

புனே திரைப்படக் கல்லூரியின் ஒளிப்பதிவு துறையில் என் மூன்று வருட படிப்பை 1969இல் முடித்துக் கொண்டேன். எவரிடமும் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்க்காமலே 1971இல் ஒளிப்பதிவாளராக பணியாற்றத் தொடங்குகிறேன். பணியாற்றிய முதல் படம் ‘நெல்லு’. இது மலையாளப் படம். இதன் இயக்குநர் ராமு கரியத். முதல் படத்திலேயே கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எனக்குக் கிடைத்தது. 71 முதல் 75 வரை ஐந்து வருடங்கள் அங்கே ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினேன்.
பெரும்பாலனவை மலையாளப் படங்கள். இந்த ஐந்து வருடங்ளுக்குள் மூன்று தடவைகள் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எனக்கு தரப்பட்டது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆந்திர மாநில அரசின் விருதும் இரண்டு தடவைகள் என்னை வந்தடைந்தது. ஐந்து வருடங்களில் 21 படங்ளுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவிட்டு 1976இல் எனது இயக்கத்தில் வந்த முதல் படமான ‘கோகிலா’வைத் தொடங்கினேன். ‘கோகிலா’வின் கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம், ஒளிப்பதிவு, படத் தொகுப்பு ஆகியவற்றை நானே செய்தேன். ‘கோகிலா’ கன்னட மொழிப் படம். கமல்ஹாசன், ஷோபா, ரோஜா ரமணி ஆகியோர் இதில் நடித்திருந்தனர். பிற்காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாகிய மோகன் என்கிற கன்னட இளைஞரை இதில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தினேன். அப்பொழுது மோகன் பெங்களூரு வங்கி ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
மகியைச் சந்தித்தேன்..
இந்தப் படத்துக்கு இசையைத் தந்தவர், இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவரான சலீல் செளத்ரி. ‘கோகிலா’ படத்தின் மூலம் சிறந்த திரைக்கதையாளருக்கான கர்நாடக அரசின் விருதும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதும் எனக்குக் கிடைத்தன. ‘கோகிலா’ கன்னட மொழியிலேயே சென்னையில் 150 நாள் ஓடிச் சாதனை படைத்தது. கோகிலாவைத் தொடர்ந்து நான் ஒரு தமிழ்ப் படம் செய்ய விரும்பினேன். எனது இயக்கத்தில் வரும் முதல் தமிழ்ப் படத்தில் எனது பால்யத்தை பதிவு பண்ணுவதென்று முடிவு செய்தேன். என் நெஞ்சில் பசுமையாக இருந்த ஞாபகங்கள் என்பதால் எனது முதல் தமிழ் படத்துக்கு ‘அழியாத கோலங்கள்’என்று பெயர் வைத்து, படத்துக்கான தொடக்க வேலைகளிலும் இறங்கினேன். அந்த சமயத்தில்தான் மகேந்திரன் என்கிற இளைஞர் என்னை அணுகி, அவர் இயக்க இருக்கும் அவரது முதல் படத்துக்கு நான் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று என்னைக் கேட்டுக்கொண்டார். அந்தப் படத்தை நான் ஒத்துகொள்ளவேண்டும் என்று மீண்டும் வறுபுறுத்தி என்னைக் கேட்டார். அந்தப் படத்தை நான் ஒத்துக்கொள்ளவேண்டும் என்று எனது நண்பர் கமலும் விரும்பினார். கல்கி வார இதழில் வெளிவந்த உமா சந்திரனின் ‘முள்ளும் மலரும்’ என்கிற நாவலைத் தான் மகேந்திரன் படமாக்க விரும்புவதாகச் சொன்னார்.
அந்த நாவலை கல்கியில் வெளியானபோதே நான் படித்திருந்தேன். அண்ணன் தங்கை உறவை உணர்வு பூர்வமாகச் சொன்ன நல்ல நாவல். இந்தக் கதையில் வரும் அண்ணனாக நண்பர் ரஜினிகாந்தும், அவருடைய தங்கையாக எனது ஷோபாவும் நடிப்பதென்று முடிவானது.
