Last Updated : 28 Nov, 2014 12:06 PM

 

Published : 28 Nov 2014 12:06 PM
Last Updated : 28 Nov 2014 12:06 PM

ஆறே மாதத்தில் அறிவாளி

எல்லாரும் தன்னை முட்டாள்னு நினைக்கிறாங்களோன்னு வெகுளி வெள்ளச்சாமிக்கு மைல்டா ஒரு சந்தேகம் வந்துச்சு. நாமளும் அறிவாளியாகிறனும்னு முடிவுபண்ணிட்டான். வீட்டில் அவனோட மனைவி பார்க்குற சீரியல்ல ஆறு மாசத்துல கதாநாயகன் அறிவாளியாகுறான்.

தமிழே தட்டுத் தடுமாறி பேசுற ஆளு ஆங்கிலத்துல பொளந்துகட்டுறான். இன்னொரு சீரியலில் ஒரு பெண்ணு கல்யாணம் ஆன பின்னாடி ஆனா ஆவன்னால்லாம் கத்துக்குறா. பி.எச்டி. படிச்சிருக்கும் தன்னோட பொண்டாட்டி அத விழுந்து விழுந்து பார்க்குறா. உச்சு கொட்டுறா. அப்படி இருக்கும்போது தான் ஏன் அறிவாளி ஆகக் கூடாதுன்னு நினைச்சான். போதாக் குறைக்கு அறிவாளின்னு சொல்லப்படுற ஆள்களோட பேச்சுகள பேப்பரில் படிச்சுப் பார்க்கும்போது அவனைவிட அவங்கல்லாம் மோசமா பேசுறதுபோலதான் அவனுக்குத் தெரிஞ்சுது. அதனால் அறிவாளி ஆவது ஈஸியான வேலையாத்தான் இருக்கும்னு முடிவுக்கு வந்துட்டான்.

அவனோட நண்பர் வீராசாமிட்ட போயி ஆலோசனை கேட்டான். வெள்ளயப் பொறுத்தவரை வீரா வற்றாத அறிவு ஆறு. எதிரில் ஆளே இல்லாட்டிக்கூட அலைகடலென மக்கள் திரண்டிருப்பது போல நினைத்துக்கொண்டு 26 எழுத்துக்களக் கொண்ட ஆங்கிலத்துல பிச்சு ஒதறுவான். தமிழ்னா கேட்கவே வேண்டாம் 247 எழுத்தாச்சா. கொளுத்திருவான். அவன் பேச்சு நடக்கிற இடங்களில் ஃபயர் சர்வீஸ் வண்டிய நிப்பாட்டுற அளவுக்குப் பேச்சுல பொறி பறக்கும்னு பேசிக்குவாங்க.

அப்படி ஒரு ஆவேசமும் ஆற்றலும் இருக்கும் பேச்சுல. ஒரு டம்ளர் தண்ணி வேணும்னாகூட முல்லை பெரியாறு, காவிரின்னு சமூக விஷயங்களத் தொட்டுத் தான் தொடங்குவான். உலக வரலாறெல்லாம் அவனுக்கு அத்துப்படி. தூக்கத்துல எழுப்பிக் கேட்டாக்கூட ரோமாபுரியின் சரித்திரத்தை ரத்தம் சொட்டச் சொட்ட சொல்லுவான் பாவிப்பய. தாய்ப்பாலு குடிச்சு வளராம வரலாறையே வாரி வாரிக் குடிச்சே வளர்ந்திருப்பான்போல. அப்படியொரு வரலாற்று ஞானம் வீராவுக்கு. தன்னோட அறிவ நம்பி ஒரு எலக்‌ஷனில் வார்டு மெம்பரா போட்டிபோட்டான். பாவம் ஒரு ஓட்டுகூட அவனால வாங்க முடியல. அவனோட ஓட்டுச் சீட்ட பெட்டியில போடுற சமயத்துல, உள்ளுக்குள்ள வந்த டிவிக்காரங்கட்ட பேசிட்டே அத கையோட எடுத்துட்டு வந்துட்டான்.

வீராவிடம் கேட்டதுக்கு அவன், தன்னைப் புத்தகங்கள்தான் இந்தக் கதிக்கு ஆளாக்குச்சுன்னு சொன்னான். அதனால நல்ல புத்தகத்தப் படிச்சா போதும் நினைத்தது நடக்கும்னான். உனக்கு ஏண்டா நினைச்சது நடக்கலன்னு ஒரு சின்ன கேள்வி வெள்ளைக்கு வந்துச்சு. ஆனா டைமிங் சரியில்ல, கேட்க வேண்டாம்னுட்டு கம்முன்னு இருந்துட்டான். முதலில் ஒரு புத்தகக் கடைக்குப் போனான் வெள்ளை.

