

பில்லி ஹேயெஸ் என்கிற நபர், 1977இல் ஒரு புத்தகம் எழுதினார். அது அவரது வாழ்க்கையில் நடைபெற்ற மிக முக்கியமான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. 1970இல் துருக்கியிலிருந்து அமெரிக்காவுக்கு விமானம் ஏறுகையில், 23 வயதான பில்லி ஹேயெஸ், சுமார் 2 கிலோ போதைப்பொருளுடன் துருக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அந்நாட்டின் நீதிமன்றம் அவருக்கு நான்கு வருடம் சிறைத் தண்டனை விதித்தது. ஆனால், தொடர் விசாரணையில் மேல் நீதிமன்றம் அவருக்கு முப்பது வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனையாக உயர்த்தியது. ‘போதைப் பொருள் கடத்துபவர்களுக்கு இது ஒரு பாடம்’ என்கிற கடும் விளக்கத்தையும் தீர்ப்பில் கூறியது.
முப்பது வருடங்கள் சிறை என்றதும் மனமுடைந்துபோகும் பில்லி ஹேயெஸ், பிறகு தன்னை தேற்றிக்கொண்டு துருக்கியச் சிறையிலிருந்து தப்பிக்க வழி தேடுவார். எந்த வழியும் இல்லாதபோது இயற்கை ஒரு வழியைக் காட்டும். ஹேயெஸ் சிறை வைக்கப்பட்டிருந்த தீவில், 1975இல் ஒரு நாள் கடும் புயல் வீசியது.
அதைச் சிறந்த வாய்ப்பாக மாற்றிக் கொண்டு சிறையிலிருந்து அவர் தப்பிப்பார். அத்தீவில் அவருக்குக் கிடைக்கும் பழுதடைந்த ஒரு சிறிய படகை எடுத்துக்கொண்டு ஒன்பது மணி நேரத்துக்கும் மேலாகக் கடலில் துடுப்பு போட்டுக்கொண்டே இருந்தார்.