

“அம்மிட்டி இங்க ஆ, சோச்சி இன்னு.”
“அவ்வக் கூடாது, குச்சிட்டு சச்ச போத்துக்கணும்.”
“அப்பாட்டிக்கு ம்மாத் தா.”
“உச்சி போட்டியாடி என் இஞ்ஜாலக் குட்டி.”
குழந்தையிடம் அவனுடைய மொழியில்தான் என் மனைவி பேசுவாள். எங்கிருந்து இவ்வளவு சொற்களைக் கண்டுபிடிக்கிறாள் என்பது ஆச்சரியமாக இருக்கும்.
அவள் இப்படியெல்லாம் கொஞ்சுவதைக் கேட்க ஆசையாக இருந்தாலும், குழந்தையோடு இதே மாதிரி பேசிக்கொண்டிருந்தால், மொழியை அவன் சரியாகக் கற்றுக்கொள்வது எப்படி என்ற பயமும் எனக்கு வந்தது. ஒருநாள் அவளிடம் கேட்டுவிட்டேன்:
“ஏம்மா, அவனோட நீ இதே மாதிரி பேசிக்கிட்டிருந்தா, நாம பேசுற மாதிரி பேசுறதுக்கு அவன் எப்பக் கத்துக்குவான்?”
முகத்தை ஒரு நொடிப்பு நொடித்துவிட்டு அவள் சொன்னாள்: “நாம பேசுறத குழந்த கத்துக்கறது என்ன அவ்வளவு முக்கியமா? குழந்த பேசுற மொழிய நாம கத்துக்கறதுதான் முக்கியம்.”