Published : 24 Mar 2023 06:09 AM
Last Updated : 24 Mar 2023 06:09 AM

கோலிவுட் ஜங்ஷன்: பங்குச் சந்தையில் பட நிறுவனம்!

கோலிவுட்டின் முன்னணித் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட். இந்நிறுவனத்தின் தலைவர் ஐசரி கே. கணேஷ், ஒவ்வொரு வருடமும் குறைந்தது 3 படங்களைத் தயாரித்து வெளியிட்டு வருகிறார். அவை பெரும்பாலும் வெற்றிப் படங்களாக அமைந்து விடுகின்றன.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் பங்குகள், முதல் முறையாக தேசிய பங்கு சந்தை வணிகத்தில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இதை ஊடகங்களுக்கு அறிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜீவா, ஹிப்ஹாப் தமிழா ஆதி, சரத்குமார், ஆரி அர்ஜுனன், ஆரவ், பிரசாந்த், சங்கீதா கிரிஷ் உள்ளிட்ட நடிகர்கள், சுந்தர் சி, ஆர்.வி. உதயகுமார், ஆர். கே. செல்வமணி, பேரரசு, கோகுல், ஏ. எல். விஜய் உள்ளிட்ட இயக்குநர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

தற்போது 5 திரைப்படங்களை வெளியிடக் காத்திருக்கும் வேல்ஸ் ஃபிலிம், பெங்களூருவில் ‘ஜாலிவுட்’ என்கிற பெயரில் தீம் பார்க் ஒன்றை நிர்மாணித்துள்ளது. விரைவில் அதையும் திறக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

உள்ளூர் அரசியல் ஆடுகளம்! - ‘விலங்கு’, ‘பேப்பர் ராக்கெட்’, ‘ஆனந்தம்’ ‘அயலி’ என தமிழ்ப் பார்வையாளர்களுக்கு நெருக்கமானக் கதைக் களங்களில் இணையத் தொடர்களை வழங்கி வருகிறது ஜீ5 ஓடிடி தளம். இந்த ‘ஒரிஜினல்’ வரிசையில் வெளியாக இருக்கிறது எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில், அபி அண்ட் அபி என்டர்டெயின்மென்ட் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘செங்களம்’.

விருதுநகர் மாவட்ட உள்ளூர் அரசியல்தான் கதைக் களம். விருதுநகர் ‘சேர்மன்’ பதவியை சுற்றி இயங்கும் அரசியலை, லாபம் கொழிக்கும் தொழிலாகப் பார்க்கும் இரண்டு குடும்பங்கள், அவர்களால் பாதிக்கப்படும் ஒரு சாமானியன் அரசியல் கொலைகள் செய்பவனாக உருவெடுப்பது, அதனால் கணவனை இழக்கும் பெண் அரசியலுக்குள் நுழைவது என தென் தமிழகத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து இத்தொடரை இயக்கியிருப்பதாகக் கூறுகிறார் இயக்குநர்.

கலையரசன், வாணிபோஜன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த இத்தொடரின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய வாணி போஜன், “ஜீ5 தயாரிக்கும் இணையத் தொடர் என்றால் கதை கேட்காமல் நடிப்பேன். அவர்கள் நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்வார்கள் என்பதுதான் காரணம்” என்றார்.

மீண்டும் ஷில்பா: பிரபுதேவா நாயகனாக நடித்து 1996இல் வெளியான ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் ஷில்பா ஷெட்டி. நடிப்பு, அதிரடி நடனம் ஆகியவற்றுக்காக பாலிவுட்டின் சக்தி வாய்ந்த நட்சத்திரமாகப் புகழ்பெற்றார். 2007இல் ‘செலிபிரிட்டி பிக் பிரதர் 5’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அதில் வெற்றியும் பெற்றார்.

அதன்பின்னர், கடந்த 12 ஆண்டுகளாக வட இந்திய தொலைகாட்சிகளின் ரியாலிட்டி நடன நிகழ்ச்சிகளுக்கு முக்கிய நடுவராக இருந்து வருகிறார். அவ்வப்போது இந்திப் படங்களில் நடித்தாலும் தென்னிந்தியப் படம் எதிலும் நடிக்கவில்லை. தற்போது இந்திய அளவில் கன்னடப் படங்கள் கவனம் பெற்று வரும் நிலையில், ‘கேடி - த டெவில்’ என்கிற கன்னடப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் அக்காள் மகன் துருவா சர்ஜா நாயகனாக நடிக்கும் இப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இது பற்றி குறிப்பிட்டுள்ள ஷில்பா, “ராஜ்ஜியங்களுக்கு இடையே நடக்கும் ஒரு போரைப் பற்றிய கதை தான் ‘கேடி தி டெவில்’, ஒவ்வொரு ராஜ்ஜியத்துக்கும் ஒரு சத்தி வாய்ந்த பெண் தேவை. இந்தப் போர்க்களத்தில் அதிசக்தி வாய்ந்த சத்யவதி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

தெலுங்கில் ஐஸ்வர்யா! - சி.எஸ். அமுதன் இயக்கத்தில் போலீஸ் ஹீரோயிசப் படங்களை எள்ளல் செய்து வெளியானது ‘தமிழ் படம் 2’. அதில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதைத் தொடர்ந்து 'நான் சிரித்தால்', ‘வேழம்', ‘தமிழ் ராக்கர்ஸ்’ எனப் பல படங்களில் நடித்தவர், தற்போது தெலுங்குப் படவுலகில் நுழைந்திருக்கிறார்.

அங்கே நிகில் சித்தார்த் நாயகனாக நடிக்கும் 'ஸ்பை' என்கிற புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். அஜித்தின் ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடித்தவர் மற்றொரு தெலுங்கு ஹீரோவான கார்த்திகேயா. அவரது நடிப்பில் உருவாகும் புதிய படத்திலும் ஐஸ்வர்யா மேனன்தான் கதாநாயகி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x