

வீணை மேதை எஸ்.பாலசந்தர் தமிழ் சினிமாவை ஒரு காட்சி ஊடகம் என் கிற கண்ணோட்டத்துடன் அதிகமும் கையாள நினைத்த இயக்குநர். அவர் கையாண்ட புதுமைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவருடைய ‘பொம்மை’ (1964) திரைப்படத்தின் முடிவில், படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தொடங்கி, திரைக்கதையில் முக்கியக் கதாபாத்திரமாக இடம்பிடித்த பொம்மைவரை அறிமுகப்படுத்தி யிருந்தார். ஆனால், இந்தப் புதுமையை அரங்கேற்றிய பெருமையில் பாதிப் பங்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனையே சாரும்.
‘பொம்மை’ வெளிவருவதற்கு 13 ஆண்டுகளுக்கு முன்பே, தாம் முதலாவதாக இயக்கிய ‘மணமகள்’ (1951) படத்தில், திரைக்குப் பின்னால் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்களைத் திரையில் ஒளிர வைத்திருந்தார். ‘திரைக்கதை, வசனம் மு.கருணாநிதி’ என்று 27 வயது அழகான இளைஞராக இருந்த மு.கருணாநிதியைக் காட்டினார்.
அதே போல் திராவிட இயக்கப் பாடலாசி ரியர் உடுமலை நாராயண கவி, சாகாவரம் பெற்ற பாடல்களைத் தமிழ் சினிமாவுக்குக் கொடுத்த இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் ஆகியோரை மட்டுமல்ல, இப்படத்தில் கலை வாணரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஏ.பீம்சிங்கையும் ‘லைவ்’ ஆக அறிமுகப்படுத்தியிருந்தார். ஓர் உதவி இயக்குநரை இவ்வாறு அறிமுகப்படுத்துவதற்குப் பெரிய மனசு வேண்டும். அது கலைவாண ருக்கு இருந்தது. ‘பராசக்தி’யை இயக்கிய புகழ்பெற்ற இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவில் ஒருவரான ‘பஞ்சாபி' என அழைக்கப்பட்ட பஞ்சுதான் இப்படத்தின் எடிட்டர்!