

உலகப் புகழ்பெற்ற பாப் இசைக்குழுவான ‘பிடிஎஸ்’ நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய ஆல்பத்தை வெளியிட்டும், நேரடி நிகழ்ச்சியை நடத்தியும் இசை உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜென் இசட் தலைமுறை விரும்பி ரசிக்கும் பிடிஎஸ்ஸின் இசைப் பயணம் மீண்டும் தொடங்கியுள்ளதால், உலக அளவில் இந்த இசைக்குழு டிரெண்டில் இருந்துவருகிறது.
உலகில் இன்றைய ஜென் இசட் தலைமுறையின் விருப்ப இசைக்குழு என்றால், அது பிடிஎஸ்தான். தென்கொரியாவைச் சேர்ந்த இந்த இசைக்குழு 2013இல் 7 இளைஞர்களால் தொடங்கப்பட்டது. இவர்களின் இசைப் பயணம் ஒரு கட்டத்தில் உலக அளவில் இசை சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்தது.
இந்த இசைக்குழு நடத்திய நிகழ்ச்சிகளுக்கு உலக அளவில் அமோக வரவேற்பு கிடைத்தது. சமூக வலைத்தளங்களில் ‘பிடிஎஸ் ஆர்மி’ என்கிற பெயரில் இக்குழுவைச் சிலாகித்து எழுதியும் இசை ஆல்பங்களைப் பகிர்ந்துகொண்டும் பலர் வைரலாக்கினர். இந்தியாவிலும் இந்த இசைக்குழுவுக்குத் தனித்த ரசிகர் பட்டாளம் உருவெடுத்தது.