Last Updated : 29 May, 2015 07:14 PM

 

Published : 29 May 2015 07:14 PM
Last Updated : 29 May 2015 07:14 PM

குடையும் செல்போன்!

பேருந்திலோ, ரயிலிலோ ஏறிவிட்டுச் சுற்றிப் பாருங்கள். உட்கார்ந்திருக்கும் அனைவரின் கையிலும் செல்போன் ஒரு துணை உறுப்பாகத் தென்படும். சிலர் ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். சிலர் இசையில் மூழ்கிக் கரைந்து கொண்டிருப்பார்கள்.

“செல்போன் என்றாலே குடைச்சல்தான்பா” என்று புலம்புபவர்கூட எப்போதும் செல்போனைத்தான் குடைந்துகொண்டிருப்பார். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. செல்போனுடன் இணைந்து இயங்கக்கூடிய குடைகள் வந்துவிட்டன.

அந்தக் குடையையும் மொபைல் போனையும் ப்ளூடூத் தொழில்நுட்பத்தால் இணைத்துக்கொள்ளலாம். இணையத்தை வீட்டுக்குள் கொண்டுவரும் மோடத்தின் வைஃபை தொழில்நுட்பத்தில் இந்தக் குடைகளை இணைத்துக்கொள்ளலாம். குடை வழியாக இசையைக் கேட்டு ரசிக்கலாம். செல்போன் அழைப்புகளைக் குடை வழியாகவே பெறலாம். குடையில் டயல் செய்து செல்போன் போலவே பேசவும் செய்யலாம்.

ஐந்தாக மடித்து பாக்கெட்டுக்குள் வைத்துக்கொள்கிற மாதிரியான நவீனமான நானோ குடைகளும் வந்துள்ளன. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்களான விசில்கள், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் துப்பாக்கிகள், ஆகியவையும் இந்தக் குடைகளில் இருக்கின்றன. டெப்லான் எனும் கனிமப் பூச்சு பூசப்பட்டுள்ளதால் இந்தக் குடைகள் தண்ணீரில் நனையாது. சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்களைத் தடுக்கும் வகையிலான குடைகளும் தயாராகின்றன.

இவ்வளவும் எங்கே நடக்கிறது? நமது பக்கத்து மாநிலம் கேரளத்தின் குடைகளில்தான் தற்போது அந்த பேஷன். இந்தக் குடைகளுக்குத் தேவையான கச்சாப்பொருள்கள் மட்டும்தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. மற்றவை உள்ளூர்ச் சரக்குகள்தான். இவற்றின் கலவையாகத்தான் கேரளத்தின் குடைகள் ஜொலிக்கின்றன.

கொளுத்தும் வெயிலில் குடை இல்லாமல் வெளியே தலைகாட்ட முடியாது. ஒரு கையில் குடை இன்னொரு கையில் மொபைல் என இனி அல்லாடத் தேவையில்லை. அதான் குடையும் மொபைலும் ஜோடி சேர்ந்தாச்சே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x