

ஒரு புதிய கார் மார்க்கெட்டுக்கு வந்த சில நாள்களிலேயே நம்மூர் சாலையில் ஓடிக்கொண்டிருக்கும். ‘ஒரு கோடி ரூபாய் ரோட்டுல உருண்டு போய்ட்டிருக்கு, பார்..’ என்று பேசிக்கொண்டாலும், சில நேரம் அந்த காரைப் பார்த்து எரிச்சலடைகிறோம். ஏனெனில், அதை ஓட்டிக்கொண்டிருப்பவர் நல்லவர், நாணயமானவர் என்கிற உங்கள் லிஸ்டில் வராத ஓர் ஆள்.
நாட்டில் நல்லவர் அல்லாதவர்கள் என்று நானும் நீங்களும் நம்பும் ஒரு கூட்டம் முன்னேறுவது நமக்குப் பிடிப்பதில்லை. இந்த இடத்தில், ‘நாமும்தான் உழைக்கிறோம். முன்னேற்றம் ஒன்றும் இல்லையே, பாஸ்..’ என்கிற ஆதங்கத்தின் சலிப்பில், ‘உழைச்சு, உழைச்சு என்னத்தக் கண்டோம்?’ என்கிற பெருமூச்சு வேறு. அதுதான், ‘எனக்கு மட்டும் ஏன்?’ என்கிற வியாக்கியானத்தில் முடிகிறது.
அசுரர், தேவர் என்கிற இரண்டு பிரிவினரைப் பற்றிப் புராணங்களில் படிக்கிறோம். பொதுவாக அசுரர்கள் என்றால் கொஞ்சம் ‘வில்லங்க டைப்’ போலவும் தேவர்களின் நல்முயற்சிகளுக்குக் கேடு விளைவிப்பவர்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ‘யார் நல்லவர், யார் கெட்டவர்?’ என்றெல்லாம் புராணச் செய்திகளுக்குப் போகாமல், அசுரர்களின் முயற்சிகளை ஆராய்வோம்.
இரணியகசிபு, பஸ்மாசுரன், ராவணன் போன்ற அசுரர்கள் தவம் செய்வார்கள்; வரங்கள் பெறுவார்கள்; சில சக்திகளைப் பெறுவார்கள். தொடர்ந்து நல்லவர்கள், அப்பிராணிகள் அலறுவார்கள். அப்படியே ‘கட்’ பண்ணா.. கடவுளின் அவதாரங்கள் அந்த வரங்களில் உள்ள ஓட்டைகளைக் கண்டறிந்து, கஷ்டப்பட்டு அசுரர்&கோ-வை அழிப்பார்கள்.