

‘கல்யாணத்தப்போ எப்படித் தாலி கட்டுனேங்கறதையே மறந்துட்டேன்’ என்று முன்னாள் பேச்சிலர்கள் கல்யாணக் கனவுகளோடு திரியும் இளசுகளிடம் ‘பதற்றக்’ கதைகளைப் பற்றவைப்பது வழக்கமானதுதான். அதற்கு இடம்கொடுக்காத ஒரு தொழில்நுட்பம் வந்துவிட்டதை உணர்த்தியது, சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலான ஒரு காணொளி.
மணமேடையில் தாம்பாளத் தட்டிலிருந்து தாலியைக் கையில் எடுக்கும் மாப்பிள்ளை, அதைப் பெண்ணுக்குக் கட்டுவதையும் நாணம் உள்ளிட்ட பல உணர்வுகளின் கலவையோடு அப்பெண் அதனை ஏற்றுக்கொள்வதையும் சுற்றியிருப்பவர்கள் வாழ்த்து வதையும் அது காட்டியது. அனைத்தும் மாப்பிள்ளையின் ‘பாயிண்ட் ஆஃப் வியூ’வில் இருந்தது.
வீடியோ எடுக்கலாம்
போலவே, சில நாள்களுக்கு முன்பு மின்சார ரயிலில் பயணம் செய்த ஒரு முதியவர் எதிரே இருந்த தனது உறவினர்களிடம் ‘உங்க எல்லாரையும் வீடியோ எடுக்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஸ்டைலிஷான ‘கூலிங் கிளாஸ்’ போன்றிருந்த கண்ணாடியைத் தவிர அவரது கையில் எதுவுமில்லை. ‘இதுல ஏஐ மூலமா ரெக்கார்டு ஆகறதால, வீட்ல மறந்து வச்சுட்டாகூட மொபைல்ல இருந்தே ஆபரேட் பண்ணலாம்’ என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்.
‘இதுவும் ஒரு பாதுகாப்புதான்’ என்று அந்தக் கண்ணாடியை அவர் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார். மேற்கண்ட இரண்டு சம்பவங்களிலும் பங்களித்திருப்பது மெட்டா ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் கண்ணாடிகள்.