

தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘கர்ணன்’ படத்தில் சாதி அகந்தை மிகுந்த காவல் அதிகாரியாக, வில்லன் ரோலில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் ஒளிப்பதிவாளர், நடிகர் நட்டி நடராஜ். அவர் மீண்டும் ஒரு கெட்ட காவல் அதிகாரியாக நடித்துள்ள படம் ‘குருமூர்த்தி’. ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில், கே.பி.தனசேகரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகியாக பூனம் பஜ்வா நடித்துள்ளார். இவர்களுடன் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடராஜ்: “இது ஒரே நாளில் நடக்கும் கதை. அதற்குள் இவ்வளவு சம்பவங்களா என்று ரசிகர்கள் வியப்பார்கள்! தவறான வழியில் வரும் பணமும் அதன் பயணமும்தான் இந்தப் படத்தின் திரைக்கதையை தெறிக்கவிட்டிருக்கிறது” என்றார்.
சமந்தாவின் பார்வை!
வாடகைத் தாயாக இருந்து பின்னர் வஞ்சிக்கப்பட்ட நிலையில் கொதித்தெழும் ஒரு படித்த பெண்ணின் கதைதான் சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘யசோதா’. இதில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ள சமந்தாவிடம் ‘வாடகைத்தாய் விஷயம் சமீபத்தில் அதிகம் பேசப்பட்டது. அது குறித்து உங்களுடைய கருத்து என்ன?’ எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “அது பற்றி ஒரு வலுவான கருத்து எனக்குக் கிடையாது. நான் புரிந்துவைத்துள்ள வரைக்கும், கருவைச் சுமக்க உடல்நலம் அனுமதிக்காத தாயும் அவளது உடல்நலத்தைக் காக்க விரும்புகிற தந்தையும் பெற்றோர் ஆக விரும்பும்போது அது ஒரு தீர்வு, நம்பிக்கை”.