Last Updated : 12 Mar, 2019 11:35 AM

 

Published : 12 Mar 2019 11:35 AM
Last Updated : 12 Mar 2019 11:35 AM

வலை 3.0: அது ஒரு வலைக் காலம்!

நாம் அறிந்த வடிவில் இணையம், ‘வெப்’ எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் வலையின் உருவாக்கத்திலிருந்து தொடங்குகிறது. இதுவே பரவலாக வைய விரிவு வலையாக (www) அறியப்படுகிறது. வலை மூலமாகத்தான் இணையத்தை அணுகுகிறோம். அந்த வகையில் இண்டர்நெட் எனப்படும் மாபெரும் வலைப்பின்னலின் மீது உருவாக்கப்பட்ட வசதியாக வலை உள்ளது.

ஆனால், வலையின் உருவாக்கமே இணையப் பயன்பாட்டை எல்லோருக்கும் சாத்தியமாக்கியது. வலையை உருவாக்கிய பிரிட்டன் கணினி விஞ்ஞானி டிம் பெர்னர்ஸ் லீ, இதற்கான கருத்தாக்கத்தை 1989-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி சமர்பித்தார். அதன் பிறகு, முதல் பிரவுசர், முதல் இணையதளம் என மெல்ல வலை விரியத் தொடங்கியது. வலை உருவாகி 30 ஆண்டு நிறைவடையும் நிலையில் அதன் வரலாற்றைத் திரும்பி பார்ப்போம்.

சவாலான பின்னல்

வலைக்கு முன் இணையம் எப்படி இருந்தது தெரியுமா? வலைக்கு முன் இணையம் பெரும்பாலும் வரி வடிவில்தான் இருந்தது. அப்போது இணையம் இருந்தது. ஆனால், இணையதளங்கள் இல்லை. தகவல்கள் இருந்தன; அவற்றை அணுகுவது எளிதாக இல்லை. இணையத்தில் எதைச் செய்வதாக இருந்தாலும், புரோகிராம் திறன்கள் தேவையாக இருந்தன. இணையம் ஓர் அற்புதமான இடமாக இருந்தது. ஆனால், தொழில்நுட்ப புலிகள் மட்டுமே புகுந்து விளையாட முடிந்தது.

கணினியிலும் இணையத்திலும் ஆரம்ப காலப் புதுமைகளும் பாய்ச்சல்களும் தொழில்நுட்ப பித்தர்களாலேயே நிகழ்த்தப்பட்டன. அந்தக் காலத்தில் இணையத்தை அணுகுவது பெரிய விஷயமாக இருந்தது. இன்று பாக்கெட்டுக்குள் இருக்கும் ஸ்மார்ட்போனை கையில் எடுத்ததும் இணையத்தில் உள்ளே நுழையும்  அனுபவத்துக்கு பழகியவர்களுக்கு, பல்கலைக்கழகங்களில் வீற்றிருந்த ராட்சத கணினியைப் (மெயின் பிரேம் கம்ப்யூட்டர்) பயன்படுத்த நள்ளிரவில் சுவரேறி குதித்துச்சென்ற அக்கால இளைஞர்களின் துடிப்பு புதிராகக்கூட இருக்கலாம்.

ஆனால், ராட்சத கணினிகள் மினி மைக்ரோ கணினிகளாகவும் பெர்சனல் கணினிகளாகவும் சுருங்கி அவற்றின் செயல்திறன் அதிகரித்துவந்த நிலையில், வலைப்பின்னலை இணையத்தில் அணுகுவது சவாலானதாக இருந்தது. அதில் ஈடுபடுவது ஆர்வம் நிறைந்த தொழில்நுட்ப சாகசமாக அமைந்திருந்தது.

அணுகுவதில் சிரமம்

“அப்போது (கணினி) திரை இருந்தது, கீபோர்டு இருந்தது, பின்னணியில் இண்டர்நெட் இணைப்பு இருந்தது” என 1989-க்கு முந்தைய இணைய அனுபவத்தை மார்க் மில்லர் எனும் குவோராவாசி வர்ணிக்கிறார். இணையத்தை அணுகுவதற்கான கணினியை அவர் இப்படிதான் குறிப்பிடுகிறார். “இந்தக் கணினிகளால் தனியே எதையும் செய்ய முடியாது. வலைப்பின்னல் மூலம் வரிவடிவத் தகவல்களை பெறக்கூடிய மினி கணினி ஒன்றுடன் இதை இணைக்க வேண்டும்” என்கிறார் அவர்.

“நாங்கள் எப்படி இணையத்தை அணுகினோம் என்றால், எங்கள் துறையில் யுனிக்ஸ் அமைப்பு ஒன்றுக்குள் நுழைய வேண்டும். அங்கிருந்து, டெல்நெட் (பல்கலைக்கழகத்தின் துணை வலைப்பின்னலில் உள்ள கணினிகளை அணுகுவதற்காக) பயன்படுத்தி, இமெயில், செய்தி, எஃப்.டி.பி, உரையாடல் (இணைய அரட்டை) ஈடுபடுவோம்” என்கிறார் அவர்.

“அதே வீட்டில் இருந்தால், பல்கலைக்கழகத் தொலைப்பேசி மோடம் வங்கியை அழைத்து, மைக்ரோ கணினி, டெர்மினல் எமுலேட்டர் மென்பொருளைப் பயன்படுத்தி அங்கிருந்து கணினி துறையின் யுனிக்ஸ் அமைப்பை தொடர்புகொள்வோம்” என்று அவர் விவரிக்கிறார்.

ஏழு மலை தாண்டி, ஏழு கடல் கடந்து உள்ள ஒரு தீவில், மரக்கிளையில் ஒளிந்திருக்கும் கிளியின் வயிற்றில் மந்திரக்கல் இருப்பதாகச் சொல்லப்படும் மாயாஜால கதை வர்னணைபோல இது அமைந்திருக்கிறதா? அந்தக் காலத்தில் இணையத்தை அணுகுவது இப்படிதான் இருந்தது.

எப்படி சாத்தியமானது?

இணையத்தை அணுகுவதற்கான எளிய நுழைவுவாயில்களான பிரவுசர்களும், தேவையான இணையதளத்தை சென்றடைய அதில் இணைய முகவரிகளை உள்ளீடு செய்வதும், அங்குள்ள பக்கங்களை பின்னிணைப்பாக அணுகும் வசதியும் அப்போது அறிமுகமாகி இருக்கவில்லை. இணையத் தேடலுக்கான உத்திகள் உருவாக்கப்பட்டிருந்தாலும், அல்டாவிஸ்டா, கூகுள் போன்ற எளிதாகத் தேடும் வசதிகள் அறிமுகமாகியிருக்கவில்லை.

(இணையத்தின் முதல் தேடு இயந்திரமான ஆர்ச்சி 1990-ல் அறிமுகமானாலும், அது பிடிபி கோப்புகளை தேடுவதாகவே இருந்தது). இவற்றை எல்லாம் வலையின் வருகைதான் கொண்டுவந்தது. அதன் பயனாகவே சாமானிய மக்கள் இணையத்தை பயன்படுத்துவது சாத்தியமானது.

கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது என்ற அகிம்சை பாடலை போல, கோடிங் தெரியாமல், புரோகிராமிங் இல்லாமல் இணையத்தை எவரும் எளிதாக அணுக வழி செய்தது வலையின் கண்டுபிடிப்புதான்.

(வலை வீசுவோம்)
தொடர்புக்கு: enarasimhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x