

மணிகண்டன் இயக்கத்தில் உருவான ‘குற்றமே தண்டனை’ உட்படப் பல தரமான படங்களுக்கு கதை, வசனம் எழுதிக் கவனம் பெற்றவர் ஆனந்த் அண்ணாமலை. மாயவரம் பிக்சர்ஸ் என்கிற பெயரில் புதிய பட நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். அதன் முதல் தயாரிப்பாக உருவாகிறது ‘காகங்கள்’ திரைப்படம். ஆனந்த அண்ணாமலை எழுதி, இயக்கித் தயாரிக்கும் இப்படத்தில், கிஷோர், லிஜோமோள் ஜோஸ், விதார்த், குரு சோமசுந்தரம், யோகி பாபு, இளவரசு உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
திரைக்கு வரும் ஓடிடி சினிமா!
‘கொட்டேஷன் கேங்க்’ என்கிற தலைப்பில் ஓடிடிக்காக உருவான படத்தை திரையரங்க வெளியீட்டுக்குக் கொண்டு வருகிறார்கள். படத்தை எழுதி, இயக்கியிருக்கும் விவேக் கே. கண்ணன் படம் பற்றி கூறும்போது, “பல மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ஜாக்கி ஷெராப், பிரியா மணி, சாரா அர்ஜுன், சன்னி லியோன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஓடிடிக்கான படமாகதான் தொடங்கினோம். படத்தை எடுத்து முடித்த பிறகு இது திரையரங்கில் கொண்டாடக்கூடிய படம் என்று பார்த்த அனைவரும் குறிப்பிட்டார்கள். அதனால் வெளியீட்டுக்கான வேலைகளில் இறங்கிவிட்டோம். இது பணத்துக்காகக் கொலை செய்யும் கொலைகாரர்கள் பற்றிய கதை. முழுவதும் உண்மைச் சம்பவங்களில் இருந்து கதையை அமைத்திருக்கிறோம்” என்றார்.
எஸ்.பி.சினிமாஸ்வாங்கிய படம்!
தேசிய விருது பெற்ற ‘பாரம்’, அசோக் செல்வன் நடித்திருந்த ‘வேழம்’ ஆகிய படங்களை வாங்கி விநியோகம் செய்திருந்ததுடன், அருள்நிதி நடித்திருந்த ‘கே13’, மாதவன் நடித்திருந்த ‘மாறா’, ஹரிஷ் கல்யாண் நடித்திருந்த ‘ஓ மணப்பெண்ணே’ போன்ற தனித்துவமான கதைகளைக் கொண்ட படங்களைத் தயாரித்தும் வெளியிட்டுவரும் பட நிறுவனம் எஸ்.பி.சினிமாஸ்.
இந்நிறுவனம் தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘பாயும் ஒளி நீ எனக்கு’ என்கிற புதிய படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கிறார்கள். படத்தின் கதை, அதன் கருப்பொருள் காரணமாக இதை கன்னடம், தெலுங்கிலும் வெளியிடவிருக்கிறார்கள். நியூயார்க் ஃபிலிம் அகாடமியில் படித்த கார்த்திக் அத்வைத் இப்படத்தை எழுதி, இயக்கியிருகிறார்.