Last Updated : 13 Apr, 2014 11:01 AM

 

Published : 13 Apr 2014 11:01 AM
Last Updated : 13 Apr 2014 11:01 AM

மனதுக்கு இல்லை வயது!

நம் நாட்டில் 60 வயதைக் கடந்தவர்கள் 8 கோடியே 60 லட்சம் பேர். இது மொத்த மக்கள்தொகையான 121 கோடியில் 7.1 சதவீதம். 60 வயதைக் கடந்தவர்களை முதியவர்கள் என்று ஐ.நா. சபை வகைப்படுத்துவதால் இந்தக் கணக்கு. முதியவர் யார் என்ற கேள்விக்கு பல பதில்கள் உள்ளன.

50 வயது முதலே முதுமை தொடங்குவதாகச் சொல்கிறது உலக சுகாதார அமைப்பு. ஆனால், முதுமை என்பதை வயதின் மூலம் அறிவதைவிட, வாழ்க்கையில் ஒருவரது உடல்நிலையில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையிலும் அவரது செயல் தன்மையின் அடிப்படையிலும் புரிந்துகொள்ள வேண்டும். முதியவர்களின் உடலில் செல்களைப் புதுப்பிக்கும் திறன் குறைவாக இருக்கும். இதனால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாகவே இருக்கும்.

இன்னொரு பக்கம்.. பார்வை, கேட்புத் திறன் உள்ளிட்ட உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கும். ஒவ்வொரு உணர்வு உறுப்புகளும் வெவ்வேறு காலத்தில் இதுபோல படிப்படியாக உணர்வுகளை இழக்கும். ஆனால், இது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். இதை வைத்தும் முதுமையை உணரலாம். முன்பு செய்த கடினமான வேலைகளைத் தவிர்த்து, எளிமையான வேலைகளைச் செய்வது அல்லது மெதுவாக வேலைகளைச் செய்வது என்பதும் முதுமையின் இயல்பே. வயதாவதைப் பற்றிய அறிவியலுக்கு ஜெரான்டோலாஜி (Gerontology) என்று பெயர். முதுமையில் வரும் நோய்களைப் பற்றிய படிப்புக்கு ஜெரியாட்ரிக்ஸ் (Geriatrics) என்று பெயர்.

முதுமையின் பிரதான பிரச்சினை தனிமை. அது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முதுமையை அதிகரிக்கச் செய்கிறது. முதுமையின் அடிப்படை இலக்கணங்கள் இவை. இனி எப்படி முதுமையை சந்தோஷமாகக் கழிக்கலாம் என்பதை தினமும் பார்ப்போம்.

அதெல்லாம் சரி.. சென்னையில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உங்கள் பெயர், முகவரி, வயது, தொடர்பு எண், அருகில் உள்ள காவல் நிலையம் உள்ளிட்ட விவரங்களைப் பதிந்துவிட்டீர்களா? இல்லை எனில் உடனே செய்யுங்கள். அது மிக எளிது. பாதுகாப்பும்கூட. காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை 044 -23452320 என்கிற தொலைபேசி எண்ணுக்கு பேசி உங்கள் விவரங்களைப் பதிவு செய்யலாம். தொலைநகல் (ஃபேக்ஸ்) மூலம் பதிவு செய்ய விரும்புவோர் 044 - 25615028 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். இதன்மூலம் அடிக்கடி உங்கள் முகவரிக்கு வந்து உங்கள் உடல்நலம், பாதுகாப்பு குறித்து விசாரித்து செல்வார்கள். ஏதேனும் பிரச்சினை எனில் நடவடிக்கை எடுப்பார்கள். எனவே, சென்னையில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்கள் ‘யாரும் இல்லையே’ என்று கவலைப்படாதீர்கள். காவல் துறை உங்களுக்கு கைகொடுக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x