‘கோகிலா’வைத் தொடர்ந்து நான் எடுக்க இருந்த எனது முதல் தமிழ் படத்திலும் ஷோபா இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அந்தப் படம் பதின்வயதுகளின் முற்பகுதியில் இருக்கும் மூன்று விடலைப் பையன்களைப் பற்றிய படம். அந்த மூன்று விடலைகளும்தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். ஷோபாவுக்கு ‘அழியாத கோலங்கள்’ படத்தில் ஸ்கூல் டீச்சராக ஒரு சிறிய ரோல்தான் வைத்திருந்தேன். ஆனால் ‘முள்ளும் மலரும்’ படத்தில் அவருக்கு முக்கியமான ரோல். அதுவும் ரஜினிகாந்த் என்கிற வளர்ந்துவிட்ட நடிகருடன். எனது ஒளிப்பதிவில் ரஜினியுடைய தங்கையாக அவர் தமிழில் அறிமுகமாவதே நல்லது என்று எனக்குப் பட்டது.
மகேந்திரன் எனக்கு மகி ஆனார்
எனவே எனது ‘அழியாத கோலங்கள்’ படத்தைத் தள்ளிப் போடுகிறேன். மகேந்திரன் இயக்கத்திலான ‘முள்ளும் மலரும்’ படத்தில் முழுமையாக ஈடுபடுகிறேன். மகேந்திரனுக்கு அது முதல் படம். வசனகர்த்தாவான, திரைக்கதை ஆசிரியராக அவர் அதற்குமுன் உதவி இயக்குநராகப் பணியாற்றியோ அல்லது ஒரு திரைப்படப் பள்ளியில் பயின்றோ திரைப்பட இயக்கத்தைக் கற்றவரல்ல. எனவே அவரது முதல் படத்தின் ஒளிப்பதிவாளர் என்ற வகையில் எனது பொறுப்பு கூடியது.
ஒரு படத்தின் ஒளிப்பதிவாளர் என்ற எல்லைக்குள் இருந்துகொண்டே முள்ளும் மலரும் படத்தின் திரைக்கதை அமைப்பிலும் உரையாடலிலும் திரைப்பட இயக்கத்துக்கு உட்பட்ட லென்சிங், ஷாட் டிவிஷன்ஸ், கேமராக் கோணங்கள் தேர்வுசெய்வது, நடிகர்களைக் கதாபத்திரங்களாக மாற்றுவது போன்ற அனைத்து பணிகளிலும் நான் என்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டேன். என்றாலும் மகேந்திரன் காட்சிமொழியின் உன்னதம் அறிந்தவராகவும் காட்சிக் கற்பனை மிகுந்தவராகவும் படப்பிடிப்பு முழுவதும் என்னை ஆச்சர்யப்படுத்தினார். படப்பிடிப்பின் பின் படத்தொகுப்பிலும் நான் அவர் கூடவே இருந்தேன்.
அந்தப் படத்தில் எனது பங்கேற்புகள் அனைத்துமே மகேந்திரனின் விருப்பத்தின்படி நடந்தவைதான். படம் முடியும் தருவாயில் மகேந்திரனை நான் மகி என்று அழைக்கும் அளவுக்கு நண்பர்கள் ஆகினோம். மகி ஒரு நல்ல எழுத்தாளர். ஒரு நல்ல, தரமான ரசிகர். அவருக்கும் எனக்குமான உறவு அமோகமாக இருந்தது. நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இயங்கியதை நீங்கள் ‘முள்ளும் மலரும்’ படத்தில் உணர்ந்திருப்பீர்கள்.
பாடல் வழியே மாண்டேஜ்!
‘முள்ளும் மலரும்’ படம் 1978, ஆகஸ்ட்15ஆம் தேதி வெளியாகிறது. முதல் இரண்டு வாரங்கள் சுமார் என்ற நிலையில்தான் அதன் வசூல் இருந்தது. மூன்றாவது வாரத்தில் இருந்து வரலாறு காணாத வெற்றி. எனது முதல் தமிழ்ப் படமான ‘அழியாத கோலங்கள்’ 79இல் தான் வெளியானது. ‘முள்ளும் மலரும்’ படத்தில் ஷோபாவுக்கும் சரத்பாபுவுக்குமான காதல் உண்ர்வுகளை மகேந்திரன் ஒரு பாடல் மூலம் காண்பிக்கலாம் என்று முடிவு பண்ணியிருந்தார். அதாவது கதையின் ஒரு பகுதியை பாடலின் வழியாகச் சித்தரிப்பது. ‘செந்தாழம் பூவில்’ என்கிற அந்தப் பாடலை இளையராஜா அற்புதமாக அமைத்துக்கொடுத்திருந்தார். பாடியது யேசுதாஸ். இன்று வரை இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்களின் வரிசையில் அந்தப் பாடல் இடம்பெற்று வருகிறது.
