

தொண்ணூறுகளில் பிறந்தவர்களின் வாயில் ‘மொக்கை’ எனும் வார்த்தைச் சிக்கிக்கொண்டு ஒரு காலத்தில் அல்லோலகல்லோலப்பட்டது. மூளை வேலை செய்யாமல் ஏதேனும் சிறுபிள்ளைத்தனமாகச் செய்தால் மொக்கை, சிரிப்பே வராத பல் தடம் பதியக்கூடிய கடிகளை நகைச்சுவையெனக் கக்கினால் மொக்கை, வகுப்பறையில் நடு வகிடு எடுத்து சீவி நட்டநடு பெஞ்சில் அமர்ந்திருந்தால் மொக்கை, அலுப்பு உண்டாக்கினால் மொக்கை, சலிப்பு உண்டாக்கினால் மொக்கை, கடுப்பு உண்டாக்கினால் மொக்கையென எங்கேயும் எப்போதும் எதற்கும் `மொக்கை' என்கிற வார்த்தையை இட்டு நிரப்பினார்கள்.
ஈராயிரங்களில் பிறந்தவர்களோ கிட்டதட்ட மனிதகுலத்தின் மகத்தான அத்தனை உணர்வுகளையும் காதைப் பிடித்துத் திருகி, வெறும் இரண்டே இரண்டில் ஒரு வார்த்தையை மூன்று முறை சொல்லி புதிய பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதில், முதலாமாவது `க்ரிஞ்ச்'. அடுத்தது, `பூமர்'. இந்த உலகத்தில் எது க்ரிஞ்ச், எது க்ரிஞ்ச் இல்லை எனக் குழப்பம் அடைய தேவையில்லை.