

இலங்கையில் பத்திரிகையாளராகவும் ஆவணப்பட இயக்குநராகவும் பணிபுரிந்த அனுபவம் கொண்ட ஈழத் தமிழ் இளைஞர் சோமீதரன். அவர் எழுதி, இயக்கியிருக்கும் படம் ‘நீளிரா’ (நீளும் இரவு).
ஸ்டோன் பெஞ்ச் சார்பில் கார்த்திகேயன்.எஸ் தயாரித்துள்ள இப்படம், இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த காலக்கட்டத்தில் வடக்கு இலங்கை கிராமம் ஒன்றில் நடைபெற்ற உண்மை நிகழ்வொன்றை மையமாகக் கொண்டு ஒரு போர் த்ரில்லர் படமாக வெளி வந்திருக்கிறது. படம் உருவான விதம் குறித்து சோமீதரனுடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
ஒரு வரலாற்று நிகழ்வைத் திரைக்கதை யாக மாற்றும்போது அதிலிருக்கும் உண்மை சிதைந்துவிடாமல் இருக்க நீங்கள் கையாண்டுள்ள முக்கிய உத்தி என்ன?
பேச்சுமொழிதான் முதன்மையான உத்தி. ஈழத்தைத் தொட்டுச்செல்லும் பல படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருக்கின்றன. அவற்றில் எல்லாம் ஈழ மக்கள் பேசும் அசலான பேச்சுமொழி பதிவானது இல்லை. இதில் என் மக்களே அதைப் பேசியிருக்கிறார்கள்.
யாழ்ப்பாணத்துத் தமிழ், மட்டக் களப்புத்தமிழ், மலையகத் தமிழ், மன்னார் - வவுனியா தமிழ் ஆகியவற்றை இதில் கதாபாத்திரங்கள் பேசுகின்றன. 1988இல் இப்படித் தான் எங்கள் ஊர் இருக்கும், இப்படித்தான் எங்கள் வாழ்க்கை இருந்தது, இப்படித்தான் நாங்கள் பேசினோம், இப்படித்தான் நாங்கள் மாண்டோம், இப்படித்தான் நாங்கள் உயிர் பிழைத்திருந்தோம் என்பதை பால்யத்தில் நான் பார்த்து அனுபவித்த வாழ்க்கையிலிருந்து திரைக்கதையாக எழுதியிருக்கிறேன்.