Last Updated : 13 Sep, 2014 12:40 PM

 

Published : 13 Sep 2014 12:40 PM
Last Updated : 13 Sep 2014 12:40 PM

கேட்ஜட் உலகம்

ஸ்மார்ட் பிரெஷ் , ஸ்மார்ட் பேக், ஸ்மார்ட் சாப்ஸ்டிக்ஸ்!

சீன இணைய நிறுவனமான பெய்டு (Baidu) தனது புதிய அறிமுகங்களால் கவனத்தை ஈர்த்துள்ளது. பெய்டு, சீனாவின் தேடு பொறி உலகில் தனிக்காட்டு ராஜா. உலகம் முழுவதும் கூகிள் நம்பர் ஒன் தேடு பொறியாக விளங்கினாலும் சீனாவில் பெய்டுதான் நம்பர் ஒன். இப்போது பெய்டு சர்வதேச சந்தையையும் குறி வைத்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன் பெய்டு பிரேசிலில் அந்நாட்டுக்கான உள்ளூர் தேடு பொறியை அறிமுகம் செய்தது.

அதே போல கூகிள் கிளாசுக்குப் போட்டியாக , ‘பெய்டு ஐ’ எனும் அணி சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதில் காமிரா உண்டே தவிர டிஸ்பிளேக்கான திரை இல்லை.

எனினும் இது எப்போது சந்தைக்கு வரக்கூடும் என்பது பற்றி பெய்டு எதுவும் தெரிவிக்கவில்லை.

செல்ஃபி போனும், செல்ஃபி பிரெஷும்

எதிர்பார்த்தபடியே மைக்ரோசாப்ட் லூமியா 830 உள்ளிட்ட புதிய ஸ்மார்ட் போன்களை பெர்லின் தொழில்நுட்பக் கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. லூமியா 735 செல்ஃபிகளுக்கு ஏற்றது. அதற்கேற்ற 5 மெகா பிக்சல் காமிரா மற்றும் வைடு ஆங்கிள் தன்மை கொண்டுள்ளது.

இந்த போனில் நவீன பிளாஷ் உத்தியும் உள்ளது. அதாவது இந்த போனில் குறைந்த ஒளியில் படம் எடுக்கும் போது, பிளாஷ் ஒளியுடன் ஒரு படம், அடுத்ததாக பிளாஷ் இல்லாமல் ஒரு படம் என இரண்டு படங்கள் எடுக்கப்படும். பின்னர் இவை இணைந்து சிறந்த தோற்றம் கொண்ட படம் உருவாகும். லூமியா டெனிம் எனும் சாப்ட்வேர் இதைச் சாத்தியமாக்குகிறது. மற்ற லூமியா போன்களிலும் இது அப்டேட் செய்யப்படலாம்.

லூமியா 830 போன் 3 ஜி, 4 ஜி வசதி கொண்டது. இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகமாக உள்ள இதன் விலை சுமார் ரூ. 26,000 இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

செல்ஃபி மோகத்தின் இன்னொரு வெளிப்பாடாக செல்ஃபி பிரெஷ் அமெரிக்காவில் அறிமுகமாகி உள்ளது. செல்ஃபி எடுத்துக்கொள்வதற்கு முன் தலைமுடி கலைந்திருந்தால் நன்றாகவா இருக்கும்? ஆனால் தலையை வார சீப்பைத் தேடிக்கொண்டிருந்தால் கச்சிதமான டைமிங் மிஸ் ஆகிவிடலாம்.

அதைத் தவிர்க்கத்தான், செல்ஃபி பிரெஷ் வந்திருக்கிறது. இதில் தலையை வாரிக்கொண்டு அப்படியே செல்ஃபியும் எடுத்துக்கொள்ளலாம். உண்மையில் இந்த பிரெஷ் , ஐபோனுக்கான கேஸ் போன்றது. அதில் பிரெஷும் இணைந்திருக்கிறது. முன்பக்கத்தில் போனும் இருக்கிறது. எப்படி?

செல்ஃபி பிரஷ் இணையதளம்: http://www.selfiebrush.com/

சாம்சங் முந்தியது!

பெர்லின் தொழில்நுட்பக் கண்காட்சியில் சாம்சங், மோட்டரோலா, சோனி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தன. மோட்டரோலா, மோட்டோ ஜி ,மோட்டோ எக்ஸ் போன்கள், மோட்டோ 360 ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்தது.

வட்ட வடிவிலான மோட்டோ 360 ஸ்மார்ட் வாட்ச் பரவலாகப் பாராட்டைப் பெற்றுள்ளது. இதற்கு போட்டியாக எல்ஜி நிறுவனமும் வட்ட வடிவ ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்தது. தைவான் நிறுவனமான ஆசசும் (Asus) ஜென் வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்தது. சோனி புதிய எக்ஸ்பிரியா ஸ்மார்ட்போன் , ஸ்மார்ட் வாட்ச் 3 மற்றும் ஸ்மார்ட் பேண்ட் பிட்னஸ் சாதனத்தை அறிமுகம் செய்தது.

