

முதல் முதலில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று முயன்றது, என்னுடைய எட்டாம் வயதில்தான். அந்தச் சின்ன வயதில் வீட்டைவிட்டு வெளியேறும் அளவுக்கு என்ன கொடுமை நிகழ்ந்திருக்கும் என்றுதானே யோசிக்கிறீர்கள்? நீங்கள் கனவிலும்கூட எதிர்பார்க்க முடியாத கொடுமை அது! ஆனால், நான்கைந்து தெருக்களைத் தாண்டியதும் கோபம் தணிந்தோ அல்லது பயந்தோ வீடு திரும்பினேன். நிம்மதியாகச் சுண்டல் சாப்பிட்டுவிட்டு, உறங்கும் அளவுக்குத்தான் அதனுடைய பாதிப்பு இருந்தது.
நவராத்திரியின்போது எங்கள் வீட்டில் கொலு வைப்பது வழக்கம். ஒவ்வோர் ஆண்டும் நவராத்திரி தொடங்கும் முன்பே வீட்டில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிவிடும். என் கொள்ளுப் பாட்டி கொடுத்த பொம்மைகளில் தொடங்கி மிகப் பழைய பொம்மைகள், ஆண்டுகளுக்கு ஒரு முறை பரணிலிருந்து கீழே வரும்.