

படங்கள் உதவி: ஞானம்
பாடகி எஸ்.ஜானகியின் மறைவு ஏன் இவ்வளவு பேரைக் கலங்கடித்திருக் கிறது? தலைசிறந்த பாடகிகளின் வரிசையில் தலைமகளாக அவர் இருப்பதால் மட்டும் தானா? இல்லை, தங்கள் வாழ்வின் தருணங்களுக் கான பின்னணி இசையாக, மனதுக்கும் கேட் காமல் முணுமுணுத்துக்கொள்ளும் ரகசியப் பொக்கிஷமாக ரசிகர்கள் பாதுகாக்கும் பாடல் களைப் பாடியவர் என்பதுதான் ஜானகியின் தனிச் சிறப்பு.
எல்லாப் பாடகிகளும் அப்படித்தானே என்று இயல்பாக ஒரு கேள்வி எழலாம். ஆனால், பாடலின் சூழலுக்கும் கதாபாத்திரத்தின் தன்மைக்கும் ஏற்ப, தனித்துவமான, மிக மிக நுட்பமான 'பாவ'த்தைக் குரலில் வெளிப் படுத்தும் திறன் மிகச் சிலருக்குத்தான் உண்டு. அந்தப் பிரத்யேகக் கலையின் பேரரசி ஜானகி!
மெல்லிய உணர்வு
‘பூவரசம்பூ பூத்தாச்சு’ (கிழக்கே போகும் ரயில்) பாடலை எடுத்துக்கொள்வோம். ஊராரின் அவமதிப்பால் மனம் வெதும்பி ஊரைவிட்டு வெளியேறும் நாயகன், நகரத்தில் ஒரு நல்ல நிலைமைக்கு வரத் தொடங்கும் நிலையில், ஊருக்குச் செல்லும் ரயிலின் கடைசிப் பெட்டியில் அந்த நற்செய்தியை எழுதித் தூது அனுப்புகிறான். ஊரில் அதை வாசிக்கும் நாயகியின் மனதில் மகிழ்ச்சியின் அலை எழுகிறது.
அப்போது தொடங்கும் அந்த நீண்ட பாடல் மூன்று சரணங்களைக் கொண்டது. முதல் இரண்டு சரணங்களில் ஜானகியின் குரலில் களிப்பும் கொண்டாட்டமும் நிறைந் திருக்கும். மூன்றாவது சரணம் தொடங்கும் போது நாயகியின் மனதில் நாயகனைப் பிரிந்திருக்கும் வலியும் அவனைச் சந்திப்ப தற்கான விழைவும் நிரம்பி வழியும்.
அப்போது ஜானகியின் குரலில் ஒரு நுட்பமான மாற்றம் தெரியும்... கவனித்திருக்கிறீர்களா? ‘நாளெல் லாம் வேண்டிக்கிட்டிருக்கேன்… சாமிக்கு நேர்ந்துக்கிட்டிருக்கேன்’ என்று நாயகி (ராதிகா) பாடும்போது, ஒரு மெல்லிய சோகம் கவிழும். ஜானகி குரலின் தொனி மாற்றம், அதை உணர்த்தும். ஜானகி ஜெயிக்கும் இடம் அதுதான்! இன்னொரு பாடல்.
‘டிசம்பர் பூக்கள்’ படத்தில் ஜெயச்சந்திரனுடன் இணைந்து ஜானகி பாடிய, ‘அழகாகச் சிரித்தது அந்த நிலவு’. கதைப்படி நவீன யுகப் பெண்ணான நாயகி ரேவதிக்கு, நாயகன் மோகன் மீது காதல் அரும்புகிறது. அப்போது தொடங்கும் அந்தப் பாடல் முழுவதும், ஜானகியின் குரலில் கேலித்தன்மை விரவிக்கிடக்கும்.
குறிப்பாக ‘அதுதான் இதுவோ’ என்று பரிகாசத்துடன் கேட்பதாகட்டும், ‘லலலலலா’ என அலட்சிய மான குரலில் கடந்துசெல்வதாகட்டும் அனைத்திலும் ஒரு ‘டாம் பாய்’ தன்மை இருக்கும். அந்த லலலலாவைக் கூடுதல் இனிமையுடன் அவரால் பாட முடியும்தான். ஆனால், கதையின் சூழலுக்கு அந்தப் பரிகாசக் குரலே போதும்.
அதை ஜானகியால் வஞ்சகமில்லா மல் வாரி வழங்க முடியும். ஹம்சலேகாவின் இசையில் வெளியான ‘பருவராகம்’ படத்தில் எஸ்பிபியுடன் அவர் பாடிய ‘பூவே உன்னை நேசித்தேன்’ பாடல் இன்னோர் எடுத்துக்காட்டு. காதலை வெளிப்படுத்த அச்சப்படும் நாயகனைக் கேலி செய்து, அவனை உற்சாகப்படுத்தும் நாயகிக்காக ஜானகி பாடியது.