

என் தோழியின் குழந்தைத் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தது. அவன் தூங்குவதை ரசிக்கும் என் தோழியைப் பார்த்து நான் ரசித்துக் கொண்டிருந்தபோது, அவர் தாயாகும் முன், மனைவியாகும் முன், என் தோழியாகும் முன், அவர் எனக்கு அந்நியமாக இருந்த நாட்கள் கண் முன்னே தோன்றி மறைந்தன. முதல்முதலில் நான் அவரைப் பார்த்தது, பள்ளிச்சீருடையில்தான்.
எந்தப் பூவும் சொந்தம் கொண்டாடாத வண்ணத்துப்பூச்சியைப் போல் அவர் என் பள்ளியில் சிரித்து நடமாடிக்கொண்டிருந்த நாட்கள் அவை. அப்போது அவர் அவராக மட்டுமே இருந்தார். முதலில் அறிமுகமானது அவர் பெயர். பின்பு மெல்லமெல்ல என் தோழியானார்.