Last Updated : 15 Apr, 2019 06:56 PM

 

Published : 15 Apr 2019 06:56 PM
Last Updated : 15 Apr 2019 06:56 PM

உணர்வைக் கடத்திய ஒளிப்படங்கள்!

இன்று ஒளிப்படங்கள் எடுப்பது என்பது பலருக்கும் பொழுதுபோக்கைத் தாண்டிய ஓர் அம்சமாக மாறியிருக்கிறது. ஒளிப்படங்கள் எடுப்பதைத் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் சிலர் மாற்றியிருக்கிறார்கள்.

இப்படி ஒளிப்படங்கள் எடுக்கும் ஆர்வத்தில் ஒன்பது ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டுவருகிறார்கள் ‘சென்னை வீக்எண்ட் கிளிக்கர்ஸ்’ குழுவினர்.

கல்லூரி மாணவர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையினர், அரசு ஊழியர்கள், ஒளிப்படக் கலையைக் கற்றுகொள்ள ஆர்வமிருப்பவர்கள் எனப் பல்வேறு துறையினரும் இணைந்து வார இறுதியில் சென்னையைச் சுற்றியிருக்கும் இடங்களுக்குச் சென்று படங்கள் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

தற்போது, ஒன்பதாவது ஆண்டாக இவர்கள் அனைவரும் இணைந்து சென்னையில் பெசன்ட் நகரில் இருக்கும் ஸ்பேஸஸ், மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி, சோழமண்டலம் ஆர்ட்டிஸ்ட்ஸ் வில்லேஜ், நாவலூர் மெரினா மால் ஆகிய நான்கு இடங்களில் ஒளிப்படக் கண்காட்சியை நடத்தினர்.

ஏப்ரல் 6 முதல் 14 வரை நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் அறுபது ஒளிப்படக் கலைஞர்களின் சுமார் 500 ஒளிப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்தக் குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் இருக்கும் ஒளிப்படக் கலைஞர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டு, அவர்களது படங்களும் இந்தக் காட்சியில் தேர்வுசெய்து வைக்கப்பட்டிருந்தன.

 

தெய்யம், மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்க்கை, வாழ்நாளுக்கான நினைவுகள், ஒரு பறவையின் வலி எனப் பல்வேறு சுவாரசியமான கருப்பொருள்களில் இந்தக் கண்காட்சியின் ஒளிப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

“இந்தச் சென்னை வீக்எண்ட் கிளிக்கர்ஸ் குழு, ஒளிப்படக் கலையில் ஆர்வமிருக்கும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான ஒரு களத்தை உருவாக்கியிருக்கிறது.

புதிதாக ஒளிப்படக் கலையைக் கற்றுகொள்ள விரும்புவர்களுக்குக் குழுவில் இருக்கும் அனுபவமிக்க ஒளிப்படக் கலைஞர்கள் வழிகாட்டுகிறார்கள். ஒளிப்படக் கலையின் மீதிருக்கும் ஆர்வத்தைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை இக்குழு ஏற்படுத்துகிறது.

தற்போதைய டிஜிட்டல் உலகில், ஒளிப்படங்களை பிரிண்ட் செய்து ரசிக்கும் வழக்கம் குறைந்துவருகிறது. பார்வையாளர்களுக்கு அச்சிடப்பட்ட ஒளிப்படங்களின் உணர்வைக் கடத்த வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த ஒளிப்படக் காட்சியை ஒருங்கிணைத்திருக்கிறோம்” என்கிறார் இந்தக் காட்சியின் ஒருங்கிணைப்பாளர் நவீன் கௌதம்.

மேலும் தகவல்களுக்கு:

www.chennaiweekendclickers.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x