Last Updated : 10 Oct, 2014 02:00 PM

 

Published : 10 Oct 2014 02:00 PM
Last Updated : 10 Oct 2014 02:00 PM

எப்படி இருக்கிறது ‘ஹாஃப் கேர்ள் ஃப்ரெண்டு’?

இளைஞர்களின் எழுத்தாளர் என்று கொண்டாடப்படும் சேத்தன் பகத்தின் புதிய நாவல் ‘ஹாஃப் கேர்ள்ஃப்ரெண்டு’ சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சேத்தன் வெளியிடும் நாவல் இது என்பதால், இந்நாவலை ஆர்வத்துடன் பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இன்னும் சொல்லப்போனால், ஃபிளிப்கார்ட்டிலும், அமேசானிலும் முன்பதிவு செய்துவிட்டு, நாவல் வெளியான முதல் நாளே வாங்கி, அதைப் படித்து முடித்திருக்கிறார்கள் சிலர்.

எதைப் பற்றிய நாவல்?

இந்தியாவின் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான பிஹாரில் இருந்து ஆங்கிலம் தெரியாமல் டெல்லிக்கு படிக்கும் வரும் ‘மாதவ் ஜா’ என்னும் இளைஞன் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள்தான் இந்நாவலின் கதைக்களம். மாதவின் கேர்ள்ஃப்ரெண்டு ரியா டெல்லியில் பெரிய தொழிலதிபரின் மகள்.

இவர்கள் இருவரையும் இணைக்கும் ‘பேஸ்கட் பால்’ விளையாட்டு, காதல் குழப்பங்கள், ஆங்கிலம் தெரியாததால் ஏற்படும் பிரச்சினைகளைச் சுற்றி நகர்கிறது இந்நாவல். “ஹாஃப் கேர்ள்ஃப்ரெண்டு என்ற பெயரைக் கேட்டவுடன் இந்த நாவல் ‘ஃப்ரெண்ட்ஸ் வித் பெனிஃபெட்ஸ்’ வகையாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், வழக்கமான காதல் நாவலாக மட்டுமல்லாமல் பேஸ்கட் பால், கிராமப்புற கல்வி, ஆங்கிலம் போன்றவற்றை கையாண்டிருந்த விதம் பிடித்திருக்கிறது”, என்கிறார் எம்.ஓ.பி. வைஷ்ணவ கல்லூரியின் மாணவி பேராத்துச்செல்வி.

ஆங்கிலம் மிரட்டுமா?

பின்தங்கிய பின்னணியைக் கொண்ட இளைஞர்கள் நகரங்களில் பெரிய கல்லூரிகளில் படிக்க வரும்போது எதிர்கொள்ளும் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள், கலாசார வேறுபாடுகள் போன்றவற்றை சேத்தன் இந்நாவலில் கையாள்கிறார். உலக மொழியாக மாற்றப்பட்டுவிட்ட ஆங்கிலம் இன்றளவும் எப்படி இளைஞர்களை மிரட்டிக்கொண்டிருக்கிறது என்பதை இந்நாவல் விளக்கியிருக்கும் விதம் நிதர்சனத்தை உணர்த்துகிறது.

கல்லூரியின் நேர்காணலில் ஹிந்தியில் பேசலாமா என்று கேட்கும் மாதவ் ஜாவிற்கு மவுனத்தை மட்டுமே பதிலாகக் கொடுக்கும் பேராசிரியர்களை இந்தியக் கல்வி முறையால் மட்டுமே உருவாக்க முடியும். மொழித்திறனை வைத்து அறிவை எடைபோடும் கல்விமுறையைக் கேள்விக்குள்ளாக்க வேண்டியதன் அவசியத்தை இந்நாவல் புரியவைக்கிறது. தன் கிராமத்துப் பள்ளிக்கு வரும் பில் கேட்ஸை வரவேற்பதற்காக மாதவ் ஆங்கிலம் கற்றுக்கொள்வது இந்நாவலின் முக்கிய அம்சம்.

ஓவர் டோஸ் காதல்

பொதுவாகவே சேத்தன் பகத்தின் எல்லா நாவல்களிலும் காதல் ஓவர் டோஸாகவே இருக்கும். ஹாஃப் கேர்ள்ஃப்ரெண்டும் இதற்கு விதிவிலக்கல்ல. மாதவ், ரியாவின் நீளமான காதல் பகுதிகள் நாவலை ஒரு கட்டத்தில் நீர்த்துப்போய்விடச் செய்கின்றன. பொய் சொல்லும் காதலி, உருகி உருகிக் காதலிக்கும் காதலன், காதலை எதிர்க்கும் அம்மா, காதலியைத் தேடி அமெரிக்கா செல்லும் காதலன் எனத் திரைப்படங்களில் பார்த்து பார்த்து சலித்துப்போன அதே காதல் கதையைதான் ஹாஃப் கேர்ள் ஃபிரண்டிலும் சொல்லியிருக்கிறார் சேத்தன் பகத். “பாலிவுட் திரைப்படங்களுக்கான திரைக்கதையை நாவலாக எழுதுவதைத்தான் சேத்தன் பகத் தொடர்ந்து செய்துவருகிறார்.

ஆரம்பத்தில் அவருடைய நாவல்கள் திரைப்படங்களாக எடுக்கப்படுவதை இளைஞர்கள் ரசித்தாலும் இப்போது அதுவே ஒரு அலுப்பையும் ஏற்படுத்துகிறது. எல்லா நாவல்களும் திரைப்படங்களாக வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே தோன்றுகிறார்”, என்கிறார் சென்னையைச் சேர்ந்த ராகவேந்தர் அம்பரிஷ்.

இணைக்கும் அம்சங்கள்

சேத்தன் பகத்தின் எல்லா நாவல்களிலும் ஏதாவது ஒரு சமூகப் பிரச்சினை கதைக்களமாக இருப்பது இளைஞர்களை அந்நாவல்களுடன் எளிதாக இணைக்கிறது. ‘ஃபைவ் பாயிண்ட் சம்ஒன்’னில் கல்வி முறை, ‘டூ ஸ்டேட்ஸ்’-ல் கலாசார வேறுபாடுள்ள திருமணம், ‘த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப்’-ல் மத அரசியல், ‘ஒன் நைட் அட் தி கால் சென்டர்’-ல் வாழ்க்கை முறையில் வேலை ஏற்படுத்தும் மாற்றங்கள், ‘ரெவல்யூஷன் 20-20’-ல் ஊழல் என ஏதாவதொரு சமூகப் பிரச்சினையை இவரது நாவல்கள் பேசுகின்றன.

அத்துடன், அவர் கையாளும் எளிமையான மொழியும், கல்லூரி வாழ்க்கையைச் சித்தரிக்கும் விதமும் அதிகமான இளைஞர்களை அவருக்கு வாசகர்களாக்கி இருக்கின்றன. ‘ஹாஃப் கேர்ள்ஃபிரெண்’டில் ஒரு சில குறைகள் இருந்தாலும், ஒரு கிராமப்புற இளைஞனின் வாழ்க்கையில் ஆங்கிலம் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியிருந்த விதம் அழுத்தமானது” என்று பேராத்துச் செல்வி சொல்வது நாவலைப் பற்றிய பொருத்தமான அறிமுகமாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x