வைப்பதுதான். அந்த நோக்கத்துடன்தான் அவற்றுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் பொருள் ஏஐ சேவைகள் உண்மையைச் சொல்வதாகவும் கருத முடியாது என்பதே. ஏனெனில், பதில் சொல்லும் முறை, இதற்குத் தொடர்பில்லாதது. இன்ன வகையான பதிலை அளிக்க வேண்டும் எனும் கட்டுப்பாடு அல்லது கடிவாளம் இல்லாததும், மொழி மாதிரிகள் பிழைத்தகவல்களை அளிக்க இன்னொரு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

நேரத்தைச் செலவிட்டால்...

உண்மையான தகவல்கள் கொண்ட தரவுப் பட்டியல்களில் சரிபார்க்கும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட தவறான பதில்களை அளிக்காத வகையில் கட்டுப்பாடு கொண்டு வரப்பட வேண்டும் என்றெல்லாம் பலவிதமான தீர்வுகள் இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய முன்வைக்கப்படுகின்றன.

பொதுவாகக் கேள்வி கேட்பதைவிட, பதில் எவ்விதம் இருக்க வேண்டும் எனப் படிப்படியாக வழிகாட்டும் வகையில் கேள்வி கேட்டால், அதற்கேற்ப சாட்பாட்டும் சரியான பதிலை அளிக்கலாம் என்கின்றனர்.

இவ்விதம், நாம் எதிர்பார்க்கும் பதிலைக் கச்சிதமாக உணர்த்தும் வகையில், அதற்கான கூறுகளைச் சிறுசிறு துண்டுகளாக உடைத்து விளக்கமாகக் கேட்கும் முறையைத்தான், பிராம்ப்ட் பொறியியல் துறையில் ‘சிந்தனை சங்கிலி’ (Chain of Thought - CoT) எனக் குறிப்பிடுகின்றனர்.

கேள்வியிலேயே பதிலை எப்படிப் கண்டறிய வேண்டும் எனப் படிப்படியாக வழிகாட்டிவிட்டால், தேவையான பதில் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்கின்றனர். சரியான உத்திதான்.

ஆனால், வேலையை எளிதாக்கவும் செயல்திறனை அதிகரிக்கவும் சாட்பாட்களை நாடுவதாக நம்பிக்கொண்டு, அவற்றுக்கான கேள்வியைப் பட்டைத் தீட்ட மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிருந்தால் யாருக்கு லாபம் என யோசித்துப் பாருங்கள்.

(வளரும்)

- enarasimhan@gmail.com

ஏஐ சாட்பாட்கள் ஏன் உளறுகின்றன? | ஏஐயின் இன்னொரு முகம்
பிராம்ப்ட் படுகுழிகளும் தப்பிக்கும் வழிகளும் | ஏஐயின் இன்னொரு முகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in