“ஆறு மாசத்துல அமெரிக்க அதிபர் ஆவது எப்படி?” ஒபாமாவே வாசித்துப் பின்பற்றிய தமிழ் நூல்ங்கிற புத்தகத்துக்குப் பின்னால் முப்பதே நாள்களில் மூன்று மொழிகள் என்று ஒரு புத்தகம் இருந்துச்சு. அந்த மொழிகள்ல இங்கிலிஷும் ஒண்ணு. வெள்ளைக்கு ஆங்கிலம் கொஞ்சம் வீக்குதான் ஆனா கணக்கு ஸ்ட்ராங். முப்பது நாளில் மூன்று மொழின்னா ஒரு மொழிக்குப் பத்து நாள். ஆக பத்தே நாளில் இங்கிலிஷ் படிச்சுட்டு வீராசாமி மாதிரி நரம்பு வெடிக்க ஆங்கிலத்தில் பேசணும்னு துடிச்சான்.

நாலஞ்சு புத்தகத்த வாங்கிட்டு வந்துட்டான். ஒரு தடவை படிக்கிறதவிட நாலஞ்சு தடவ படிக்கிறது நல்லதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்கல்லா? அதனால நாலஞ்சு தடவ படிக்கணுங்கிற ஆசையிலதான் அத்தனையையும் வாங்குனான். ஒரே புத்தகத்த திருப்பி திருப்பிப் படிக்கிறதவிட

வேற வேற புத்தகத்தை படிக்கிறது நல்லதுங்கிறதால அப்படி ஒரு ஐடியா பண்ணினான். எல்லாப் புத்தகத்தையும் விடிய விடிய படிச்சான். ஆனாலும் படிக்கிற வெறி அவனுக்கு அடங்கவே இல்ல. முழுக்க படிச்சு முடிச்ச உடனே புத்தகத்தை கரைச்சே குடிச்சான். முதலில் கொஞ்சம் குமட்டுச்சு. ஆனா அறிவாளி ஆகணும்னா சில கஷ்டம் இருக்கத்தானே செய்யும்னு, தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கிட்டான்.

உள்ளுக்குள்ள குறுகுறுன்னுதான் இருந்துச்சு. திடீர்னு வாந்தி வர்ற மாதிரியிருந்துச்சு. குபுக்னு வாந்தியே எடுத்துட்டான். ஆனா வந்து விழுந்ததெல்லாம் இங்கிலிஷ் லெட்டர்ஸா இருந்துச்சு. தனக்குள்ள ஆங்கிலம் பரவியிருச்சுங்கிற சந்தோஷத்துல தலை கால் புரியாம ஆடினான். வீட்டுக் கூரை, நடு ரோட்ல, பஸ்ஸுக்கு முன்னாலன்னு எங்க எங்கயோ சந்தோஷமா ஆடுனான்.

அறிவாளி ஆயிட்டோம்… இனி டிவியில பேசலாம், பத்திரிகைல கருத்து சொல்லலாம், இப்படியெல்லாம் நினைக்கும்போதே வெள்ளைக்கு பூரிப்பா இருந்துச்சு. ஆனா அதுக்கும் அறிவுக்கும் என்னடா சம்பந்தம்னு அவனோட நண்பன் ஒருத்தன் வெள்ளைட்ட கேட்டான். அப்படியா, அப்பன்னா இந்த அறிவ வச்சுட்டு என்ன பண்றதுன்னு வெகுளியா கேட்டான் வெள்ள. கேன்சர் வந்தாக்கூட அறுவை சிகிச்சை பண்ணி தூக்கிரலாம். ஆனா இத வச்சுக்கிட்டு ஒரே ரோதனைதான்னு சொல்லிட்டுப் போயிட்டான் அவனோட ஃப்ரண்ட். வெள்ளைக்குப் பயமா போயிருச்சு. தன்னோட டிரஸ் அழுக்கா இருக்கிற மாதிரி அசிங்கமா தோணுச்சு.

முன்னால இப்படி எல்லாம் யோசிச்சதே இல்லயே. அறிவ எப்படியும் போக்குறதுக்கு என்ன பண்ணலாம்னு நியூஸ் சேனலில் எடிட்டரா இருக்கும் ஃப்ரண்டுட்ட கேட்டான். பேசாம என்னைப் போல் டிவியில சேர்ந்துரு, தானா சரியாயிரும்னு சொன்னான். அது நல்ல யோசனைன்னு ஒரு டிவி சேனலுக்கு இண்டர்வியூக்குப் போயிருக்கான் வெள்ளை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x