Published : 28 Apr 2014 08:14 PM
Last Updated : 28 Apr 2014 08:14 PM

பளிங்கு போன்ற மொபைல்

தென் கொரிய நிறுவனமான சாம்சங்கிலிருந்து வெளிவந்த கேலக்ஸி வகை மொபைல்களை இளைஞர்கள் விருப்பத்துடன் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். ரயிலிலும் பேருந்திலும் செல்லும் இளைஞர்கள் தங்கள் மொபைலில் ஏதேனும் ஒரு பாடல் காட்சியைப் பார்த்துக்கொண்டே சந்தோஷத்துடன் பயணிப்பதைச் சாதாரணமாகப் பார்க்கலாம்.

கடந்த மார்ச் மாதம் இந்நிறுவனத்தின் மாடலான கேலக்ஸி எஸ் 5 சந்தைக்கு வந்தது. 16 எம்.பி. திறன் கொண்ட ரியர் கேமராவும் 16 ஜி.பீ. ஸ்டோரேஜ் வசதியும் கொண்ட இந்த மொபைலின் இந்திய விலை ரூ 51, 500. சாம்சங் நிறுவனத்தின் பெருமைமிகு படைப்பான கேலக்ஸி எஸ்5 வாடிக்கையாளர்களால் பெரும் ஆர்வத்துடன் நுகரப்பட்டது.

ஆண்ட்ராய்டு வகை மொபைல்களுக்கான உலகச் சந்தையில் ஒரு சதவீதத்தை இந்த மொபைல் பிடித்துக்கொண்டது என ஆய்வுகள் கூறுகின்றன. 5 அங்குலத்திற்கும் அதிகமான அகலம் கொண்ட திரையில் தெளிவான பிம்பங்களைப் பார்த்து மகிழ்கின்றனர் வாடிக்கையாளர்கள்.

வாடிக்கையாளர்களின் சந்தோஷத்தை அதிகரிக்கும் வகையில் கேலக்ஸி எஸ் 5-ன் மேம்பட்ட தயாரிப்பான கிரிஸ்டல் மாடல் மொபைல்களை வரும் மே மாதம் சாம்சங் நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. ஸ்வரோவ்ஸ்கி நிறுவனத்தின் கண்ணைப் பறிக்கும் கண்ணாடித் துண்டுகள் போன்ற கிரிஸ்டல்களைப் பயன்படுத்தி விழிகளை ஈர்க்கும் வண்ணத்தில் இந்தப் பளிங்கு மொபைலின் பின்புற பேனல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பளபளவென அதன் தோற்றம் இளைஞர்களைச் சுண்டியிழுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விளம்பர முன்னோட்டம் யூடியூபில் வெளியாகியுள்ளது. கேலக்ஸி எஸ் 4 வகையில் கிரிஸ்டல் மாடலை சாம்சங் நிறுவனம் ஏற்கனவே சந்தையில் புழக்கத்திற்கு விட்டுள்ளது.

மே மாதத்தில் தென் கொரியாவில் மட்டும் கேலக்ஸி எஸ் 5 கிரிஸ்டல் வகை ஸ்மார்ட் போன் கிடைக்குமா அல்லது உலகம் முழுவதிலும் உள்ள சந்தைகளிலும் கிடைக்குமா என்பது பற்றி சாங்சங் நிறுவனம் அந்த முன்னோட்டத்தில் ஒரு வார்த்தையும் சொல்லப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x