

பி
ரபலங்களின் மனம் நெகிழ்ந்த பேச்சு, பாலியல் வன்கொடுமைக்கு எதிரான உரைவீச்சு, விருதுகளின் மழை – இவை யாவும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற 60-வது ஆண்டு கிராமி விருதுகள் விழாவை அலங்கரித்தன. உலக இசைக் கலைஞர்களுக்கு மகுடம் சூட்டும் இவ்விழாவின் முக்கியத் தருணங்கள் இளம் இசை பித்தர்களுக்காக:
‘ரிதம் அண்டு புளூஸ்’ (ஆர் & பி) இசை பாணியில் உலக நாயகனான புரூனோ மார்ஸ் இந்த ஆண்டு கிராமி விருதுகளின் நாயகனாக ஜொலிக்கிறார். ஹவாய் தீவில் உதித்த இந்த இசைக் கடலின் ‘24கே மேஜிக்’ என்கிற ஆல்பமும் ‘தட்ஸ் வாட் ஐ லைக்’ என்கிற பாடலும் ஆண்டின் சிறந்த ஆல்பம், பாடல் உட்பட ஆறு விருதுகளைக் குவித்தன. ரெக்கே, ராக், ஹிப் ஹாப், ஆர் & பி எனப் பல பாணி இசை வகைகளைக் கற்றுத் தேர்ந்தவர் புரூனோ. விருது வழங்கும் மேடையில் சக இசைக்கலைஞரான கார்டி பி-யுடன் மேடையில் ஆடிப்பாடி இசை ரசிகர்களுக்கு விருந்தளித்தார். ‘Album of the year’, ‘best song’, ‘record of the year’ ஆகிய மூன்று கிராமி விருதுகளை ஒரே நேரத்தில் இதுவரை இசை வரலாற்றில் 8 இசைக் கலைஞர்கள் மட்டுமே பெற்றிருக்கின்றனர்.
அதிகபட்சமான விருதுகளை வென்றதற்காக புரூனோ பெரிதும் பாராட்டப்பட்டாலும் கிராமி விருது விழாவின் இரவைப் பரபரப்பாக்கியவர் ரிஹன்னா. தென் ஆப்பிரிக்க நடனத்தின் நளின அசைவுகளைக் கொடுத்து ‘குவாரா குவாரா’ பாடலுக்கு ஆடி இசை ரசிகர்களை ஆட்டிப்படைத்தார். ‘லாயல்டி’ பாடலுக்காகச் சிறந்த ராக் பாடல் மற்றும் நடனத்துக்கான விருதை அவர் வென்றார்.
ஜொலிஜொலிக்கும் இளஞ்சிவப்பு ஆடையில் பல நடனக்கலைஞர்களுடன் இணைந்து அவர், ‘வைல்ட் தாட்ஸ்’ பாடலைப் பாடி நடனமாடியதைக் கண்ட பார்வையாளர்கள் களிப்பில் தங்களை மறந்து அவருடன் நடனமாடினர்.
வெண்ணிற ஆடையில் பாப் பாடகி கேஷா தன்னுடைய குழுவைச் சேர்ந்த ஐந்து பெண் இசைக் கலைஞர்களுடன் ‘பிரேயிங்’ என்ற கதைப்பாடலை உருக்கமாக அரங்கேற்றினார்.
பணிச் சூழலில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற கருத்தாக்கத்தைக் கொண்ட அந்தப் பாடல் ரசிகர்களின் கண்களில் கண்ணீரை ததும்பச்செய்தது.