Last Updated : 12 Jun, 2015 02:34 PM

 

Published : 12 Jun 2015 02:34 PM
Last Updated : 12 Jun 2015 02:34 PM

ஆன்லைன் ஷாப்பிங்கா, ஜாக்கிரதை!

பஸ்ல போயி, ரயிலில் போயி ஷாப்பிங் செய்துவந்த நாம இப்போ கம்யூட்டர் முன்னாடி உட்கார்ந்தே ஷாப்பிங்க முடிச்சிட்றோம். முன்னரெல்லாம் அழகாக ஆடை உடுத்தி கடைகடையாக ஏறி இறங்கிப் பொருள்களை வாங்கிக் குவித்திருக்கிறோம்.

தொழில்நுட்பம் வளர்ந்துகிடக்கும் இந்தக் காலத்தில் அது அவசியமல்ல என்பதால் அநாவசியமான அலைச்சலைத் தவிர்க்கிறோம்.

இப்போது ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றால் வேலை சுலபம். இறுக்கமான ஆடைகளைக் களைந்துவிட்டு, தளர்வான ஆடைகளை உடுத்திக்கொண்டு வீட்டிலேயே ரிலாக்ஸாக அமர்ந்துகொண்டு பொருள்களைத் தேடலாம்.

எந்த ஆன்லைன் தளம் விலை குறைவாகக் குறிப்பிட்டிருக்கிறது என்று பார்க்கலாம். அதில் நமக்குத் தேவையான பொருளை ஆர்டர் செய்துவிட்டு அடுத்த வேலையைக் கவனிக்கப் போய்விடலாம். பொருளும் நமக்கு எந்தச் சிரமும் வைக்காமல் வீட்டை வந்தடைந்துவிடும்.

இப்படி நாம் பொருளை நேரில் பார்க்காமலேயே ஆர்டர் செய்வது எந்த நம்பிக்கையில்? இதுவரை ஆன்லைன் வர்த்தகம் நமது கையைக் கடிக்கவில்லை, நம்மை ஏமாற்றவில்லை என்ற நம்பிக்கையில். இந்த நம்பிக்கையை ஆன்லைன் தளங்கள் காப்பாற்றத் தவறிவிட்டால் பழையபடி நாம் கடைகளைத்தான் நாட வேண்டியதிருக்கும்.

இது நமக்கும் சிரமம்தான் சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டிவைத்துவிட்டு அலைய வேண்டும். ஆனால் ஆன்லைன் தளங்களுக்கு இது நல்லதல்ல. அவற்றின் வருமானமே பாதிக்கக்கூடிய செயல்.

பொன்முட்டையிடும் வாடிக்கையாளர்களின் வயிற்றை அறுக்கும் செயல் ஆரோக்கியமானது அல்ல. தம்பி, ‘ரொம்பக் கோபப்படாத, நிதானமா என்ன நடந்துச்சுன்னு சொல்லு அப்படிங்கிறீங்களா?’

போனவாரம் ஃபிளிப்கார்ட் ஆன்லைன் தளத்தில் ஒரு டிஸ்கவுண்ட் அறிவிச்சிருக்காங்க. டிஸ்கவுண்டுன்னு சொன்னதுமே நமக்கு முகத்துல பளிச்சுன்னு ஒரு சிரிப்பு வந்துருமே.

ஒரு பொருள் தேவையோ இல்லையோ விலை குறைவாகக் கெடச்சா உடனே வாங்கிருவோமே! ‘ஏய் நீ வேணும்னா அப்படி இருக்கலாம். ஆனா நாங்க அப்படியில்ல’ ரகத்தைச் சேர்ந்தவங்களா நீங்க இருந்தா என்ன மன்னிச்சிருங்க. உங்க அளவு எனக்கு ஞானம் இல்லீங்க. என்ன மாதிரியே ஒருத்தர் டிஸ்கவுண்டுன்ன உடனே டமால்னு ஃபிளிப்கார்ட் தளத்துல குதிச்சிட்டாரு. அவரு பெண்களுக்கான செருப்பு வாங்கலாம்னு முடிவு பண்ணி விலையைப் பார்த்திருக்காரு. ஒரிஜினல் ரேட் ரூ.799 தள்ளுபடி போக விலை ரூ.399. கிட்டத்தட்ட பாதிக்குப் பாதிதான் விலை.

பிறகென்ன இன்று நரி முகத்துல தான் முழித்திருக்கிறோம்னு நினைச்சு ஆர்டர் பண்ணப் போயிட்டாரு. அப்போ தான் செருப்பின் வாரில் விலையைக் கவனித்திருக்கார். அதுல விலையே ரூ.399ன்னு எழுதியிருக்கு. ஆளு சுதாரிச்சிட்டாரு. செருப்பு ஆர்டர் பண்ணல.

அடுத்த டேப்ல ஃபேஸ்புக்க ஓபன் பண்ணிட்டாரு. என்னம்மா இப்படிப் பண்ணுறீங்களேம்மா ரீதியில் ஃபிளிப்கார்டின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்திட்டாரு. அலறியடிச்சிட்டுப் பதில் போட்டுச்சு ஃபிளிப்கார்ட். இது எங்க வேலை இல்ல. வியாபாரிகளால் ஏற்பட்ட பிரச்சினை, ஆனாலும் சரிசெய்துவிடுகிறோம் என்று நிலைமையைச் சமாளித்திருக்குது.

நண்பரோட இந்த ஸ்டேட்டஸை ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவங்க ஷேர் பண்ணியிருக்காங்க. ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவங்க விரும்பியிருக்காங்க. ஏராளமானோர் கமெண்ட் போட்டிருக்காங்க. இப்படி ஒரு பொருளில் அல்ல பல பொருள்களில் மோசடி நடக்குதுன்னு எச்சரிச்சிருக்காங்க.

அதெல்லாம் சரிதான். ‘நாம என்ன செய்யணும்’னு கேக்குறீங்களா? கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. எல்லா ஆன்லைன் தளங்களையும் எப்பவும் சந்தேகப்பட முடியாது அதே நேரத்தில் எல்லாத் தளங்களையும் எப்பவும் நம்புவதும் அவசியமல்ல.

எந்த ஆன்லைன் தளம் டிஸ்கவுண்டுன்னு சொன்னாலும் கண்ணை மூடிட்டு நம்பிராதீங்க. அது நியாயமான டிஸ்கவுண்டா என்பதையெல்லாம் விசாரித்துவிட்டு ஆர்டர் பண்ணுங்க. நாம கொஞ்சம் மெத்தனமா இருந்துட்டா போதும்; தலையில் மொளகாவை அரச்சிருவாங்க. அத மட்டும் ஞாபகம் வச்சுக்கங்க.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x