

பின்னணிக் குரல் கலைஞரும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஷியாமளாவுக்கு இசையின் மீதும் விருப்பம் உண்டு. திரைத்துறையில் பணியாற்றிவரும் தனியிசைக் கலைஞரான அருண் வள்ளலாருக்கு, தன்னைப் போலவே இயங்கிக்கொண்டிருக்கும் சக தனியிசைக் கலைஞர்களுக்கான தளத்தை அமைத்துத் தர வேண்டும் என்பது விருப்பம். ஷியாமளா, அருண் இருவருக்கும் பொதுவான விருப்பமாக இசை இருந்தது. அந்த இசை விருப்பத்தால் வேயப்பட்டதுதான் ‘குடிசை’ (Gudisai – பிரித்துப் பார்த்தால் ‘குட் இசை’).
இவர்கள் இருவரும் இணைந்து தொடங்கி இருக்கும் ‘குடிசை’ நிறுவனம், தனியிசைக் கலைஞர்களுக்கான மேடை அமைத்துத் தருகிறது. திறமையை வைத்துக்கொண்டு அதை வெளிப்படுத்த களம் இன்றித் தவிக்கும் கலைஞர்களுக்கான மேடையாகவும் இது இருக்கிறது. ஒரே மாதிரியான விருப்பம் கொண்ட கலைஞர்களை இணைக்கும் பாலமாகவும் குடிசை செயல்படுகிறது.