Last Updated : 15 May, 2015 02:31 PM

 

Published : 15 May 2015 02:31 PM
Last Updated : 15 May 2015 02:31 PM

நீங்க சொன்னா சரிதான் அய்யா!

வெகுளி வெள்ளச்சாமி எப்போதுமே அந்த ரயில்வே லைன க்ராஸ் பண்ணித்தான் வருவான். ரோட்டைச் சுற்றிப் போனா கூடுதலா ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டியதிருக்கும் என்பதாலும் ரயில்வே லைன ஒட்டியுள்ள சுவர் உடைஞ்சு போயிட்டதாலும் எல்லோருமே அந்த வழியாத்தான் வருவாங்க, போவாங்க. அன்றும் எப்போதும் போல வாத்தியார் பாட்ட கேட்டுக்கிட்டே வெள்ள ரயில்வே லைன கிராஸ் பண்ணி வழக்கம்போல பிளாட்ஃபார்ம் வழியாப் போனான். அவனோட மொத்தம் நாலு பேர் அப்படிப் போனாங்க.

எதிரே இரண்டு பேர் வந்தாங்க. அதுல ஒருத்தர் காக்கி யூனிஃபார்ம் போட்டிருந்தாரு. பார்த்த உடனே தெரிஞ்சிருச்சு. யாரோ அதிகாரிங்கன்னு. வெள்ளைக்கு உடம்பெல்லாம் நடுங்கிருச்சு. அவங்க கரெக்டா வெள்ளைட்ட வந்து ‘எங்க இருந்து வர்ற’ன்னு கேட்டாங்க. வெள்ளை, ‘வீட்ல இருந்துதான் அய்யா’ன்னு சொன்னான். கூட இருந்தவங்க சிரிச்சிட்டாங்க. ‘என்ன நக்கலா’ன்னு அதிகாரி கேட்டாரு.

‘இல்ல அய்யா உண்மையிலேயே வீட்டுல இருந்துதான் வர்றேன்’னு வெள்ளை அப்பாவியாச் சொன்னான். கடுப்பாயிட்டாரு அதிகாரி. அவரு மொறச்சதப் பார்த்து வெள்ள பயந்துபோயிட்டான். என்ன சொல்றதுன்னே அவனுக்குத் தெரியல. மலங்க மலங்க முழிச்சான்.

‘எப்படி வந்த’ன்னு அடுத்த கேள்வி கேட்டாரு. ‘லைன் க்ராஸ் பண்ணித்தான் அய்யா’ன்னான் அவன். ‘அப்படி வருவது சட்டப்படி குற்றம். தெரியுமா?’ன்னார் அதிகாரி. ‘அப்படியாய்யா தெரியாதுய்யா’ன்னு சொன்னான் வெள்ள. கூட இருந்தவங்க ‘கொல்’லுன்னு சிரிச்சாங்க. ‘என்ன திமிரா?’ன்னு கையை ஓங்கினாரு அதிகாரி. வெள்ளைக்கு உடம்பெல்லாம் நடுங்கிருச்சு. ‘இல்லய்யா எப்போதுமே அப்படித்தான் வருவேன்யா’ன்னான். ‘அப்படியா ஒரு நாள் ஃபைன் கட்டினா எல்லாம் சரியாப் போயிரும், கொடு போன’ன்னு அவனிடம் இருந்து மொபைலைப் புடுங்கிக்கொண்டார் அதிகாரி. எவ்வளவு அய்யா ஃபைனுன்னு பையில் இருந்த ஐந்து பத்தைப் பிதுக்கிப் பார்த்தான் வெள்ளை.

சீக்கிரம் சொல்லுங்கய்யா. ‘வேலைக்கு நேரத்துக்குப் போவாட்டி ஒரு நாள் சம்பளம் போயிருமய்யா’ன்னு பரிதவித்தான். ‘ஓ தொரைக்கு உடனே ஃபைன் கட்டிட்டு வேலைக்குப் போவணுமோ’ அதிகாரி கிண்டலாகவும் கோபமாகவும் சொன்னார். ஆமாங்கய்யான்னு வெகுளித்தனமாகச் சொன்னான் வெள்ள. ‘அதெல்லாம் கோர்ட்டுக்குப் போயித்தான் கட்டணும் சாயங்காலம் ஆயிரும்.’

ஆபீஸுக்கு போன் பண்ணிச் சொல்றன்யா, போனக் குடுங்கன்னான் வெள்ளை. தப்பையும் பண்ணிட்டு உனக்கு போன வேற தருவாங்களா? அதிகாரி அவனை மேலும் கீழும் பார்த்தார். சரிய்யா போனத் தராட்டி பரவாயில்ல நீங்களே எங்க ஆபீஸுல சொல்லிருங்கய்யான்னான் வெள்ள. நீ அடிபட்டாதான் சரிப்பட்டுவருவன்னு நினைக்கிறேன்னு சொன்னார் அதிகாரி. எதுக்கு வம்புன்னு வெள்ளை வாயை மூடிக்கிட்டான்.

‘கோர்ட்ல நீதிபதி லைன் கிராஸ் பண்ணினீங்களான்னு கேப்பாங்க, ஆமான்னு சொல்லணும், வேற எதுவும் சொல்லக் கூடாது புரிஞ்சுதான்னார் அதிகாரி. அய்யா அந்தச் சுவரு உடஞ்சு கெடக்கிறதாலதான அய்யா இப்படி வந்தேன் அதை ஆறேழு வருஷமா அடைக்காமலே வச்சிருக்கீங்களே அய்யான்னு வெள்ளை கேட்டான்.

அதிகாரிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. எங்களையே கேள்வி கேக்குறியான்னு கோபப்பட்டார். சட்டப்படி என்ன செய்யணும்னு எங்களுக்குத் தெரியும். நீதின்னா நீதிதான். தப்பு செஞ்சிட்டுத் தப்பிக்க முடியாது தெரியுமான்னு பொங்கி வழிந்தார். ‘நீங்க சொன்னா சரிதான் அய்யா’ன்னான் வெள்ளை.









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x