

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி விட்டன. மைதானத்தில் பந்துகள் எல்லைக் கோடுகளைத் தாண்டும் போதும், எதிரணியின் விக்கெட்டுகள் விழும்போதும் ஒவ்வோர் அணியின் சார்பில் பவுண்டரி லைனில் நிறுத்தப்பட்டிருக்கும் ‘சியர் கேர்ள்’கள் உற்சாகமாக ஆடும் நடனங்களைப் பார்த்திருப்பீர்கள்.
ஐ.பி.எல்.கிரிக்கெட்டின் ஓர் அடையாளமாகவே ‘சியர் கேர்ள்’களும் மாறிவிட்டார்கள். கிரிக்கெட் மட்டுமல்ல, பல விளையாட்டுகளிலும் ‘சியர் லீடர்கள்’ என்றழைக்கப்படும் இளம் மங்கைகள் வீரர்களையும் ரசிகர்களையும் உற்சாகமூட்டுவது வழக்கமானதாக மாறிவிட்டது. விளையாட்டில் ‘சியர் கேர்ள்’கள் எப்படி நுழைந்தார்கள்?
‘சியர் கேர்ள்’ வருகை: ஐ.பி.எல். கிரிக்கெட்டில்தான் நடனமாடி உற்சாகப்படுத்தும் இளம் பெண்களை ‘சியர் கேர்ள்ஸ்’ என்று அழைக்கிறார்கள். ஆனால், பொதுவாக ‘சியர் லீடர்கள்’ என்றே மற்ற விளையாட்டுகளில் அழைக்கிறார்கள்.
‘சியர் லீடர்கள்’ என்பது தொடர் உடல் அசைவுகளின் மூலம் விளையாடும் அணி வீரர்களையும் விளையாட்டைக் கண்டு ரசிக்கும் ரசிகர்களையும் உற்சாகமூட்டும் ஒரு செயல். உற்சாகமூட்டுவது என்பது நடனமாடுவது மட்டுமல்ல, ஒரு போட்டி நிகழ்வாகவும் நடைபெறலாம். இவ்வளவு ஏன், வித்தையாகவும்கூட இருக்கலாம்.
‘சியர் லீடர்கள்’ முதன் முதலில் அமெரிக்காவில் கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டிகளில்தாம் அறிமுகமானார்கள். அதுவும் 1869 முதல் 1880 வரையிலான காலகட்டத்திலேயே அறிமுகமாகிவிட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் மூன்று இளைஞர்கள் பாட்டுப் பாடியும், உற்சாகமான வார்த்தைகளைக் கூறியும் தங்கள் அணிக்கு ஆதரவையும் உற்சாகத்தையும் அளித்தார்கள்.
அது விளையாடும் வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பரவசத்தைத் தரவே, தொடர ஆரம்பித்தது. அப்போது ‘சியர் லீடர்கள்’ பெண்களாக இருந்திருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். தொடக்கத்தில் ஆண்கள்தாம் சியர் லீடர்களாக இருந்தார்கள்.
பெண்கள் மயம்: அமெரிக்காவில் தொடங்கிய இந்த ‘சியர் லீடர்’கள் கலாச்சாரம் பிறகு பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. ‘சியர் லீடர்’கள் அறிமுகமான காலம் தொடங்கி 50 ஆண்டுகள் கழித்தே சியர் லீடர்களாக இருக்க பெண்களும் அனுமதிக்கப்பட்டார்கள்.
1923இல் அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கு முதல் முதலில் அனுமதி வழங்கப்பட்டது. விளையாட்டுக் களத்தில் ஆண்களோடு சேர்ந்து உற்சாகப்படுத்தும் பணியைப் பெண்களும் செய்தார்கள்.
ஒரு கட்டத்தில் விளையாடும் வீரர்களை ஊக்கப்படுத்த வந்த ஆண் சியர் லீடர்கள், விளையாட்டு வீரர்களாக மாறுவதில் கவனம் செலுத்தத் தொடங்கவே. பெண்களின் பங்கேற்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. அமெரிக்காவில் 1970களுக்குப் பிறகு பெண்களே அதிகளவில் ‘சியர் லீடர்’களாக வரத் தொடங்கினார்கள்.
அமெரிக்காவில் முதல் முறையாக 1973 இல் புகழ் பெற்ற கூடைப் பந்தாட்டப் போட்டித் தொடர்களுக்குப் பெண் ‘சியர் லீடர்’கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அது படிப்படியாக மற்ற விளையாட்டுகளிலும் பரவியது. 2005ஆம் ஆண்டு நிலவரப்படி விளையாட்டுகளில் உள்ள ‘சியர் லீடர்’களில் 97 சதவீதம் பேர் பெண்களே.
இவர்களில் பெரும்பாலானோர் ‘மாடல்’ அழகிகள். அமெரிக்கா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் விளையாட்டுப் போட்டிகளில் ‘சியர் லீடர்’கள் இல்லாமல் தொடங்குவதில்லை என்கிற நிலை எப்போதோ வந்துவிட்டது.
கிரிக்கெட்டில் ‘சியர் கேர்ள்’- 2007இல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில்தான் ‘சியர் லீடர்’கள் முதல் முதலாகத் தலைகாட்டினார்கள். அதன் பிறகு 2008இல் ஐ.பி.எல்.கிரிக்கெட் அறிமுகமானது. அதிலும் அவர்கள் அங்கமாகி, அதன் அடையாளமாகிப் போனார்கள்.
‘சியர் (லீடர்ஸ்) கேர்ள்’ இல்லாத இருபது ஓவர் கிரிக்கெட் தொடர்கள் இன்று இல்லை. அதுபோலவே ‘சியர் கேர்ள்’ இல்லாத பிரீமியர் லீக்குகள் இல்லை என்கிற நிலையும் வந்துவிட்டது. அந்த அளவுக்கு அவர்கள் டி20 கிரிக்கெட்டுக்குள் ‘சியர் கேர்ள்’கள் ஊடுருவி விட்டார்கள்!