Last Updated : 25 Oct, 2022 04:59 PM

1  

Published : 25 Oct 2022 04:59 PM
Last Updated : 25 Oct 2022 04:59 PM

காப்புரிமையை மீறி இயற்றப்பட்டதா காந்தாரா படப் பாடல்? - கேரள இசைக்குழு குற்றச்சாட்டு

சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற காந்தாரா படப்பாடல் ‘வராஹ ரூபம்’ காப்புரிமையை மீறி இயற்றப்பட்டுள்ளதாக கேரளத்தைச் சேர்ந்த இசைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

முதலில் கன்னட மொழியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த காந்தாரா திரைப்படம், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுத் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் இடம் பெறும் ‘வராஹ ரூபம்’ பாடல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதத்துக்காக நல்ல விமர்சனங்களை பெற்றுவருகிறது. இந்நிலையில், கேரளத்தைச் சேர்ந்த ‘தைக்குடம் பிரிட்ஜ்’ என்கிற இசைக்குழு தங்களது ‘நவரசம்’ பாடலின் காப்பிதான் ‘வராஹ ரூபம்’ என வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளது.

2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ‘தைக்குடம் பிரிட்ஜ்’ இசைக்குழு, மலையாள மொழியில் தனிப்பாடல்களை இயற்றிவருகிறது. ‘96’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவும் அவருடைய நண்பர்களும் இக்குழுவை நடத்திவருகின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டு ‘நவரசம்’ என்கிற பாடலை இக்குழு இயற்றி வெளியிட்டது. யூடியூபில் வெளியான இப்பாடலை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். கேரள நடன முறைகளில் ஒன்றான ‘தைய்யம்’ நடனத்தைப் பற்றிய பாடலாக ‘நவரசம்’ காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இப்பாடலின் காப்பிதான் ‘வராஹ ரூபம்’ எனக் குற்றம்சாட்டியிருக்கும் தைக்குடம் பிரிட்ஜ் இசைக்குழு இன்ஸ்டாகிராமில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அதில், “வராஹ ரூபம் பாடல் காப்புரிமைச் சட்டத்தை மீறி இயற்றப்பட்டிருக்கிறது. பாடல் திருட்டுக்கும் பாடலைத் தழுவி இயற்றப்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இப்பாடல் நவரசம் பாடலின் காப்பி என்பதால் சட்டரீதியாக காந்தாரா படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். எங்களது பாடலின் காப்புரிமையைப் பாதுகாக்க ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் இப்பதிவு வெளியான சில நிமிடங்களில் ரசிகர்கள் பலர் தங்களது கருத்துகளைப் பதிவுசெய்துள்ளனர். தைக்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவுக்கு ஆதரவாகச் சிலரும் பழங்காலத்து மக்களின் மண்ணுக்குச் சொந்தமான இசை பொதுவானது; இடத்திற்கேற்ப மாற்றி இயற்றிக் கொண்டாடுவதில் தவறில்லை எனவும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். எனினும், இது குறித்து காந்தாரா படத் தயாரிப்பாளர் தரப்பிலும் இயக்குநர் ரிஷப் ஷெட்டி, இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் தரப்பிலும் இருந்து இன்னும் எந்தப் பதிலும் வரவில்லை. யூடியூபில் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ள ‘வராஹ ரூபம்’ பாடலின் அசல் எது என்பது சமூக வலைத்தளத்தில் விவாதமாக மாறியிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x