

சாக்லெட் வேண்டுமென்று அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு மத்தியில், வேண்டாமென்று மறுத்ததற்குத் திட்டு வாங்கிய குழந்தை யார் தெரியுமா? இந்தத் தொடரை எழுதி வரும் ஆனந்திதான். வாங்கிய திட்டு கசப்பாக இருந்தாலும், கிதார் கற்றுக்கொண்டதன் சுவை இன்னும் வாழ்க்கையில் இனிப்பைச் சேர்த்தபடியே இருக்கிறது.
கிதாரில் சீனியர்: எட்டாம் வகுப்பு படித்தபோது கிதார் கற்றுக்கொண்டிருந்தேன். ‘வாரணம் ஆயிரம்’ படம் பார்த்து கிதார் வாங்கியவர்களுக்கு சீனியர் நான். நான் கற்றுக்கொள்ளத் தொடங்கி, சிறு பாராட்டு கிடைத்தும் கைவிட்ட கலைகளில் கிதார் வாசிப்பதும் ஒன்று. அந்தப் பட்டியலில் இன்னொன்று ஒளிப்படம் எடுப்பது. கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி ஒன்றில், நான் எடுத்த ஒளிப்படம் ஒன்றைப் பாராட்டி, மறைந்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் பாலுமகேந்திரா பரிசாக கேமரா வழங்கினார். நியாயப்படி அந்த கேமரா, ஒளிப்படம் எடுக்க எனக்கு உந்துதல் அளித்திருக்க வேண்டும். ஆனால், பாராட்டு கிடைத்த மிதப்போ என்னவோ, கொஞ்சம் கொஞ்சமாக கேமராவைத் தொடுவதே அரிதாகிவிட்டது. கிதாரும் அப்படியே!