

முதியவர் ஒருவர் எனக்கு முன்னே மெதுவாகச் சாலையில் சென்று கொண்டிருந்தார். சாலை திருப்பத்தில் அந்த முதியவர் திரும்புகையில், எதிர்த் திசையிலிருந்து பைக்கில் பறந்துவந்த ஈராயிரக் குழவி ஒருவன், சடாரென பிரேக் அடித்து, `புரோ, ஓரமா போங்க புரோ' என உச்சுக் கொட்டிவிட்டு மீண்டும் ஆக்ஸிலேட்டரை முறுக்கினான். `நாம என்னடா பண்ணோம்' என ஒரு விநாடி எனக்குள் ஒரு குழப்பம். அந்த ஈராயிரக் குழவி `புரோ' என விளித்ததே தாத்தாவைப் பார்த்துதான் என விளங்கியதும் குழப்பம் விலகியது.
எத்தனை அக்காக்கள்? - இவர்களால் எப்படி ஒரு தாத்தாவை `புரோ' என அழைக்க முடிகிறது என வேறொரு குழப்பம் அடுத்த விநாடியே தொற்றிக்கொண்டது. தம்பி, அண்ணே, தாத்தா, மாமா, மச்சான், பங்காளி, பெரியப்பா, சித்தப்பா, சார், பாஸ் என வெவ்வேறு உறவு பெயர்கள், வெவ்வெறு வயதினரை, நெருக்கத்தின் அளவுகோலைக் கொண்டு அழைத்தது முந்தைய தலைமுறை. ஆறிலிருந்து அறுபது, எழுபது வரை எதிரில் நிற்கும் எல்லாரையும் `புரோ' எனும் ஒரே வார்த்தையைக் கொண்டு எப்படி இவர்களால் விளிக்க முடிகிறது எனத் தலைசுற்றிவிட்டது. சரி, ஆண்கள் என்றால் `புரோ', பெண்கள் என்றால்? அதுதான், அக்கா.