

செழியனுடன் எனக்கு இருந்த உறவு, இயக்குநர் – ஒளிப்பதிவாளர் என்கிற உறவைத் தாண்டியது. இலக்கியம், இசை, ஓவியம், உலக சினிமா ஆகியவற்றின் மீது இருந்த பொதுவான ஈடுபாடுதான் எங்களை நெருக்கமாக இணைத்தது.
எங்களது உரையாடல்களில் சினிமாவைவிட தி.ஜானகிராமன், மீரா, எம்.வி.வி., கரிச்சான் குஞ்சு, வண்ணதாசன், தேனுகா இப்படிப் பல எழுத்தாளர்களின் எழுத்துகளும் சங்கீதமும் கவிதைகளுமே அதிகம் இடம்பெறும். அவர் என் உடன்பிறவா தம்பியாகவே இருந்தார்.
எந்தக் கவிதைக்கு நான் மெட்டமைத்தாலும், முதலில் அனுப்பி கருத்துக் கேட்பது செழியனிடம்தான். அவரது இசை அறிவு அபாரமானது. எனது மெட்டுகளைப் பாராட்டியது விஷயமில்லை.
நான் மெட்டமைத்த மூன்று குறுந்தொகைப் பாடல்களைத் தனது செலவில் பதிவுசெய்து வெளியிட்டார். அதை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். அதைப் பணிவாக அவர் சொன்ன விதமும் அந்தப் பண்பும் இன்னும் என் மனசிலேயே இருக்கின்றன.
இரண்டு மிக முக்கிய ஆவணப்படங்களில் அவர் என்னுடன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். குறிப்பாக ஜெயகாந்தன் ஆவணப்படத்தில், நான் மனதில் நினைத்திருந்த ஒளி அமைப்பையும் காட்சிப் பாணியையும், தனது கலை உணர்வால் அவர் திரையில் உயிர்ப்பித்து அளித்தார். வண்ணம், வடிவம், ஒளி, நிழல் ஆகியவற்றின் வழியாக இயல்பாக மனிதர்களின் உள்ளுணர்வைப் பதிவுசெய்வதில் அவர் தனித்துவமான கலைஞர்.