

கரோனா காலக்கட்டத்தில் என் அக்காவும் மாமாவும் சென்னையில் இருந்தனர். அவர்களின் குழந்தைகள் இருவரும் கோடை விடுமுறைக்காகக் கோவை வந்திருந்தபோது பொது முடக்கம் அமலானது. ஆக, நானும் என் பெற்றோர், பாட்டி, இரண்டு வாண்டுகள் ஒரே வீட்டில் நீண்ட நாள்களுக்கு ஒன்றாக இருக்கவேண்டிய நிலைமை. பகுதி நேரமாகக் குழந்தைகளைப் பராமரிப்பதற்கும் பல மாதங்களுக்கு இடைவேளையே இல்லாமல் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்கும் வேறுபாடுகள் உண்டு.
குழந்தைகளுக்கான இணைய வகுப்புகளில் தொடங்கி பொழுதுபோக்கு, சுகாதாரம் என அனைத்தையும் மேற்பார்வை செய்துகொண்டிருந்த எனக்கு, அவர்கள் கற்பித்த பாடம் இதுதான். சிறு வயதிலிருந்தே நாம் இந்த உலகையும் நம்மையும் புரிந்து கொள்ளப் பயன்படுத்தும் முறை, ‘டிரையல் அண்ட் எரர்’. நம்முடைய நடை, மொழி, சிந்தனை என அனைத்துமே நமக்கு முதல் முயற்சியிலேயே சரியாக வருவதில்லை. செய்து பார்ப்போம், சொதப்புவோம், பிறகு கற்றுக்கொள்வோம். சரியாக வராத நேரத்தில் தவறாகப் போவதன் விளைவுகளைப் பார்த்து, அதன் பிறகு மாற்றிக்கொள்வோம்.