Published : 10 Apr 2015 01:23 PM
Last Updated : 10 Apr 2015 01:23 PM

வானம் எனக்கொரு ஓவியம் தரும்

இங்கே இடம்பெற்றுள்ள படங்களை வாய்பிளந்து ஆச்சரியமா பார்க்கறீங்களா? இதெல்லாம் நாசா எடுத்த படங்கள் இல்ல. வானியல் மையத்தில் இருந்து பவர்ஃபுல் கேமரா மூலம் எடுத்ததும் அல்ல. இது போல ஒரு படத்தை நீங்களே எடுக்க முடியும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த காட்டுயிர்-இயற்கை ஒளிப்படக் கலைஞர் பாலாஜி லோகநாதன்.

"இது இயற்கையோட விளையாட்டு. நமது பால்வெளி மண்டலத்தில் இயற்கை தீட்டியிருக்கிற மாஸ்டர் பீஸ் ஓவியங்கள்னு இந்தக் காட்சிகளைச் சொல்லலாம். எல்லோரும் வாழ்க்கைல ஒரு முறையாவது, நிஜமாவே இருட்டா இருக்குற பகுதியிலிருந்து வானத்தை ஒரு முறையாவது பார்க்கணும். அப்போ இது போன்ற அற்புதமான அனுபவம் கிடைக்கும்" பாலாஜியின் வார்த்தைகள் பரவசத்தில் மிதக்கின்றன.

தெளிந்த வானம்

நாம் இருக்கும் பால்வெளியின் மையத்தை (Galactic Centre) படம் எடுக்கிறதுக்கு விண்வெளிக்குப் போக வேண்டிய அவசியமில்ல. அஸ்ட்ரோ போட்டோகிராஃபியின் அடிப்படைகள் புரிஞ்சாப் போதும். பெங்களூருக்குப் பக்கத்தில் உள்ள ஜெயமங்கலி வெளிமான் சரணாலயத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டது.

அப்படியென்றால், எல்லா இடங்களிலிருந்தும் பால்வெளியின் மையத்தைப் பார்க்க முடியுமா? முடியாது, அதற்குக் காரணம் நாம் இருக்கும் இடங்களில் இரவில் 95 சதவீதம் நியான், மெர்க்குரி என பவர்ஃபுல் விளக்குகளை எரியவிட்டு ஒளி மாசுபாட்டை உருவாக்கி விடுகிறோம். அதனால் இரவிலும் கும்மிருட்டே இல்லாமல் போய்விட்டது.

சின்ன வயதில் கிராமத்துக்குச் செல்லும்போது, வெட்டவெளிகளின் மேலே கூட்டம் கூட்டமாக வானில் தெரியும் நட்சத்திரங்களை எண்ணியிருப்போம், இல்லையா? அதுபோல முழுக்க இருட்டாக இருக்கும் பகுதிக்குப் போனால், வானத்தின் வண்ணங்களையும் நுணுக்கங்களையும் ரசிக்கலாம். குறிப்பிட்ட பகுதியில் காற்றில் தூசி மாசுபாடும் இருக்கக் கூடாது. இப்படி இருந்தால் பெருமளவு நட்சத்திரங்களை, கோள்களைக்கூட வெறும் கண்களால் பார்க்க முடியும்.

கொஞ்சம் திட்டமிடல்

பால்வெளியின் மையத்தைப் பார்க்கக் கொஞ்சம் அறிவியல் அறிவும் திட்டமிடலும் இருந்தால் போதும். நாம் வாழும் பகுதியில் பால்வெளியின் மையம் எப்போது தெரியும், வருஷத்தோட எந்தக் காலத்துல தெரியும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். முதலில் ஸ்டெல்லாரியம் அல்லது ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்களான ஸ்டார் சார்ட், கூகுள் ஸ்கை மேப்ஸ் மூலம் நம்முடைய பகுதியில் எந்தத் திசையில், எந்த நேரத்தில் பால்வெளி புலப்படும் என்று தெரிந்துகொள்ளலாம்.

பருவமழைக் காலத்தில் வானத்தை மேகங்கள் மறைத்துவிடும் என்பதால், பால்வெளியைப் பார்க்க வாய்ப்பில்லை. வானம் தெளிவாக இருக்கும் நாளாகப் பார்த்து, வெட்டவெளியில் இரவு முழுக்கக் காத்திருக்கத் தயாராக இருக்க வேண்டும்.

அற்புதக் காட்சி

"இயற்கையோட அற்புதத்தை ரசிக்கிறதுன்னு முடிவான பிறகு, எந்தச் சாகசத்துக்கும் தயாரா இருக்கணும், இல்லையா? நட்சத்திரங்கள் இறைந்து கிடக்கும் வானத்துக்குக் கீழே காத்துக் கிடக்கிறது சின்ன வயசுலேர்ந்தே எனக்குப் பிடிக்கும். பெங்களூருலயும் அப்படித்தான் இரவு முழுக்கக் காத்துக் கிடந்தோம். நல்ல வேளையா, சூரியன் எட்டிப் பார்க்கிறதுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பால்வெளியின் மையம் தலையைக் காட்டுச்சு. விடுவோமா, பட் பட்னு கிளிக் பண்ணிட்டோம்.

