

சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ மூலம் காணொளிகளை வெளியிடுவது இன்று உச்சத்துக்குச் சென்றுவிட்டது. ரீல்ஸ்களுக்குப் பாதை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இன்ஸ்டகிராமில் மட்டும் 41.4 கோடி இந்தியர்கள் கணக்கு வைத்துள்ளனர். இதேபோல ரீல்ஸைக் கொண்டிருக்கும் ஃபேஸ்புக்கில் 37.8 கோடி இந்தியர்கள் கணக்கு வைத்துள்ளனர். ரீல்ஸைப் பயன்படுத்துவோரில் 10 - 24 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் என்கிறது இன்னொரு கணக்கு. ரீல்ஸைப் பார்ப்பதிலும் உலக அளவில் இந்தியர்கள் முன்னிலையில் உள்ளனர்.
மாதத்துக்கு சராசரியாக 36.29 கோடி இந்தியர்கள் ரீல்ஸைப் பார்க்கிறார்கள். இப்படி ரீல்ஸ் மோகத்தில் சிக்கியிருக்கும் இந்தியாவில், காணொளிகளை வெளியிட்டு லைக்ஸ், கமெண்ட்ஸ், ஷேரிங்குக்காக உயிரைத் துச்சமென மதித்து ஆபத்தான காணொளிகளை எடுப்பதும் அதிகரித்துள்ளது. ரீல்ஸ் பதிவிடும் மோகம் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் போக்கு எங்கு கொண்டு போய் நிறுத்தும்?