சாம்சங், காலெக்ஸி நோட் 4, காலெக்ஸி எட்ஜ் மற்றும் கியர் எஸ் சாதனங்களை அறிமுகம் செய்தது. காலெக்ஸி எட்ஜ் ஓரத்திலும் பார்க்கக்கூடிய புதுமையான டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இது கியர் எஸ் ஸ்மார்ட் வாட்ச் ரகத்தைச் சேர்ந்தது.

சாம்சங் கியர் வீஆர் எனும் மெய்நிகர் சாதனத்தையும் (வர்ச்சுவல் ரியாலிட்டி) அறிமுகம் செய்தது. வர்ச்சுவல் ரியாலிட்டி பிரிவில் செயல்பட்டு வரும் ஆக்குலஸ் ரிப்ட் டெவலப்பர் கிட்டுடன் இணைந்து இதனை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது. பல நிறுவனங்கள் இந்தப் பிரிவில் திட்டங்களை வைத்திருக்கும் நிலையில் சாம்சங் முந்திக்கொண்டு முதல் நுகர்வோர் மெய்நிகர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆக்குலஸ் ரிப்டின் சாதனங்களே கூட அடுத்த ஆண்டிலேயே சந்தைக்கு வர உள்ளன.

ஸ்மார்ட் பேக் - ஸ்மார்ட் சார்ஜர்

அமெரிக்காவில் இருந்து போர்ஸ் ப்ரோ (Phorce Pro) ஸ்மார்ட் பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் பேக், தொழில்நுட்ப சாதனங்களை சார்ஜ் செய்வதற்கான பேட்டரி கொண்டது. லேப்டாப் சார்ஜர், கேபிள் மற்றும் கனெக்டர் போன்றவை இதில் இருக்கிறது. இதைக் கொண்டு ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாமாம்.

இதனுடன் இணைக்கப்பட்டுள்ள அப்ளிகேஷன், எந்த அளவு சார்ஜ் மிச்சமுள்ளது என்பதையும் தெரிவிக்கக் கூடியது. ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதனங்களின் சார்ஜ் நிலையையும் அறிந்து கொள்ளலாம். இந்த பேகை எங்காவது மறந்து வைத்தாலும் இந்த அப்ளிகேஷனே அது குறித்த எச்சரிக்கை செய்தியையும் அனுப்பிவைக்கும். இந்த மாத இறுதியில் சந்தைக்கு வருகிறது. இந்த பேக்கைத் தேவைப்பட்டால் ப்ரீப்கேசாகவும் மாற்றிக்கொள்ளலாமாம். இணையதளம்: http://phorce.com/

இதே போலவே சாம்சங் நிறுவனமும் ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களை சார்ஜ் செய்யும் வசதி கொண்ட சார்ஜிங் கேபிளை அறிமுகம் செய்துள்ளது.

கீபோர்ட் புதிது

லாஜிடெக் நிறுவனம் புதிய கீபோர்டை பெர்லின் தொழில்நுட்பக் கண்காட்சியில் அறிமுகம் செய்தது. ஸ்மார்ட் போன்களுக்கும், ஸ்மார்ட் வாட்சுகளுக்கும் கீபோர்டா என நினைக்க வேண்டாம். இந்த கீபோர்ட் விஷேசமானது. இது பல சாதனங்களில் இயங்கக் கூடியது. அதாவது மல்டி டிவைஸ் (Multi-Device Keyboard K480) தன்மை கொண்டது.

ப்ளுடூத் மூலம் இயங்கும் இந்த கீபோர்டைக் கொண்டு கம்ப்யூட்டர், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் போன் ஆகிய மூன்று சாதனங்களிலும் டைப் செய்யலாம். அதிலும் ஒரே நேரத்தில். கீபோர்டில் உள்ள ஈஸி ஸ்விட்சை மாற்றினால் கீபோர்ட் இயங்கும் சாதனமும் மாறிவிடுகிறது.

கீபோர்டுக்கான வீடியோ விளக்கம் : http://www.youtube.com/ watch?v=MceLc7-w1lQ

அந்த நான்கு செயலிகள்

வரைபட விளக்க இணையதளமான ஸ்டேடிஸ்டா (Statista) வெளியிட்டுள்ள தகவல் ஸ்மார்ட் போன் பயனாளிகள் தங்களுக்குப் பிடித்த நான்கு அப்ளிகேஷன்களை மட்டுமே 75 சதவீத நேரம் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கிறது. அதிலும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலி 42 சதவீத நேரத்தை எடுத்துக்கொள்கிறதாம். நீங்கள் அதிகம் பயன்படுத்தும் நான்கு அப்ளிகேஷன்களை வைத்து ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x