பால்வெளியின் அழகை வார்த்தை களால வர்ணிக்க முடியாது. அங்கே கொட்டிக் கிடக்கும் நுணுக்கமான வண்ணங்களையும், அழகையும் முடிஞ்சவரை கேமராவுல பிடிச்சுட்டு வர்றது நம்ம கைலதான் இருக்கு" என்கிறார் பாலாஜி.

டெலஸ்கோப்போ, பைனாகுலரோ இல்லாமல் வெறும் கண்களால் பால்வெளியைப் பார்க்க முடியும், சாதாரண டிஜிட்டல் கேமரா மூலமாவே இது போன்ற படமும் எடுக்க முடியும் என்கிறார்.

அரிய தருணங்கள்

தனியார் நிறுவன ஊழியரான பாலாஜி லோகநாதன் வேலை நேரம் போகக் காடுகள், மலைகளைத் தேடி கேமராவுடன் புறப்பட்டுவிடுகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் இவருடைய மனைவி அனுஷா டிஜிட்டல் கேமரா கொடுத்தார். ஆவணப் பட இயக்குநரான நண்பர் ரமேஷ் கொடுத்த ஊக்கத்தில் படமெடுக்க ஆரம்பித்தார்.

"போட்டோகிராஃபி மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டதற்குக் காரணம் இயற்கைதான். எல்லோராலும் பார்க்க முடியாத அழகைப் பதிவு பண்ணி, மத்தவங்களுக்குக் காட்டணுங்கிறதுக்காகத்தான் போட்டோ எடுக்கிறேன். கடந்து செல்லும் இந்தக் கணத்தில் வெளிப்பட்ட உணர்வைக் காலாகாலத்துக்கும் கடத்தும் படங்களை நான் பெரிசா நினைக்கிறேன். ஒவ்வொரு போட்டோ மூலமாகவும் இந்த உலகத்தின் வித்தியாசமான தன்மைகளைக் கொண்டாட விரும்புகிறேன்" என்று கூறும் இவர், தன் படங்களுக்காக விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

விருதுகள்

நேஷனல் ஜியாகிரஃபிக் வாராந்தரச் சிறப்பு ஒளிப்படங்களில் இவருடைய படங்களும் இடம்பிடித்திருக்கின்றன. இவர், கர்நாடகா சூழலியல் நட்பு சுற்றுலா வாரியத்தின் சான்றிதழ் பெற்ற இயற்கையியலாளர்/தன்னார்வலரும் கூட.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல நாட்டின் மிகப் பெரிய காட்டுயிர் ஒளிப்படக் கலை பரிசாகக் கருதப்படும், சாங்சுவரி ஏசியா மூன்றாவது பரிசைக் ‘கிளியை வேட்டையாடும் அண்டங்காக்கைகள்' படத்துக்காக இந்த ஆண்டு பெற்றிருக்கிறார். அதே படத்துக்கு நேச்சுரல் கேப்பிட்டல் விருதும், தேசிய அளவிலான ராஜு ஹர்கரே ஒளிப்படப் போட்டியில் 3-வது பரிசும் கிடைத்திருக்கின்றன.

இப்படி ஒரு பக்கம் இயற்கை சார்ந்து பரிசுகளை அள்ளும் பாலாஜி, என்னுடைய படங்கள் மூலமாக இயற்கையின் நுணுக்கம், அற்புதத்தை ஒருவர் புதுசா புரிந்துகொள்வதைக்கூட ரொம்ப பெரிசா நினைக்கிறேன் என்கிறார்.

வேட்டையாடும் காகங்கள்

“காக்கா, மிச்சமிருக்கும் சாப்பாட்டைத் தேடிச் சாப்பிடும்ணுதான் நினைக்கிறோம். ஆனா, காக்கா வேட்டை ஆடும்னு நான் படிச்சிருக்கேன். நிஜத்துல பார்த்தது கிடையாது. ராஜஸ்தானில் உள்ள ரந்தம்போர் சரணாலயத்துல புலியத் தேடிப் போய்க்கிட்டிருந்தோம். ஒயில்ட்லைஃப் போட்டோகிராஃபர்களுக்குப் புலியைப் படம் எடுக்கிறதுதானே கனவு. ஆனா, அதைவிடவும் முக்கியமான ஒரு படம் கிடைச்சது.

ஒரு பச்சைக் கிளிய ரெண்டு அண்டங் காக்கா வேட்டையாடுறதப் பார்த்தப்ப ஆச்சரியமாவும், உடனே ஏதாவது செய்யணும்னும் தேணுச்சு. ரெண்டும் புத்திசாலித்தனமா செயல்பட்டுச்சு. ஒரு காக்கா பச்சைக்கிளியோட கவனத்தைத் திசை திருப்புச்சு. இன்னொன்னு அதைக் குத்திச் சாய்ச்சு, இரையாக்குச்சு. காட்டுக்குள் ஒவ்வொரு உயிரினமும் அதுக்குத் தெரிஞ்ச வகையில இரை தேடும்.

அதை நாம தடுக்கக் கூடாதுங்கிற இயற்கையோட பாலபாடத்தைப் படிச்சிருந்ததால, அந்த அபூர்வக் காட்சிய படமா மட்டும் பதிவு பண்ணினேன். அந்த அரிய தருணத்தைப் பதிவு செஞ்சதற்காக சாங்சுவரி ஏசியா விருது கிடைச்சது ரொம்ப பெரிய சந்தோஷம்” என்கிறார் பாலாஜி. பாலாஜி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x