இந்தப் பாடலை சரத்பாபு பாடுவதாக எடுப்பது என்றுதான் முடிவுபண்ணப்பட்டிருந்தது. இரண்டொரு வரிகளை மட்டும் சரத்பாபு பாடுவதாக வைத்துவிட்டு மிகுதிப் பாடலை நான் எனது கோகிலா படத்தில் தொடங்கியிருந்த மாண்டாஜ் உத்தியில் எடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று எனக்குப் பட்டது. இதை மகேந்திரனிடம் சொன்னேன் அவரும் ஒத்துக்கொண்டார். ஆனால் நடிகர் சரத்பாபுவுக்குதான் தன்னுடைய வாய் அசைவில் மொத்தப் பாடலும் இல்லையே என்பதில் வருத்தம் இருந்ததாக ஞாபகம். 1976இல் எனது முதல் படமான கோகிலாவில் நான் தொடங்கிய இந்த லவ் மொண்டாஜ் என்கிற உத்தியை இன்றய இளம் இயக்குநர்கள் பலர் அழகாகத் தொடர்கிறார்கள் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
கதையின் நகர்வு, கதாபாத்திரங்களின் தோற்றம், அவர்களின் உரையாடல், செயல்பாடுகள், படத்தின் ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு போன்ற அத்தனை விஷயங்களிலும் யதார்த்தம், இயல்புதன்மை என்று பார்த்து பார்த்துச் செய்துவிட்டு பாடல் காட்சிகளில் இந்த யதார்த்தத்தை, இந்த இயல்புத் தன்மையை நாம் பண்டு முதல் கோட்டை விட்டே வந்திருக்கிறோம். தாலாட்டையும் ஒப்பாரியையும் மேடைப் பாடலையும் இன்னும் இரண்டொரு பாடல் சந்தர்ப்பங்களையும் தவிர பெரும்பாலான பாடல் காட்சிகள் இயல்பு தன்மைக்கு புறம்பானவை. அபத்தமானவை என்பது நமக்குத் தெரியும்.
நுட்பமான இயக்குநர்
‘முள்ளும் மலரும்’ படம் மகேந்திரனை மிக நுட்பமான இயக்குநர் என்று அடையாளம் காட்டியது. சினிமா இயக்கம் என்ற ராஜபாட்டையில் மகேந்திரன் எடுத்துவைத்த முதல் அடியின்போது அவருடன் நான் இருந்தேன் என்பதில் எனக்கு சந்தோஷம் உண்டு. எனது ஷோபா, ‘படாபட்’ ஜெயலட்சுமி, தயாரிப்பாளர் வேணு செட்டியார், ஆர்ட் டைரக்டர் ராமசாமி என ‘முள்ளும் மலரும்’ படத்தில் பணியாற்றிய பலர் இன்று இல்லை. எங்களுக்குப் பின்னும் தமிழ் சினிமாவில் ‘முள்ளும் மலரும்’ தொடரும். உன்னதமான படைப்புகளுக்கு அந்த சக்தி உண்டு. எனது படைப்புகள் மூலம் நானும், மகேந்திரனின் படைப்புகள் மூலம் மகேந்திரனும் இளையராஜாவின் இசை மூலம் இளையராஜாவும் எஙகள் மரணத்தின் பின்பும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருப்போம். மரணிக்கப் போவது எஙகள் உடல்கள். நாங்களல்ல!
தொகுப்பு: ஆர்.சி.ஜெயந்தன்
- கடந்த 2013, ஏப்ரல் 21ஆம் தேதி பாலுமகேந்திரா எழுதிய நினைவுப் பதிவின் ஒரு பகுதி. இன்று இயக்குநர் மகேந்திரனின் 83-வது பிறந்த நாள்.